2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

கே.பியின் அரசியல் பிரவேசம்

Super User   / 2011 பெப்ரவரி 07 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-கே.சஞ்சயன்

கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் அரசியலுக்கு வரப்போகிறாரா?, புதிய கட்சி ஒன்றைத் தொடங்கப் போகிறாரா என்ற கேள்வி கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 28ஆம் திகதி தொடக்கம் அவர் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு ஒரு தொகுதி புலம்பெயர் ஆதரவாளர்களுடன் சென்று திரும்பியதும்- அங்கு நடத்தப்பட்ட கலந்துரையாடல்களும் தான் இந்தச் சந்தேகங்களுக்குக் காரணம்.

யாழ்ப்பாணத்தில் அவர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

அடுத்து யாழ்.பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற- போரில் பாதிக்கப்பட்டோருக்கான உதவி வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் உரையாற்றிய போது கே.பி கண் கலங்கியதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிகழ்வுகளில் பங்கேற்க ஊடகவியலாளர்களுக்கு படையினர் அனுமதி வழங்கவில்லை.

ஆனாலும் எப்படியோ நுழைந்து விட்ட செய்தியாளர்களால் தான் அங்கு பேசப்பட்ட சில விடயங்கள் வெளியே கசிந்தன.

யாழ்ப்பாணத்தில் கே.பி. அரசியல் கட்சியை தொடங்குவது பற்றிய எந்தத் தகவலையும் வெளியிடாத போதும், அவர் அந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக கொழும்பில் செய்திகள் வெளியாகின.

புலம்பெயர் தமிழ் ஊடகங்களில் இந்தச் செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அதற்குக் காரணம் புலிகள் அமைப்புக்கு கே.பி. தலைமை தாங்க முற்பட்ட போது- அதற்கு எதிராகவும் தடையாகவும் இருந்த இன்னொரு தரப்புக்கு இது மிகவும் வாய்ப்பான செய்தியாக இருந்தது தான்.

கே.பிக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுக்க அவர்கள் இந்தச் செய்தியை மிகத் தாராளமாகவே பயன்படுத்திக் கொண்டனர்.

உள்ளூர் அரசியல் மட்டங்களிலும் இந்தச் செய்தி ஒருவித மிரட்சியை ஏற்படுத்தத் தவறவில்லை. குறிப்பாக வடக்கு அரசியல் களத்தில் உள்ள கட்சிகள் மத்தியில் இதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்ளப்பட்டது.

கே.பி அரசியலுக்கு வந்தால்...? என்ன செய்வீர்கள் என்று ஐ.தே.க பிரதித்தலைவர் கரு ஜெயசூரியவிடம் கேட்கப்பட்ட போது அவர் ஜனநாயக அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்றார்.  அது இந்த விவகாரத்தை இன்னும் பரபரப்பாகியது.

இன்னொரு பக்கத்தில் டக்ளஸ் தேவானந்தானவும் கே.பி அரசியலுக்கு வருவது பற்றி தனக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறினார்.

இப்படி கே.பி அரசியலுக்கு வரப் போகிறார், கட்சியை ஆரம்பிக்கப் போகிறார் என்ற செய்திகள் கடந்த பல நாட்களாக ஊடகங்களில் முக்கியம் பெற்று வருகின்றன.

இந்தநிலையில் கே.பி உண்மையிலேயே அரசியலுக்கு வரப் போகிறாரா - அவர் கட்சி ஒன்றை ஆரம்பித்தால் வெற்றி பெற முடியுமா- அதனால் அவர் சந்திக்கப் போகும் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பன குறித்து சற்று அலசிப் பார்ப்பது அவசியம்.

மலேசியாவில் இருந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட கே.பி விவகாரம் இன்னமும் பலருக்குப் புதிராகவே உள்ளது.

அவர் மலேஷியாவில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டாரா அல்லது தாமாகவே முன்வந்து சரணடைந்தாரா என்று தொடங்கிய விவாதம்- இப்போது அவர் அரசியலுக்கு வருவாரா- கட்சியைத் தொடங்குவாரா என்பது வரை வந்து நிற்கிறது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் கே.பி ஒரு கைதியாகவே உள்ளார். ஆனாலும் அவருக்கு அரசாங்கம் பல சுதந்திரங்களைக் கொடுத்துள்ளது. இதற்குக் காரணம் அவரால் அரசாங்கத்துக்குப் பல காரியங்கள் ஆக வேண்டியுள்ளது.

அதனால் தான் அரசாங்கம் இந்தியா உள்ளிட்ட நாடுகளால் தேடப்பட்டவராக இருந்த போதும்- கே.பியை அவர்களிடம் கொடுக்கவோ விசாரிக்க அனுமதிக்கவோ இடம்கொடுக்காமல் காய்களை நகர்த்துகிறது.

புலம்பெயர் தமிழர் சமூகம் வலுவானது என்பது அரசாங்கத்துக்கு நன்கு தெரியும். அதன் பலத்தை உடைப்பதற்கும் சரி, போரினால் சீரழிந்து போயுள்ள வடக்கு,கிழக்கை புனரமைப்பதற்கு புலம்பெயர் தமிழர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் சரி- கே.பி ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறார்.

ஆனால் இந்தக் காரியங்கள் எந்தளவுக்கு வெற்றிகரமாக நிறைவேறியுள்ளன என்பது வேறு விடயம்.

அதேவேளை கே.பியைப் பொறுத்தவரை தன்னை அரசாங்கம் எதற்காக சார்ந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு சில இலக்குகளை அடைய முற்படுகிறார்.

போரினால் அழிந்து போன பிரதேசங்களின் மீளமைப்பும், திக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வு, நிர்க்கதியாக உள்ளவர்களின் பாதுகாப்பு, தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் போராளிகளின் விடுதலை என்று அவர் ஒரு புதிய பாதையில் பயணத்தை மேற்கொள்கிறார்.

அதற்காக அவர் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு அமைப்பு என்ற உதவி அமைப்பையும் உருவாகியுள்ளார்.

அரசாங்கத்துக்கு முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு கொடுத்து விடுவித்த பின்னர் என்ன செய்வார்கள் என்ற பயம் இருக்கவே செய்தது.

கே.பி ஊடாக ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி அவர்களுக்கான நிரந்தர வேலைவாய்ப்பு மற்றும் புனர்வாழ்வுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலம்- எதிர்காலத்தில் அவர்கள் ஆயுத வன்முறைகளின் பக்கம் திரும்பாமல் தடுக்கலாம் என்று நம்புகிறது அரசாங்கம்.

இதனால் தான் கே.பிக்காக அரசாங்கமும் வளைகிறது.அதேவேளை, அரசாங்கத்துக்காக கே.பியும் வளைகிறார்.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டுமானால் அதற்கான பணத்தை கே.பியிடம் அரசாங்கம் கொடுக்கப் போவதில்லை.

புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்புடன் அதைச் செய்யும் சுதந்திரத்தை அது கொடுத்துள்ளது. இங்கே அரசாங்கத்துக்கு ஒரு தேவை உள்ளது.

தமது பக்க நியாயங்கள் புலம்பெயர் சமூகத்தை சென்றடைய வேண்டும் என்று அது எதிர்பார்க்கிறது. அதற்கு கே.பி. தேவைப்படுகிறார்.

கே.பி. தனக்குத் தெரிந்த நம்பகமான புலம்பெயர் செயற்பாட்டாளர்களை ஒவ்வொருவராக அழைத்து வருகிறார்.

அவர்களுக்கு நிலைமைகளை விளங்கப்படுத்தி உதவிகளைப் பெறுவதற்கு முனைகிறார். இந்தச் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அவர்களுடன் பேசிக் கொள்கிறது. இங்குள்ளவர்களைத் தவறாக வழிநாடத்தாதீர்கள் என்று அவர்களிடம் சொல்லி அனுப்புகிறது.

இப்போது வரைக்கும் கே.பியும் அரசாங்கமும் செய்து கொண்டிருப்பது இதைத் தான்.

இந்தக் கட்டத்தில் யாழ். பல்கலைக்கழக மட்டத்திலும், யாழ் கூட்டுறவுச் சங்க மண்டபத்திலும் கே.பி நடத்திய கலந்துரையாடல் தான் அவர் அரசியலுக்கு வரலாம் என்ற ஊகத்தைக் கிளப்பியது.

அடுத்த மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடக்கப் போகிறது. அதற்கடுத்து வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடக்கப் போகிறது.

உள்ளூராட்சித் தேர்தலில் இனிமேல் யார் நினைத்தாலும் கே.பி.யால் வேட்பாளர்களை நிறுத்த முடியாது.

அடுத்து மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் அவர் ஏதாவது நகர்வை எடுப்பாரா- என்று தான் பலரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி மீது ஏகப்பட்ட பேருக்கு கண்.  கே.பியுடன் அரசாங்கம் தந்திரமாக அணுகத் தொடங்கிய விவகாரம் வெளியே தெரியவந்த போது- அவரை வடக்கு மாகாண முதலமைச்சராக்க திட்டமிடுவதாக கதை பரவியது.

இப்போது வடக்கு மாகாண முதல்வர் பதவியைக் குறிவைத்திருக்கும் பலருக்கும் கே.பி பற்றி முன்னர் வெளியான செய்தி கொஞ்சம் மிரட்டலாகவே உள்ளது.

கே.பி அரசியலுக்கு வர முடிவு எடுத்தால் என்ன நடக்கும்? அதை தமிழ் மக்கள் ஏற்பார்களா? விரும்புவார்களா என்பது முக்கியமான சந்தேகம்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் புலிகளை இதுவரை அவர்கள் அரசியல்வாதிகளாகப் பார்த்ததில்லை.

புலிகளின் முக்கிய தலைவர் என்று முத்திரை குத்தப்பட்ட ஒருவர் அரசியல்வாதியாக வலம் வரும் போது- அதை வடக்கு மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று கூற முடியாது.

தனியான அரசியல் கட்சி அமைத்தாலும் கூட, அவர் நின்று பிடிப்பது கடினம். அதில் போட்டியிடுவதற்கு தேர்தல் திணைக்களத்தில்  பதிவு செய்ய வேண்டும்.  பல ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட கட்சிகளே தேர்தல் திணைக்களத்தின் புதிய விதிகளால் பதிவு செய்ய வழியின்றித் திக்குமுக்காடுகின்றன.

இந்தநிலையில் கே.பி புதிய கட்சியை ஆரம்பிப்பதோ, அதை வடக்கு மாகாணசபைத் தேர்தலில் களமிறக்குவதோ   கொஞ்சமும் சாத்தியமில்லாத விடயம் தான்.

கே.பி. அரசியலுக்கு வந்தாலும் அரசுடன் சார்ந்தே நிற்க வேண்டும். அரசுக்கு ஏற்கனவே வடக்கில் டக்ளஸ் தேவானந்தா இருக்கும் போது இன்னொரு வாளை அதே உறைக்குள் போட்டுக் கொள்ள முனையாது.

அதேவேளை, கே.பி. தனித்து அரசியல் நடத்த முயன்றால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

தமிழ்த் தேசிய அரசியலுக்கு இவரைக் கொண்டு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கும்  இருக்கலாம்.

அப்படியானால் அவரை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டியிருக்கும். அதை அரசாங்கம் அவ்வளவு இலகுவாகச் செய்யாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளைப் பிரிக்க அரசாங்கம் சதி செய்கிறதோ என்ற அச்சம் அதன் தலைவர்கள் சிலருக்கு இருப்பதாகவே தெரிகிறது.

அண்மையில் ஆனந்தசங்கரி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள கருத்துகள் இதை உணர்த்துகின்றன.

சில மாதங்களுக்கு முன்னர் உள்ளூராட்சி, மாகாணசபைத் தேர்தல்களில் முன்னாள் போராளிகள் போட்டியிட வேண்டும் என்று அமைச்சர்கள் சிலர் கூறியது நினைவிருக்கலாம்.

கே.பி.யை அரசியலுக்குக் கொண்டு வருவதன் மூலம்அரசாங்கத்து சாதகமான விடயங்கள் நடந்தேறும் என்றாலும் அதிலும் பல சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன.

அதேவேளை கே.பி.யைப் பொறுத்தவரையில் அரசியல் என்று களம் இறங்கினால் தற்போது அவர் புலம்பெயர்ந்தோரின் ஒரு பகுதியினர் மத்தியில் உருவாக்கியுள்ள தளத்தை முற்றாகவே இழந்து விடுவார்.

புலம்பெயர் செயற்பாட்டாளர் பலரும் கே.பி.க்கு உதவுவதற்கும், அவரது பேச்சைக் கேட்டு கொழும்பு வருவதற்கும் காரணம் முன்னாள் போராளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான்.

அந்தச் சந்தர்ப்பத்தை அவர் அரசியல் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ள முனைந்தால், கே.பி.யின் புலம்பெயர் ஆதரவுத் தளம் முற்றாகவே நொருங்கிப் போய் விடும்.

இந்தநிலையில் கே.பிக்கு நெருக்கமானவர்களும் அவருடன் தொடர்பை வைத்திருப்பவர்களும் அடித்துச் சொல்கின்றனர்- அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று.

அதுமட்டுமன்றி, கடந்த மாத இறுதியில் கிளிநொச்சியில்  நேர்டோ நிகழ்வில் உரையாற்றும் போது கூட அதை வெளிப்படுத்தியுள்ளார். அந்த செய்தி ஊடகங்களில் வெளியாகவில்லை.  அரசியலுக்கு வரலாம் என்ற செய்தி தான் வலுவாகப் பரவியது.

கே.பி.யின் அரசியல் பிரவேசம் பற்றிய இந்த வதந்தி கொஞ்ச நாளாகப் பேசப்படாதிருந்த அவரை- மீண்டும் அதிகம் பேர் பேசுகின்ற ஒருவராக முன்னிலைக்கு கொண்டு வந்திருக்கிறது அவ்வளவு தான்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .