2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மாணவ சமுதாயத்தைக் காக்க வேண்டும்

Editorial   / 2022 செப்டெம்பர் 26 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவ சமுதாயத்தைக் காக்க வேண்டியது பொறுப்பு அனைவருக்கும் உண்டு

 

யாழ்ப்பாணத்தில், க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் நான்கு மாணவர்கள், தனியார் கல்வி நிலையத்துக்கு செல்வதாகக்கூறி, நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக மதுபானமும் போதைப்பொருளும் பயன்படுத்தியதை அடுத்து, கைது செய்யப்பட்டு பின்னர், எச்சரிக்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்கள்.

 மகிழ்ச்சியின் போதோ, துன்பத்தின் போதோ ‘பார்ட்டி’ என்ற பெயரில் போதையை ஏற்றிக் கொள்ளும் ஒரு ‘கீழ்மட்டக் கலாசாரம்’ நம்மத்தியில் வேகமாகப் பரவிவருகின்றமை கவலையளிப்பதாக உள்ளது.
கடந்த மூன்று மாதத்தில் மட்டும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 11 பேர் உயிரிழந்தும் 140 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் உள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றோர், இந்த எண்ணிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.

அண்மையில், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பது தொடர்பான கலந்துரையாடலில், போதைப்பொருள் பாவனை, விநியோகம் போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டிய பொறுப்புமிக்க திணைக்களங்கள், அசமந்தமாக இருப்பது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.

போர் நிறைவுற்ற 2009 ஆண்டுக்கு பின்னரே, இவ்வாறு யாழ். குடாநாட்டில் போதைப்பொருள் பாவனை அறியப்பட்டதாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக, ‘இனவிடுதலை சிந்தனையை மழுங்கடிக்கும் நோக்கத்திலேயே, இளைஞர்கள், மாணவர்களை மையப்படுத்தி, போதைப்பொருள் உலாவவிடப்பட்டு உள்ளதாக சமூகவியலாளர்களால் கூறுகின்றார்கள். இதில், உண்மை இல்லாமலில்லை; ஏனெனில், மூன்று பொதுமக்களுக்கு ஒரு படை வீரன் என்ற வீதத்தில், மிக அடர்த்தியாக படையினர் நிலைகொண்டிருக்கிறார்கள். எனவே, பொலிஸ், முப்படைகளின் ஆதரவு இன்றி, போதைப்பொருள் விநியோகத்தை மேற்கொள்ள முடியாது.

இன்றைய வாழ்க்கைச் செலவு அகரிப்பை ஈடுசெய்யும் பொருட்டு, பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்லும் நிலையில், பிள்ளைகள் மீதான அவர்களின் கவனம் வெகுவாகக் குறைகின்றது. தன்பிள்ளையை தன்னால் சரியாகக் கவனிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வால் தூண்டப்படும் இவர்கள், பிள்ளைகளைக் கண்டிக்காமல் அவர்கள் கேட்கும் போதெல்லாம், காரணம் கேட்காமல் பணம் கொடுத்து விடுகிறார்கள். அதிக பணம் கையில் புளங்குவதால், தம்மிஷ்டப்படி மாணவர்கள் வாழத் தலைப்படுகிறார்கள். பலர் வழிதவறி, தீய வழிகளில் சென்றுவிடுகிறார்கள்.  

பாடசாலைகளிலும் வீடுகளிலும் மாணவர்களின் நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, ஆசிரியர்களும் பெற்றோரும் துல்லியமாகக் கூர்ந்து கவனிக்க வேண்டும். நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்களின் மதிப்பெண் திடீரென குறைதல், உடல்நிலையில் மாற்றம், செயற்பாடுகளிலும் உரையாடல்களிலும் மாற்றம்,  பெறும் மதிப்பெண்களில் மாற்றம்,  ஏதேனும் சாட்டுச்சொல்லி அடிக்கடி பணம் கேட்கின்றார்களா, சேரும் நண்பர்களின் நடவடிக்கைகள் என்பவை குறித்தும் பெற்றோரும் ஆசிரியர்களும் உடனிருக்கும் நண்பர்களும் அக்கறை செலுத்த வேண்டும்.

பிள்ளைகளின் போதைப்பொருள் பழக்கத்துக்கு பெற்றோர் அடுத்தவரைக் குற்றம் சொல்வதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. பிள்ளைகள் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகின்றார்கள் என்றால், அதற்கான முழுப்பொறுப்பும் பெற்றோரையும் ஆசிரியர்களையுமே சாரும். அனைவருடைய ஒத்துழைப்புடனும் மாணவ சமுதாயத்தைக் காக்க வேண்டியது மிகமிக அவசியமானதும் முக்கியமானதுமான பொறுப்பு அனைவருக்கும் உண்டு. (26.09.2022)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X