2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

‘வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள இளம் வீரர்களுக்கு களம்’

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 27 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எஸ்.எம். நூர்தீன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள இளம் வீரர்கள் கால்பந்தாட்ட தேசிய, சர்வதேச போட்டிகளில் விளையாட களம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று, மட்டக்களப்பு கல்லடி ஈஸ்ட் லகூன் விடுதியில் நடைபெற்றபோதே மேற்படி கருத்தை உமர் வெளிப்படுத்தியிருந்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த உமர்,” இலங்கையில் கால்பந்தாட்டம் தற்போது புத்துயிரை பெற்றுள்ளது. கடந்த ஒருவருத்துக்கு முன்னர் கால்பந்தாட்ட தேசிய சம்மேளனத்தை நாங்கள் பொறுப்பேற்று கொவிட் தொற்று என்ற பாரிய சவாலுக்கு மத்தியிலும் கால் பந்தாட்டத்துறையை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றுள்ளோம்.

எமது தேசிய கால்பந்தாட்ட அணியை தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்காக மாலைதீவுகளுக்கு அனுப்பி அப்போட்டியில் இலங்கை கால் பந்தாட்ட அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. அதன் பின்னர் எமக்காக உருவாக்கப்பட்ட நான்கு நாடுகளைக் கொண்ட பிரதமர் வெற்றிக்கிண்ணத்துக்கான கால் பந்தாட்ட சர்வதேசத் தொடரை நாங்கள் நடாத்தினோம். அதன்மூலம் இலங்கையில் கால்பந்தாட்டம் புத்துணர்வை பெற்றுள்ளது.

அதன்பின்னர் இளம் வீரர்கள் கால்பந்தாட்டத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டு கால்பந்தாட்டத்தில் பங்குகொண்டுள்ளனர்.

இலங்கையில் முதல் தடவையாக மாகாண மட்டத்தில் கால்பந்தாட்டத் தொடரை நடாத்தி அதன் மூலம் சிறந்த மாகாண அணி மற்றும் இளம் வீரர்களையும் அடையாளம் கண்டுள்ளோம்.

தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 10 இளம் வீரர்கள் தேசிய சர்வதேச போட்டிகளில் பங்கு கொண்டுள்ளனர்.
கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கு நான் தலைவராக வந்ததன் பின்னர் வருமானத்தையும் அதிகரித்துள்ளேன். 600 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் இதனை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

பல்வேறு காரணங்களினால் முடங்கி கிடந்த இலங்கையின் கால் பந்தாட்டத்துறையை ஊக்குவித்து தற்போது வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளோம். கால் பந்தாட்ட சம்மேளனத்துக்கான தேர்தல் ஒன்று விரைவில் நடைபெறவுள்ளது. அதில் நாம் அனைத்து மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆதரவுடனும் மீண்டும் வெற்றியீட்டுவோம்.

எங்களுக்கு எதிராக சில சதித்திட்டங்களும் திரைமறைவில் தீட்டப்படுகின்றன. அவைகளுக்கெல்லாம் முகம் கொடுத்து நாம் வெற்றி கொள்வோம். நாங்கள் மிகவும் நேர்மையாக இந்த கால் பந்தாட்ட சம்மேளனத்தை செயற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம். வடக்கு, கிழக்கு உட்பட மேற்கு, தெற்கு என அனைத்து மாவட்ட கால் பந்தாட்ட லீக்குகளும் எமக்கு ஆதரவு வழங்குகின்றன.

யாராக இருந்தாலும் விளையாட்டுத்துறை அமைச்சரோடு இணைந்து எமது கால்பந்தாட்ட சம்ளேனத்தையும் கால்பந்தாட்டத் துறையையும் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லவேண்டும்” எனக் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .