2026 மே 21, வியாழக்கிழமை

பனிப்பிரதேசக் காடுகளில் புதிய வைரஸ் வேட்டையில் விஞ்ஞானிகள்

Mayu   / 2026 மே 21 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகத் தெற்கே அமைந்துள்ள பனி படர்ந்த அர்ஜென்டினாவின் 'உஷுவாயா' (Ushuaia) நகரக் காடுகளில், உலக நாடுகளை அச்சுறுத்தும் 'ஹன்டா வைரஸ்' (Hantavirus) தொற்றின் ஆரம்பப் புள்ளியைக் கண்டறியும் நோக்கில் விஞ்ஞானிகள் தீவிர கள ஆய்வில் இறங்கியுள்ளனர். 

அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற 'மல்பிரான் இன்ஸ்டிடியூட்' (Malbrán Institute) விஞ்ஞானிகள், முகமூடி மற்றும் கையுறைகளுடன் இக்காடுகளில் 150-க்கும் மேற்பட்ட கூண்டுகளை அமைத்து எலிகளைப் பிடிக்கும் விசேட ஆபரேஷனை முன்னெடுத்துள்ளனர்.

சமீபத்தில் 'எம்வி ஹோண்டியஸ்' (MV Hondius) என்ற சொகுசு கப்பலில் பயணம் செய்த பயணிகளிடையே திடீரென இந்த ஹன்டா வைரஸ் தொற்று பரவியது. இதில் துரதிர்ஷ்டவசமாக மூன்று பேர் உயிரிழந்ததுடன், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவமே உலக சுகாதாரத் துறையினரை உஷுவாயா நோக்கித் திருப்பியுள்ளது.

பொதுவாக ஹன்டா வைரஸ் என்பது எலிகளின் எச்சில், மலம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றின் மூலம் காற்றில் பரவி மனிதர்களைத் தாக்கக்கூடிய ஒரு கொடிய தொற்றாகும். 

இதில் விஞ்ஞானிகளைப் பெரிதும் அதிர வைத்துள்ள விடயம் என்னவென்றால், உஷுவாயா பகுதி மிகவும் குளிர்ந்த பனிப்பிரதேசமாகும். இந்த வைரஸைப் பரப்பக்கூடிய 'கொலிலார்கோ' (Colilargo) என்ற குறிப்பிட்ட எலி இனம் இதற்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்ததே இல்லை.

தற்போது உலகை அச்சுறுத்தி வரும் புவி வெப்பமயமாதல் (Global Warming) மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக, இந்த எலிகள் தங்களது எல்லையை விரிவுபடுத்தி, இந்த குளிர்ந்த பிரதேசத்திற்கும் இடம்பெயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

விஞ்ஞானிகளின் இந்தச் சந்தேகத்திற்குப் பலமானதொரு காரணமும் கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்ட சொகுசு கப்பலில் பயணித்த, பறவைகளை உற்றுநோக்கும் பழக்கமுடைய நெதர்லாந்து தம்பதியினர், கப்பலில் ஏறுவதற்கு முன்பாக உஷுவாயா காடுகளில் நடைப்பயிற்சி (Trekking) மேற்கொண்டுள்ளனர். 

அப்போது அங்குள்ள பாதிக்கப்பட்ட எலியின் மூலமாகவே அவர்களுக்கு இந்தத் தொற்று பரவியிருக்கலாம் என்று அந்நாட்டு அரசு சந்தேகிக்கிறது.

தற்போது உஷுவாயா காடுகளில் பிடிபட்ட எலிகளின் இரத்த மாதிரிகளைச் சேகரித்து, தற்காலிக ஆய்வகங்களில் விஞ்ஞானிகள் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இதற்கான முழுமையான அறிக்கை வெளிவர இன்னும் ஒரு மாத காலம் ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்த எலிகளின் உடலில் ஹன்டா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால், பருவநிலை மாற்றத்தால் இதுவரை நோய்த்தொற்றுகளே இல்லாத பனிப்பிரதேசங்களுக்கும் புதிய கொடிய நோய்கள் பரவத் தொடங்கியுள்ளன என்பதற்கு இதுவே முதல் ஆபத்தான சான்றாக அமைந்துவிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X