2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஓடிப்போன இளம்ஜோடிக்கு நூதன தண்டனை

Editorial   / 2021 செப்டெம்பர் 23 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

போபால் :

கிராமத்திலிருந்து ஓடிப்போய், ஒருமாதம் கழித்து கிராமத்துக்கு திரும்பிய இளம் ஜோடிக்கும், அந்த ஜோடிக்கு உதவியக் குற்றச்சாட்டின் கீழ், 13 வயதான சிறுமிக்கும் நூதனமான தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம்  மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் குந்தி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு நூதனமான தண்டனையை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் ஐவருக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். அதில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரை தேடி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில், மேலும் தெரியவருவதாவது,

 
  குந்தி கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கடந்த ஜூலை மாதம் காணாமல் போனார். அதுதொடர்பாக அவருடைய பெற்றோர் பொலிஸில் புகார் கொடுத்தனர்.

அவர் அதே கிராமத்தை சேர்ந்த 21 வயது வாலிபருடன் ஓடிப்போனது தெரிய வந்தது. அவர்கள் ஓடிப்போக 13 வயது சிறுமி உதவியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், கிராம மக்கள் ஆத்திரத்துடன் அவர்களின் வருகைக்காக காத்திருந்தனர். ஓடிப்போன இருவரும் குஜராத் மாநிலத்துக்கு சென்று வசித்தனர். இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்பு இருவரும் தங்கள் கிராமத்துக்கு திரும்பினர்.

அவர்களை பிடித்த கிராம மக்கள், ஓடிப்போனதற்கு தண்டனையாக, நடுரோட்டில் அவர்களது கழுத்தில் மோட்டார் சைக்கிள் டயரை போட்டு, அவர்களை ஆட வைத்தனர். அவர்களும் வேறுவழியின்றி கழுத்தில் டயருடன் நடனம் ஆடினர். அவர்களுக்கு உதவிய 13 வயது சிறுமிக்கும் அதே தண்டனை அளிக்கப்பட்டது.

அப்போது, ஒரு நபர் அவர்களை பிரம்பால் அடித்தபடி இருந்தார். இந்த காட்சியை மற்றொருவர் வீடியோ எடுத்தார். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்தே, அந்த ஐவருக்கு எதிராகவும் பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .