2026 மே 07, வியாழக்கிழமை

ஈரானில் பயங்கர தீ: 11 பேர் உயிரிழப்பு; 41 பேர் படுகாயம்

Editorial   / 2026 மே 07 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஈரான் தலைநகர் தெஹ்ரான் மாகாணத்திற்கு உட்பட்ட அந்திஷே நகரில் உள்ள ‘அர்காவன்’ என்ற பல அடுக்குமாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த வணிக வளாகத்தில் நூற்றுக்கணக்கான கடைகளும், அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், வளாகத்தின் ஒரு பகுதியில் திடீரெனத் தீப்பிடித்தது.

அடுத்த சில நிமிடங்களில் தீ வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியதால், வணிக வளாகம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடினர்.

தீயின் கோரப்பிடியில் சிக்கியும், கரும்புகையினால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகவும் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 41 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து ஈரான் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த மூன்று வாரங்களாகப் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனவே, இந்தத் தீ விபத்துக்கும் தற்போதைய போர் பதற்ற சூழலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .