2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வதைக்கும் ‘சைபர்’ பகடிவதைகள்

Editorial   / 2022 ஒக்டோபர் 19 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழகங்களில் வதைக்கும் ‘சைபர்’ பகடிவதைகள்

பெரும்பாலான பாலியல்  துன்புறுத்தல்கள், நெருங்கிய உறவினர்களால், அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்களால் இடம்பெறுவது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது. ஆகையால், கைக்கெட்டிய தூரத்தில் இருப்பவர்கள், உறவினர்களென உரிமை, சம்பந்தம் பேசுவோரிடம் மிகக் கவனமாகவும் அவதானமாகவும் இருக்கவேண்டும்.
ஒருவரின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத பலரும் அருகில் இருந்துகொண்டே குழியைப்பறித்து தடுத்துவிடுவோர்.

தடைகள் பலவற்றை தாண்டி, பல்கலைக்கழகத்துக்குள் நுழையும் மாணவர்களில் பலரது கனவு, நூலறுந்த பட்டமாகிவிடுகின்றது. சிரேஷ்ட மாணவர்கள் எனத் தங்களைக் கூறிக்கொள்ளும் ‘சிரேஷ்டத்துவம்’ இல்லாத மாணவர்களில் சிலரே, பகடிவதை என்னும் போர்வைக்குள் நின்று, புதிய மாணவர்களின் கனவைக் கலைத்துவிடுகின்றனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இடம்பெறும் பகடிவதை காரணமாக, 2000ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 169 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளனர். இதனை ஒரு செய்தியாக மட்டுமே பார்த்துவிடக்கூடாது. எதிர்கால கல்விமான்களை இழந்து நிற்கின்றோம். ஏனைய பல்கலைக்கழங்களின் பீடங்களில் இருந்து விலகியோரை கணக்கில் எடுத்தால், இந்த எண்ணிக்கை பல மடங்குகளால் அதிகரிக்கக்கூடும்.

இதேவேளை, பாலியல் சுரண்டல்கள், சீண்டல், சேஷ்டை போன்றவை காரணமாக ஒன்பது ஆயிரத்துக்கும் அதிகமான மாணவிகள், தங்களுடைய பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்திக்கொண்டுள்ளனர்.
பகிடிவதையால் பல்கலைக்கழக மாணவர்களும் மாணவிகளும் மரணித்த சம்பவங்கள் ஏராளம். ஆகையால், பகடிவதைக்கு தூபமிடுவோர் முதல், பகடிவதையில் ஈடுபடுவோர் வரையிலும் அனைவரையும் கைது செய்து, சட்டத்தின் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன் ஓரிரண்டு ஆண்டுகளுக்கேனும் பல்கலைக்கழகத்துக்குள் நுழையவிடாத வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளவேண்டும்.

இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் ‘சைபர் பகடிவதை’ முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அரசியல் பின்புலத்துடன் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. உடல், உள ரீதியிலான  துன்புறுத்தலுக்கு மேலாக, ‘சைபர் பகடிவதை’ சென்றுவிட்டது.

ஆகையால், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிலையங்கள் உள்ளிட்டவற்றில், எந்த வகையிலான பகடிவதைகளையும் முற்றாக இல்லாமல் செய்யும் வகையில் சட்டம் இயற்றவேண்டும். அச்சட்டத்தை அச்சொட்டாக நடைமுறைப்படுத்த வேண்டும். குற்றமிழைப்போருக்கு வழங்கப்படும் தண்டனை, ஏனையோருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

புதிய வரவுகளை வரவேற்பவர்களாக பழைய மாணவர்கள் இருப்பார்களாயின் இருதரப்பினருக்கும் இடையில் அன்னியோன்னியம் ஏற்படும். பகடிவதைகளின் ஊடாகதான், அறிமுகம் செய்துகொள்ள வேண்டுமாயின், அவ்வாறானதோர் அறிமுகமே தேவையில்லை.

ஒவ்வொரு துறைகளுக்கும் பின்தங்கிய பிரதேசங்களில் இருந்து செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. உயர்தரத்தில் திறமையான சித்திகளைப் பெற்று, பட்டங்களைப் பெறவேண்டும் எனும் உத்வேகத்துடன் பல்கலைக்கழகங்களுக்குள் கால்களை வைக்கும் மாணவர்களின் கனவை கலைத்துவிடாதீர்கள். 19.10.2022


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .