Super User / 2011 மே 12 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே. சஞ்சயன்)
அண்மைக்காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரபூர்வமற்ற கொள்கை வகுப்பாளராக மாறியிருக்கும் ஒருவர் தான், சிங்கப்பூர் பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியராக கடமையாற்றும் றொகான் குணரட்ண.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்திலும் சரி, அதற்குப் பின்னர் தலையெடுக்க முயன்ற விடுதலைப் புலிகளை சர்வதேச அளவில் ஒடுக்கும் நடவடிக்கைகளின் போதும் சரி, இலங்கை அரசுக்கு இவரே பல்வேறு யோசனைகளையும் கூறியிருந்தார்.
இப்போதும் அவர் இலங்கை அரசுக்கு சில யோசனைகளை முன்வைத்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் மூலோபாயங்களையும், அதிகாரிகளையும் அடியோடு மாற்ற வேண்டும் என்பதே அந்த யோசனை..jpg)
வினைத்திறனுடன் வெளிவிவகார அமைச்சு செயலாற்றவில்லை என்று அவர் கூறியிருக்கும் கருத்தை அரசாங்கம் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ளும் என்று தெரியவில்லை.
ஆனால், இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையும் சரி, வெளிவிவகாரம் சார்ந்த விடயங்களில் அரசாங்கம் செயற்படும் போக்கும் சரி கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பது உண்மை.
குறிப்பாக ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியான பின்னர், ஏராளமான முரண்பாடுகள் அரசாங்கதுக்க்குள்ளே இருந்து வெளிப்படுகின்றன.
இந்த நிபுணர்குழுவை ஐ.நா பொதுச்செயலர் நியமித்தபோது அதைக் கடுமையாக எதிர்த்து, நிராகரித்த அரசாங்கம், பின்னர் அதனுடன் பேச்சு நடத்தும் அளவுக்குப் போனது.
நிராகரிக்கப்பட்ட நிபுணர்குழுவின் உறுப்பினர்களுக்கு நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன மதிய விருந்து கொடுத்துள்ளார்.
அதற்கு அவர் நிபுணர்குழுவின் தலைவருக்கு அதிகாரபூர்வமாக விடுத்த அழைப்பும், அந்த மதிய விருந்துக்கு நிபுணர்குழு நன்றி தெரிவித்து எழுதிய கடிதமும் கூட ஐ.நாவின் அறிக்கையில் சாட்சியங்களாக உள்ளன.
அதுமட்டுமன்றி இலங்கை அரசின் சார்பில் வெளிவிவகாரச் செயலரும், சட்டமா அதிபரும் நிபுணர்குழுவை சந்தித்துப் பேசியுள்ளனர். இவையெல்லாம் வெளிவிவகாரக் கொள்கையின் முரண்பட்ட விடயங்கள்.
நிபுணர் குழுவை ஐ.நாவின் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டே இலங்கை அரசின் பிரதிநிதி, விருந்து கொடுத்திருந்தார்.
ஆனால் இப்போது அது ஐ.நாவின் அதிகாரபூர்வ குழுவல்ல என்றும், அவர்களின் அறிக்கை ஐ.நாவின் அறிக்கை அல்ல என்று கூறுவதும் வேடிக்கையான விளையாட்டு.
எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ளமாட்டோம் என்று இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட நிபுணர்குழுவுடன் பேச்சு நடத்தியது இன்னொரு முரண்பட்ட இராஜதந்திரம்.
இந்த அறிக்கை வெளியான பின்னர், அதைக் கையாண்ட விதத்தைப் பார்த்த போது, ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு சாதமான சமிக்ஞைகளே வெளிப்பட்டன. ஆனால், இப்போது அதில் ஏராளம் சிக்கல்கள் தோன்றி வருவதை உணரமுடிகிறது.
கடந்தமாதம் 12ம் நாள் இந்த அறிக்கை பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட பின்னர், சுமார் இரண்டு வாரங்களாக அவர் அதை வெளியிடவில்லை.
அதற்கிடையில் கொழும்பு ஊடகம் ஒன்றில் அதன் கணிசமான பகுதிகள் வெளியானது,
ஐ.நாவின் அறிக்கையை நிராகரித்த அரசாங்கம் ஐ.நாவுக்கு எதிராகவும், பான் கீ மூனுக்கு எதிராகவும் போராட்டங்களைத் தூண்டி விட்டது. இதற்கான தீர்மானங்கள் அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதியின் முன்னிலையிலேயே எடுக்கப்பட்டன. ஆனால், இப்போது இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் எல்லாமே அடங்கி விட்டன. இப்போது இதை தருஸ்மன் குழுவின் அறிக்கை என்றே அரசாங்கம் கூறுகிறது.
ஐ.நாவுக்கு எதிரான- பான் கீ மூனுக்கு எதிரான நகர்வுகளை அப்படியே அடக்கிக் கொண்டு விட்டது அரசாங்கம். ரஷ்யாவும், சீனாவும் காட்டிய கண்டிப்பான எதிர்ப்பையடுத்தே அரசாங்கம் பின்வாங்கியதாக ஒரு தகவல்.
என்னதான் இருந்தாலும், இலங்கையும் அங்கம் வகிக்கும் ஒரு அமைப்பே ஐ.நா. அதற்கென்று உள்ள கௌரவத்தைப் பாதிக்கும் வகையில் இலங்கை அரசே நடந்து கொள்வதை உலகநாடுகள் வெறுப்புடன் தான் பார்த்தன.
அதன் விளைவாக அரசாங்கத்துக்கு சர்வதேச நெருக்கடிகள் வந்தன. இதனால் அரசாங்கத்தின் அணுகுமுறைகளில் மீண்டும் மாற்றம் நிகழ்ந்தது.
இதனால் ஐ.நாவின் அறிக்கை, பான் கீ மூனின் அறிக்கையாகி, இப்போது தருஸ்மன் குழுவின் அறிக்கையாக சுருங்கி விட்டது.
இந்த அறிக்கையில் தனியே அரசாங்கம் மீது மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. புலிகள் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தநிலையில் போர்க்குற்றங்கள் எல்லாவற்றையும் புலிகளே செய்தனர் என்ற வகையிலும், படையினரால் அத்தகைய குற்றங்கள் இழைக்கப்படவில்லை என்றும் அரசாங்கம் வாதாடியது.
இது இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின் மிகப்பெரிய பலவீனம். போர்முனையில் ஒரு பொதுமகனும் கொல்லப்படவில்லை என்ற வாதத்தை யாருமே நம்பவில்லை. நம்பவும் முடியாது.
டியூ.குணசேகர போன்ற சில அமைச்சர்கள் மட்டும் போர் என்றால் பொதுமக்களும் கொல்லப்படத் தானே செய்வார்கள் என்று கூறுகின்றனர்.
ஆனால் பெரும்பாலான அமைச்சர்கள் ஒருவருமே கொல்லப்படவில்லை என்று பூசி மெழுக முனைகின்றனர். இதுதான் முக்கியமான சிக்கல்.
அதைவிட போரில் எந்தவொரு பொதுமகனும் கொல்லப்படவில்லை என்று முன்னர் கூறிய ஜனாதிபதியும், இப்போது எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்ற விபரத்தை கூறமுடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதைவிட, தம் மீதான போர்க்குற்றங்களை நிராகரிப்பதற்குப் பதிலாக, புலிகள் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கத் தொடங்கியது அரசாங்கம். ஆனால், அங்கே இருந்த சிக்கலை அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை.
போர்க் குற்றங்களைப் புலிகள் புரிந்தாலும் சரி, அரசபடையினர் புரிந்தாலும் சரி அதற்கு பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்கும்படி தான் ஐ.நாவின் அறிக்கை கூறியுள்ளது.
எனவே போர்க்குற்றத்தைப் புலிகளும் செய்யவில்லை, நாங்களும் செய்யவில்லை என்று கூறினால் தான், இந்த விசாரணைப் பொறியில் இருந்து தப்பிக்கலாம் என்ற உண்மை அரசாங்கத்துக்கு கடைசி வரை புரியாமல் இருந்து விட்டது.
புலிகள் போர்க்குற்றம் செய்துள்ளனர் என்று கூறும் அரசாங்கம், அதுபற்றிய விசாரணைகளையும் ஏன் தடுக்க முனைகிறது? அதுபற்றி கிண்டிக் கிளறப் போனால் ஆபத்து தமக்கும் வரும் என்பது அரசுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் இப்போது புலிகள் மீதான போர்க்குற்றங்கள் பற்றிய பிரசாரங்களையும் கொஞ்சம்,
கொஞ்சமாக அடக்கி வாசிக்கத் தொடங்கி விட்டது.
இந்த அறிக்கையை இலாவகமாக கையாள்வதற்கு வழிகள் பல இருந்த போதும், அதைச் செய்வதற்கு அரசாங்கத்தின் கடும் போக்கும், தூரநோக்கற்ற வெளிவிவகாரக் கொள்கையும் இடம்கொடுக்கவில்லை. போரின் போதும் சரி, அதற்குப் பின்னரும் சரி- அரசாங்கம் தான் ஒரு பிரமாண்டமான சக்தி என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி வைத்திருந்தது. அந்தத் தோற்றம் உடைபடுவதை அது விரும்பவில்லை.
குறிப்பாக ஐ.நாவின் அறிக்கைக்குப் பணிவது போன்று காட்டிக் கொண்டால் அது தமது இமேஜை உடைத்து விடும் என்று கணக்குப் போட்டது. இதனால் வெளிப்படையாகவே ஐ.நாவை எதிர்த்து பான் கீ மூனுடன் மல்லுக் கட்டியது.
அமெரிக்காவையும் விட்டு வைக்காமல், எல்லாவற்றுக்கும் காரணம் அதுவே என்றது. ஆனால் இப்போது அந்த வேகத்தைக் காணவில்லை.
இரகசியமாக இந்த விடயத்தைக் கையாண்டிருந்தால், பல நெருக்கடிகள் தீர்க்கப்பட்டிருக்கும். அரசின் இமேஜும் உடையாமல் பாதுகாக்கப்பட்டிருக்கும்.
அதற்கு இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை இடம்கொடுக்கவும் இல்லை. கௌரவம் விட்டுக் கொடுக்கவும் இல்லை. ஐ.நா.வின் அறிக்கை வெளியான பின்னர் இலங்கைக்கு ஆதரவாக நிற்கின்ற நாடுகள் என்றால் ஓமானும், மாலைதீவுகளும், ரஷ்யாவும் தான். சீனா கூட இலங்கைக்கு எப்படி ஆதரவு கொடுப்பது என்பது குறித்துப் பேசவில்லை. வெளிநாடுகள் தலையிடக் கூடாது என்று தான் கூறியுள்ளது.
இந்தியா எதுவும் கூறாமல் ஏதோ ஒரு இலக்கை வைத்து இரகசியமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா இன்னொரு பக்கத்தில் தனது காய்களை நகர்த்துகிறது. பிரித்தானியாவின் ஆதரவும் அதற்குள்ளது.
போர்க்குற்றம் சுமத்தி வெளியான ஐ.நாவின் அறிக்கை கிட்டத்தட்ட இலங்கையை தனிமைப்படுத்தி விட்டது என்பதே உண்மை. இந்தக் கட்டத்தில் மே தினத்தன்று ஐ.நாவுக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணியில் மேற்குலகுடன் ஒத்துப் போகாத சில நாடுகளின் தலைவர்களின் படங்களுடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் படமும் பொறிக்கப்பட்ட பதாகைகள் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் மற்றொரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஏற்கனவே புதிய உலக ஒழுங்கு பற்றியும், மாற்று ஐ.நா பற்றியும் அமைச்சர்கள் சிலர் கூறியுள்ள கருத்துகள் வெளியுலகை அதிருப்திக் கொள்ள வைத்துள்ளன. அமைச்சர்கள் பலரும் தமது வாய்க்கு வந்தபடி தெரிவிக்கும் கருத்துக்கள் வெளிவிவகாரக் கொள்கையின் பலவீன நிலையை எடுத்துக் காட்டுகிறது.
வெளிவிவகாரக் கொள்கை என்பது தனியே வெளிநாடுகளுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. ஒரு அரசின் அமைச்சர்கள் அனைவராலும் பொறுப்புடன் கையாளப்பட வேண்டியதொன்று.
ஒரு பக்கத்தில், ஐ.நாவுக்கு எதிராகப் பேரணி நடத்தும் நோக்கம் எதுவும் அரசுக்கு இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கூறிக் கொண்டிருக்க, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவோ பேரணிக்கான ஏற்பாடுகள் பற்றி செய்தியாளருக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.
இதுபோன்ற ஏராளம் முரண்பாடுகள். இந்த முரண்பாடுகளின் முடிவு எங்கே வந்து நின்றது?
இனிமேல் அரசாங்கம் ஐ.நாவுக்கோ, பான் கீ மூனுக்கோ எதிராக எந்தப் போராட்டத்தையும் நடத்தாது என்று செய்தியாளர்களைக் கூட்டி அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அறிவிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியது.
ஒழுங்கான வெளிவிவகாரக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. அதுமட்டுமன்றி ஐ.நா பொதுச்செயலரின் உத்தரவின் பேரில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை அரசின் ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு விதமாக பிரசாரப்படுத்தியது. ஒருவர் இது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வேலை என்றார். இன்னொருவர் தென்னாபிரிக்காவின் வேலை என்றார். மற்றொருவர், இது உருத்திரகுமாரனின் சதி என்றார்.
கடைசியாக இப்போது விமல் வீரவன்ச என்னவென்றால், தருஸ்மன் குழுவின் அறிக்கை என்று பிரசாரம் செய்யும் அரசின் முடிவுடன் தன்னால் ஒத்துப் போக முடியாது என்கிறார். இது பான் கீ மூனின் திட்டமிட்ட சதி என்பது அவரது வாதம்.
இந்த அறிக்கையை யார் தான் பின்னணியில் இருந்து தயாரித்தது என்ற ஒருமித்த கருத்தைக் கூட வெளிப்படுத்தத் திராணியற்றதாக, அரசாங்கத்தின் இராஜதந்திரம் இருக்கிறது. இப்போதும் கூட அரசாங்கத்தால் எதையும் செய்ய முடியாத நெருக்கடி தான் உள்ளது.
அறிக்கை கையளிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதமாகிறது. அதன் உள்ளடக்கம் அரசுக்குத் தெரிந்து ஒரு மாதமாகியுள்ள போதும், இன்னமும் வெளிவிவகார அமைச்சர் பிரீஸினால் வெளிநாடுகளை வளைத்துப் போட்டுக் காரியமாற்ற முடியாமல் தான் உள்ளது.
அடுத்த மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் இடம்பெறலாம் என்று கருதப்படுகின்ற நிலையில், எதிர்வரும் 16ம் திகதி தான் அவர் இந்தியாவுக்குப் போகப் போகிறார். அதன்பின்னர், 24ம் திகதியே, சீனா செல்லப் போகிறார். அவசர பயணங்களை மேற்கொண்டு நிலைமையை சமாளிக்கும்- சுதாரிக்கும் வித்தை என்பது வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியாது என்று கூற முடியாது. ஆனால் அதைச் செய்ய முடியவில்லை.
இந்த விவகாரம் பற்றி இலங்கை அரசுடன் பேச பெரும்பாலான நாடுகள் தயங்குகின்றன என்பதே உண்மை நிலை. வெறுமனே இந்த அறிக்கையை இலங்கையுடனான ஒரு விவகாரமாகப் பார்க்க எந்த நாடும் விரும்பவில்லை. இதனால் தமக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் அல்லது அனுகூலங்களையும் வைத்தே ஒவ்வொரு நாடும் கணக்குப் போடுகின்றன.
வெளிவிவகாரக் கொள்கை நெகிழ்வுப் போக்கானதாக இருந்திருந்தால் இலங்கையால் இந்த விவகாரத்தைச் சமாளித்திருக்க முடியும். வெளியே, ஐ.நாவுக்கு எதிரான அணி ஒன்றை உருவாக்குவதாக காட்டிக் கொண்டாலும், அரசின் நிலை என்பது பலவீனமே.
அமெரிக்காவையும் மேற்குலகையும் கையாளும் போக்கு மிகவும் கீழ் மட்டத்தில் இருப்பதே இதற்குரிய ஆதாரமாகும். என்னதான், இலங்கை அரசாங்கம் சீனாவுடனும், ரஷ்யாவுடனும் கைகோர்த்து நின்றாலும் மேற்குலகம் என்பது பலமான சக்தி என்பதை அரசாங்கம் மறந்து விட்டது.
அமெரிக்காவுடன் முட்டிமோதிக் கொள்வதால் சீனாவும், ரஸ்யாவும் தம்மைத் தட்டிக் கொடுக்கும் என்று அரசாங்கம் கருதியுள்ளதோ தெரியவில்லை. ஆனால் அதுவே ஆபத்தின் அறிகுறி என்பதை மறந்து விடக் கூடாது.
சீனாவும், ரஷ்யாவும் வெளியே மார்தட்டிக் கொண்டாலும், அவற்றின் 60-70 வீதமான ஏற்றுமதிப் பொருளாதாரம் மேற்குலகத்திலேயே தங்கியுள்ளன. எனவே இலங்கையை சுலபமாக கை கழுவி விட்டு தமது வர்த்தக நலன்களைப் பேணிக் கொள்ளும் ஆபத்து உள்ளது என்று எச்சரித்திருக்கிறார் விஜேதாஸ ராஜபக்ஷ இந்த உண்மைகள் அரசாங்கத்துக்கு புரிந்துள்ளதா என்பது தெரியவில்லை.
ஏதோ வாய்க்கு வந்தபடியெல்லாம் அமைச்சர்கள் அமெரிக்காவைத் திட்டித் தீர்க்கின்றனர்.
ஏற்கனவே இருந்தது போதாதென்று வந்தது பின்லேடன் விவகாரம். பின்லேடன் உலகம் முழுவதிலும் தேடப்பட்டு வந்த ஒரு தீவிரவாதி.
ஆனால், அமெரிக்கா அவரைக் கொன்றதால், இலங்கை அமைச்சர்கள் வெளிப்படையாகவே அது பற்றிக் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுமுறையா - சரியா? என்றெல்லாம் அவர்கள் கேட்டுள்ளனர். இது மோசமானதொரு இராஜதந்திரத்தின் வெளிப்பாடு என்பதில் சந்தேகம் இல்லை..jpg)
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் இலங்கையின் அமைச்சர்களுக்கு இப்போது பின்லேடன் நண்பனாகி விட்டார் போலும். அதுமட்டுமன்றி அமெரிக்கா சுட்ட பின்லேடனை விடப் பிரபாகரன் தான் கொடியவர் என்ற வகையில் வேறு பிரசாரம் நடக்கிறது.
இவையெல்லாம், எங்கோ தொடங்கிய விவகாரம் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகின்றன. மேற்குலகுடன் பகைத்துக் கொண்ட அரசாங்கம் சந்திக்கப் போகும் விளைவுகள் என்ன என்பதை, தீர்மானிப்பதாக எதிர்வரும் வியாழக்கிழமை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடக்கப் போகும் விவாதம் அமையக் கூடும்.
இந்த விவாதம் இலங்கைக்கு எதிரான நிலையை மேலும் அழுத்தமாக்கலாம் என்றும் என்று கணிப்புகள் கூறுகின்றன.
இந்தக் கட்டத்தில் தான் பேராசிரியர் றொகான் குணரட்ண வெளிவிவகாரக் கொள்கைகளை மட்டுமன்றி அதன் அதிகாரிகளையும் கூட அடியோடு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஐ.நாவின் அறிக்கை தயாரிப்புப் பணி தொடங்கியதில் இருந்து அது வெளியான பின்னரும் இலங்கையின் இராஜதந்திர நகர்வுகள் பலவீனத்தின் உச்சத்திலேயே உள்ளது.
இது பலமானதொன்றாக இருந்திருக்குமேயானால் அந்த அறிக்கை பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் காலாட்டிக் கொண்டு, பின்லேடனை அமெரிக்கா எப்படி வீழ்த்தியது என்று வெளியாகும் சுவாரசியமான செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்திருக்க முடியும்.
ஆனால் அப்படியான நிலை அரசுக்கு இல்லை. இருப்புக் கொள்ளாமல் அங்குமிங்கும் அலைந்து கொள்வதும், முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதும் அந்த நிலையில் அரசு இல்லை என்பதை வெளிப்படுத்துகின்றன.
இதனால் தான் பேராசிரியர் றொகான் குணரட்ண இந்த அழைப்பை விட நேரிட்டுள்ளது. இப்போதைய நிலையில் இலங்கை அரசுக்கு அனைத்துலக அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கு உள்ள ஒரே வழி- ஐ.நாவுடன் ஒத்துழைப்பது தான். இதையே பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் போன்றனவும் வலியுறுத்தியுள்ளன.
இது சிக்கலானதொரு விவகாரமாக இருந்தாலும், எந்தளவுக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறதோ அதுவே பாதுகாப்பை அளிக்கக் கூடியது.
இயன்றளவுக்கு ஐ.நாவுடனும் உலகியல் நடைமுறைகளுடனும் இசைந்து போவது தான் இன்றைய நிலையில் புத்திசாலித்தனமான காரியமாக இருக்கும்.
அப்படியில்லாமல், வெளிவிவகாரக் கொள்கையின் போக்கும் செயற்பாடுகளும் இதேவகையில் தொடர்ந்தால்- இலங்கை மேலும் மேலும் தனித்து விடப்படும் நிலை ஒன்றுக்குள் தள்ளப்படும்.
சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் கைகொடுத்தாலும் கூட, மேற்குலகம் தடைகளையும், அழுத்தங்களையும் கொடுக்கத் தொடங்கினால் அதைச் சமாளிக்கும் திறன் இலங்கைக்கு இருக்காது. ஏனென்றால், மேற்குலகத் தடைகளை சமாளித்து நின்று பிடிப்பதற்கு போதியளவுக்கு இலங்கையிடம் வளங்கள் இல்லை.
44 minute ago
4 hours ago
8 hours ago
Niththi Thursday, 12 May 2011 06:20 PM
உண்மையான கருத்துக்கள்
Reply : 0 0
Nishanthan Thursday, 12 May 2011 06:57 PM
என்னவென்றாலும் நடக்கட்டும்... எங்களை கடாபி காப்பாற்றுவார்.
Reply : 0 0
ajan Thursday, 12 May 2011 07:22 PM
சிறப்பான கட்டுரை.
நான் எதிர்பார்ப்பது எல்லாம் புலி அல்லது சிங்கம் யார் என்றாலும் மக்களை கொன்ற அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். உண்மையான நீதி கிடைக்கவேண்டும். இதை லங்கா ஒருபோதும் இதை செய்யபோவது இல்லை. அணைத்து உலக விசாரணை ஓன்று செய்வது மூலமே இதை ஏற்படுத்த முடியும்.இதற்கான அழுத்தம் உலக நாடுகள் கொடுக்கவேண்டும்.
இந்திய, ரஷ்ய, சீனா எப்படி லிபிய, சிரியாவை கைவிட்டு நழுவதியது என்று எல்லோரும் அறிவோம்
ஏற்கனவே இந்திய கட்சிகள், மக்கள் என்று அனைவரும் லங்காவுக்கு எதிராக கருத்துகளை சொல்ல தொடங்கிவிட்டார்கள்.
Reply : 0 0
xlntgson Thursday, 12 May 2011 08:47 PM
தண்டனை என்றால் தூக்குத் தண்டனையா, சதாம் ஹுசைனுக்கு கொடுத்தது போல, அபத்தம் அபத்தம்! சர்வதேச விசாரணைகளுக்கு ஒரு நாடு உடன்படாவிட்டால் ட்ரோன்கள் அனுப்புவார்கள். வேறு என்ன? "உலகில் எந்த நாடும் இறைமையுள்ள நாடல்ல, அமெ ஐரோ நாடுகளை தவிர மற்றெல்லா நாடுகளும் R2P நாடுகள் வாழைப்பழ குடியரசுகள் கப்பம் கட்டும் சிற்றரசுகள்" ஐ நா கண்துடைப்பு அதன் ஒரு தாரக வாசகமாக right to revenge பழிக்குப் பழி- என்று இருக்கும் போது எந்த நாட்டில் அமைதி நிலவும்?
வல்லவனுக்கு ஒரு சட்டம் எளியவனுக்கு ஒரு சட்டம் எண்மர் வைத்ததுதான் சட்டம்.
Reply : 0 0
sarath Thursday, 12 May 2011 11:36 PM
மிகவும் சிறப்பான கட்டுரை, நல்ல கருத்துக்கள், மிகவும் நன்றி பிரசுரித்ததற்கு. யுத்தத்தின் போது யார் குற்றம் செய்து இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். அனால் இங்கு அது நடைபெறமாட்டாது, காரணம் நடப்பது அனைத்துமே நாடகங்கள். எப்பொழுதாவது இலங்கை மேற்கு உலக நாடுகளோடு ஒத்து போகுமேயானால் எல்லாம் ஒன்றுகூடி கூத்தடிப்பார்கள்.
Reply : 0 0
pathmadeva Wednesday, 18 May 2011 10:23 PM
ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டால் மேலும் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
4 hours ago
8 hours ago