2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வடக்கின் மாபெரும் போரில் சென்.ஜோன்ஸ் வெற்றி

George   / 2015 மார்ச் 08 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன், நா.நவரத்தினராசா

வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, 84 ஓட்டங்களால் வெற்றிபெற்று, தனது வெற்றி எண்ணிக்கையை 35 ஆக அதிகரித்தது.

இதுவரையில் நடைபெற்ற வடக்கின் மாபெரும் போர் போட்டிகளில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 34 போட்டிகளிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 27 போட்டிகளிலும் வெற்றிபெற்றன. 39 போட்டிகள் சமநிலையிலும், 7 போட்டிகளின் முடிவுகள் தெரியாத நிலையிலும், 1 போட்டி கைவிடப்பட்டும் இருந்தன. 

வடக்கின் மாபெரும் போர் கிரிக்கெட் போட்டியின் 109ஆவது கிரிக்கெட் போட்டி, கடந்த வியாழக்கிழமை (05) முதல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 3 நாட்களைக் கொண்டதாகவும் ஒவ்வொரு நாளும் 90 ஓவர்கள் வீசப்படவேண்டும் என்ற நியதிகளுடன் இந்தப் போட்டி நடைபெற்றது.  

நாணய சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அணித்தலைவர் பத்திநாதன் நிரோஜன் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய, முதலில் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, 90 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றபோது, தனது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. செபமாலைப்பிள்ளை ஜெனி பிளமிங் 107, சஜீந்திரன் கபில்ராஜ் 50, பரமானந்தம் துவாரகசீலன் 33, அருள்நந்தன் கானாமிர்தன் 33 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். 

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பாக, சிவராசா மதுசன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, முதல்நாள் ஆட்ட நேரமுடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றபோது, அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 

சிவபாலசுந்தரம் அலன்ராஜ் அணியை தூக்கி நிறுத்த போராடிய போதும் (41 ஓட்டங்கள்) அது பயனளிக்கவில்லை. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, 80.4 ஓவர்களில் 164 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் சிவபாலசுந்தரம் அலன்ராஜ் 41, சிறிஸ்கந்தராஜா கௌதமன் 41, சுரேஸ் கார்த்தீபன் 26 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். 

பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் அணி சார்பாக ரவீந்திரன் லோகதீஸ்வரன் 31 ஓவர்கள் பந்துவீசி 74 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுக்களையும், ஜெயக்குமார் கிசாந்துஜன் 8 ஓவர்கள் பந்துவீசி 5 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், துவாரகசீலன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.

136 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இனிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 25.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 103 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து மூன்றாவது இறுதியுமான நாள் ஆட்டம் சனிக்கிழமை (07) நடைபெற்ற போது, 30.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றபோது சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி தனது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

துடுப்பாட்டத்தில் ஜெயக்குமார் கிசாந்துஜன் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும், அருள்நந்தன் கானாமிர்தன் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.  

273 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கு, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சதாகரன் திரேசன் ஒருபக்கமாக நிலைத்து நின்று போராடினார். 

மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் ஆட்டமிழந்தமையால் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தோல்வியைத் தழுவியது. 86.1 ஓவர்களில் 188 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 
திரேசன் 276 பந்துகளை எதிர்கொண்டு 72 ஓட்டங்களுடன் இறுதிவரையில் ஆட்டமிழக்காதிருந்தார். இவர் களத்தில் 5

மணித்தியாலங்களும் 12 நிமிடங்களும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.  சுரேஸ் கார்த்தீபன் 35, சிறிஸ்கந்தராஜா கௌதமன் 26 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.  

பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் அணி சார்பாக அணித்தலைவர் சஜீந்திரன் கபில்ராஜ் 14.1 ஓவர்கள் பந்துவீசி 40 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களையும், ஜெயக்குமார் கிசாந்துஜன் 2 விக்கெடடுக்;களையும், பரமானந்தம் துவாரகசீலன், ரவீந்திரன் லோகதீஸ்வரன், தேவராஜா கஜீபன், வசந்தன் யதுசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். 

சிறந்த துடுப்பாட்ட வீரராக செபமாலைப்பிள்ளை ஜெனிபிளமிங் (சென்.ஜோன்ஸ்), சிறந்த பந்துவீச்சாளர் ஜெயக்குமார் கிசாந்துஜன் (சென்.ஜோன்ஸ்), சிறந்த களத்தடுப்பாளர் சிறிஸ்கந்தராஜா கௌதமன் (யாழ்.மத்தி), சகலதுறை வீரர் சதாகரன் திரேசன் (யாழ்.மத்தி), சிறந்த விக்கெட் காப்பாளர் சஜீந்திரன் கபில்ராஜ் (சென்.ஜோன்ஸ் - அணித்தலைவர்), ஆட்டநாயகன் செபமாலைப்பிள்ளை ஜெனிபிளமிங் (சென்.ஜோன்ஸ்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். 

கடந்த வருடம் விட்டுக்கொடுப்பின் அடிப்படையில் வெற்றிபெறப்பட்டமையால், மைதானத்தில் விளையாடியதன் மூலம் பெற்ற வெற்றியென்று பார்க்கையில் 1990 ஆம் ஆண்டு பெற்ற வெற்றியின் பின்னர், தற்போது தான் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .