ஐரோப்பிய நாடான போர்த்துக்கல்லின் தலைநகர் லிஸ்பனில் குளோரியா புனிகுலர் கேபிள் கார் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 18 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் 5 பேர் நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மேடான தண்டவாளப் பகுதியில் கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, கேபிள் கார் கட்டடம் ஒன்றின் மீது மோதியததாகச் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த கேபிள் காரில் சுமார் 40 பேர் பயணம் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
கேபிள் கார் செலுத்தும் கம்பி (cable) வலுவிழந்து போனதால் விபத்து நிகழ்ந்ததாக லிஸ்பன் தீயணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் காரில் இருந்தவர்கள், அருகிலிருந்த பாதசாரிகள் ஆகியோர் அடங்குவர் என்றும் நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
1885ஆம் ஆண்டு திறக்கப்பட்ட சம்பந்தப்பட்ட ‘ஃபனிக்கியூலர்’ கேபிள் கார், லிஸ்பனின் மத்தியப் பகுதியையும் பைரோ அல்டோ (Bairro Alto) பகுதியையும் இணைக்கிறது.
பழுதுபார்ப்புப் பணிகள் தொடர்பான எல்லா விதிமுறைகளையும் தாங்கள் பின்பற்றிச் செயல்பட்டதாக லிஸ்பன் பொதுப் போக்குவரத்து நிறுவனமான கேரிஸ் தெரிவித்துள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து போர்த்துக்கல் அரசு தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளது.