Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.கிருஷ்ணராஜா
அரபு நாடுகளின் நட்சத்திரமாக ஒரு காலத்தில் புகழப்பட்ட லிபிய தலைவரின் 42 வருட கால ஆட்சி முடிவை எட்டிவிட்டது. கடந்த வாரங்களில் கடாபி ஆட்சியின் எதிர்ப்பாளர்கள் லிபியாவின் திரிபோலி நகரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் கடாபியின் அதிகாரம் லிபியாவில் மீண்டும் வருவதற்கான சாத்தியங்கள் பூரணமாக அற்றுப் போயுள்ள நிலையில் கேணல் கடாபி தலைமறைவாகியுள்ளார்.
கடாபியின் வருகை
அரபு முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட லிபியா - வட ஆபிரிக்கா நாடுகளில் ஒன்று. வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் ரோமப் பேரரசு, ஒட்டமான் பேரரசு, இத்தாலி ஆகியவற்றின் ஆட்சிக்குக் கீழ் வந்த லிபியா, இரண்டாம் உலக யுத்த முடிவில் பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை இணைந்து நடத்திய இராணுவ ஆட்சியின் கீழ்வந்தது. 1951இல் ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய லிபியாவில் மன்னராட்சி ஏற்படுத்தப்பட்;டது.
இரத்தம் சிந்தாத இராணுவ புரட்சி மூலம் மன்னர் இட்ரிஸை 1969இல் பதவியிலிருந்து அகற்றிய இராணுவ கப்டனான முவமர் கடாபி நாட்டின் அதிபரானார். அப்போது அவருக்கு 27 வயது.
ஏகாதிபத்திய எதிர்ப்பு
கடாபி பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே லிபியாவிலிருந்து பிரிட்டிஷ், அமெரிக்க இராணுவ தளங்களை அகற்றினார். எண்ணெய் நிறுவனங்ளுடன் புதிய ஒப்பந்தங்களை செய்ததன் மூலம் லிபியாவின் எண்ணெய் வருமானத்தை அதிகரித்துக் கொண்டார். இத்தாலியின் ஆட்சிக்குட்பட்டிருந்த 1911-1943 காலப்பகுதியில் லிபியாவில் குடியேறியிருந்த 20,000 இத்தாலியர்களை கடாபி 1970இல் நாட்டைவிட்டு வெளியேற்றினார்.
எண்ணெய் கம்பனிகளை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததனாலும் உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்ததனாலும் லிபிய மக்களின் தலாவீத வருமானம் பெருமளவு அதிகரிப்பை கண்டது.
பொதுநல நடவடிக்கைகள்
கடாபி ஆழ்துளை கிணறுகளை அமைத்து நகரப்புறங்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் நீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். லிபியாவில் பெற்றோலிய இரசாயன கைத்தொழில்கள், உருக்கு மற்றும் சீமெந்து கைத்தொழில்களை அபிவிருத்தி செய்தார்.
இலவச கல்வி, மருத்துவம், முதியோர் கவனிப்பு என பல சமூக நலச் செயல்களில் முதலீடு செய்தார். சகலருக்கும் வீடு என்னும் திட்டத்தை அமுல்படுத்தியதன் மூலம் கூடார வாழ்வை லிபியாவிலிருந்து அகற்றினார். சகலருக்கும் வீடு வழங்கும்வரை தன்னுடைய தாயாரை கூடாரத்திலேயே தங்க வைத்தார்.
அரேபிய ஒன்றியம்
ஐரோப்பிய யூனியனை ஒத்த அரேபிய ஒன்றியத்தை அமைப்பது இவரது இலட்சியமாக இருந்தபோதும் அதற்கு ஆதரவு கிட்டவில்லை. அயல்நாடான டுனீஸியாவை இணைத்து ஓர் அரசாக்கும் இவரது எண்ணமும் கைகூடவில்லை. மக்காவை உலக முஸ்லிம்களின் பொதுச் சொத்தாக்க வேண்டுமென்று கூறியதன் மூலம் சவுதி அரேபியாவின் பகையை சம்பாதித்துக் கொண்டார்.
புரட்சியை பரப்புதல்
பாரஸீக நாடான ஈரானுக்கு எதிராக அரபு நாடுகள் பலவும் கூட்டு சேர்ந்தபோது கொள்கையின் அடிப்படையில் ஈரானுக்கு ஆரவாக செயற்பட்டவர் கடாபி.
சர்வதேச ரீதியில் கிளர்ச்சிகளுக்கும் சுதந்திர போராட்டங்களுக்கும் ஆதரவு அளித்ததன் மூலம் கடாபி தேவையில்லாத பல பகைகளை தேடிக்கொண்டார். 1970 இன் பிற்பகுதிகளில் பிற நாட்டு கிளிர்ச்சியாளர்களுக்கு லிபியாவில் பயற்சி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். ஐரிஸ் குடியரசு இராணுவம், வெனிசூலா கிளர்ச்சிக்காரர் ஆகியோருக்கு கடாபி ஆதரவு வழங்கினார்.
இஸ்லாம் மீது அதிக விருப்பமும் நாட்டமும் இருந்தபோதிலும் கடாபி மத தீவிரவாதியல்ல. பெண் விடுதலைக்கும் பெண்களின் சமூக பங்கெடுப்பிற்கும் ஆதரவு கொடுத்தார். லிபிய இராணுவத்தில் நன்கு பயற்சியளிக்கப்பட்ட பெண்கள் இருந்தனர்.
சர்வதேச பயங்கரவாதம்
லிபியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கு இடையிலான பகைமைக்கு நீண்டகால வரலாறு உள்ளது. 1986இல் பெர்லினில் கிளப் ஒன்றில் லிபிய ஏஜென்டுகள் மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் முகமாக அப்போது ஜனாதிபதியாக இருந்த றொனால்ட் றீகன் - லிபியா மீது விமானங்கள் மூலம் குண்டுகளை வீசினார். இத்தாக்குதலின் போது கடாபியின் வளர்ப்பு மகள் உட்பட 60 லிபியர்கள் கொல்லப்பட்டனர்.
லிபிய ஏஜென்டுகள் ஸ்கொட்லாந்து நகரமான லொக்கபி மேலாக பறந்து கொண்டிருந்த Pan Am Flight 103 என்னும் விமானத்தை சுட்டு விழுத்தினர். இதன்போது பயணிகள், விமானப் பணியாளர்கள் 270 பேர் கொல்லப்பட்டனர்.
சஹாரா மீது பறந்துகொண்டிருந்த UTA Flight 774, லிபியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட போது 170 பயணிகள் மற்றும் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
கடாபியின் மறுபக்கம்
பல வருடங்களாக கேணல் கடாபி மக்களின் விருப்பத்துக்குரிய தலைவனாக இருந்துள்ள போதிலும் இவரது வன்முறைகள் இவர் மீது மறையாத வரலாற்றுக் கறையாக இருக்கும் என்பது உண்மையே. 1974 – 1976 காலப்பகுதியில் இவர் பொது இடத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தூக்குத் தண்டனை முறையை நடைமுறைப்படுத்தினார்.
மறியலிலிருந்து 1100 அதிருப்தியாளர்களை சுட்டுக்கொல்லும்படி 1996இல் கட்டளையிட்டதன் மூலம் தனது ஈவிரக்கமற்ற இன்னொரு பக்கத்தை உலகறியச் செய்தார்.
அடங்கிப் போதல்
சர்வதேச பயங்கரவாதத்தை ஊக்குவித்தமைக்காக 1986இல் லிபியா மீது ஐ.நா பொருளாதாரத் தடை விதித்தது. இத்தோடு கடாபியின் துணிச்சலும் தீவிரமும் குறையத் தொடங்கின.
2003இல் லொக்கர்பி விமானத் தாக்குதல் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட, லிபியாவில் மறியலிலிருந்த இரண்டு லிபிய பிரஜைகளை முவம்மர் கடாபி பிரித்தானியாவிடம் 1999இல் ஒப்படைத்தார். அத்துடன், 2003இல் இதே சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நட்ட ஈடாக கடாபி 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கினார்.
இதன்பின் கடாபி - அமெரிக்காவிடமும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிடமும் நல்ல பிள்ளையாகவே நடந்து கொண்டார். 2006இல் அமெரிக்கா, லிபியாவுடன் முழுமையான இராஜதந்திர உறவை ஏற்படுத்திக் கொண்டது. சர்வதேச விவகாரங்களில் இந்த நாடுகளுக்கு எதிராக கருத்துக் கூறுவதைக் கூட கடாபி தவிர்த்துக் கொண்டார். இவ்வாறெல்லாம் கடாபி இவர்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொண்டாலும் சந்தர்ப்பம் கிடைத்த போது பழையதை மறக்காமல் மேற்கத்தைய நாடுகள் இவரை பழி வாங்கிவிட்டன என்றே கூற வேண்டும்.
உள்நாட்டு எதிர்ப்பு
லிபியாவின் வடமேற்கு பிராந்தியங்களில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதன் காரணமாக வடமேற்கு நகரங்களில் மக்களின் குடித்தொகை அதிகரித்தது. இதனால் நகரமயமாதலுடன் தொடர்பான பல பிரச்சினைகள் தோன்றின. கிழக்குப்பகுதி கவனிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கருதியதால் அதிருப்திகள் பரவின.
கடாபி - மக்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்குவதற்கு தடைவிதித்தார். தனியார் உடைமைகள் சிலவற்றை தேசியமயமாக்கினார். வெளிநாட்டு, உள்நாட்டு வர்த்தகத்தை அரசே நடத்த வேண்டுமென உத்தரவிட்டார். கடாபிக்கு எதிரான கலகங்கள் மிக மோசமாக ஒடுக்கப்பட்டன. இவையே லிபிய மக்களில் ஒரு பகுதியினராவது இவருக்கு எதிரான கலகங்களில் ஈடுபட காரணமாயின.
லிபியாவுக்கு அண்மையிலுள்ள எகிப்து, டுனீஸியா ஆகிய நாடுகளில் மக்களின் கிளர்ச்சியினால் சர்வாதிகார தலைவர்கள் ஆட்சியிலிருந்து துரத்தப்பட்ட உதாரணங்களும் உள்நாட்டில் கடாபிக்கு எதிராக காணப்பட்ட எதிர்ப்புணர்வுகளும் லிபியாவில் கிளர்ச்சியை தூண்டின.
தலையீடு
இந்த கிளர்ச்சிகளை அடக்குவதற்கு கடாபி மேற்கொண்ட மோசமான வன்முறையே கடாபியை கவிழ்ப்பதற்கு காத்திருந்த நேட்டோ நாடுகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன.
பெப்ரவரி 2011 இல் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல நூற்றுக்கணக்கானவர்கள் கடாபியின் ஈவிரக்கமற்ற வன்முறைக்கு பலியாகினர்.
கடாபியின் ஆட்சிக்கு எதிராக கலகங்களை தூண்டுவதில் சி.ஐ.ஏ.யும் தனது கைவரிசையை காட்டியது. சி.ஐ.ஏ. கிழக்குப்பகுதி கிளர்ச்சியாளர்களை தூண்டிவிட்டது. சி.ஐ.ஏ. இவர்களுக்கு பணமும் ஆயுதமும் கொடுத்தது. தகவல் தொடர்பு வசதிகளும் சி.ஐ.ஏ.யினால் செய்து கொடுக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் பங்கு
லிபியாவின் வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கும் தீர்மானத்தை ஐ.நா. 2011 மார்ச் 18 இல் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அன்றே லிபிய அரசு கிளர்ச்சியாளருக்கு எதிரான தன்னுடைய இராணுவ நடவடிக்கையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தது. அதன் பின்பும் ஐ.நா. ஆதரவுடன் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் லிபியா மீதான தாக்குதலை தொடங்கின.
2011 மார்ச் 19ஆம் திகதி முதல் அமெரிக்க - பிரெஞ்சு படைகளால் தொடங்கப்பட்ட லிபியா மீதான தாக்குதலுக்கு Operation Odessy Daw என பெயரிடப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையை சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கண்டித்திருந்தாலும் தங்களது வீட்டோ அதிகாரத்தை பிரயோகிக்கவில்லை.
கடந்த ஐந்து மாதங்களில் நேட்டோ 7,500 விமான தாக்குதலை லிபியாவில் மேற்கொண்டது.
ஜூன் மாதத்தில் சர்வதேச குற்றச்செயல் நீதிமன்றம் கடாபியின் மீதும் அவரது மகன் சைப் அல் இஸ்லாம் மீதும் மனித இனத்துக்கெதிரான குற்றச்செயலுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தது.
முடிவு
திரிப்போலி நகரம் முழுவதும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். கடாபியின் மகன் தொடர்ந்து போரிடும் படி தனது ஆதரவு படைகளை கேட்டுள்ள போதும் லிபியாவில் விரைவில் ஆட்சி மாற்றம் வரப்போவது நிச்சயம்.
இதன் பின் லிபியாவில் பல புதிய பிரச்சினைகள் தோன்றலாம். கிளர்ச்சியாளர்கள் யாவரும் ஒரே கொள்கை அணியில் உள்ளவர்கள் அல்ல. ஒருவேளை லிபியாவின் ஆட்சியதிகாரம் தலிபான் போன்ற அடிப்படைவாதிகள் கைவசம் போகுமாயின் கடாபியின் ஆட்சியை எண்ணி ஏங்கும் நிலைமை லிபிய மக்களுக்கு ஏற்படலாம்.
anilar Wednesday, 31 August 2011 10:09 PM
சகோதரர் கிருஷ்னராஜா அவர்களே தங்கள் முழுமையாக கடாபியை விளங்ஙகவில்லை இவர் பெண்களுக்காக முழுவிடுதலை அளித்துள்ளார் என்று குறிப்பிட்டு இருக்கிறீங்க அப்படியில்லை. பெண்களை ஒரு மோகப் பொருளாகத்தான் இவர் வைத்துள்ளார். தனது பெண் மெய்ப் பாதுகாவலர்களே கற்பழித்துள்ளார். இவர் இஸ்லாமிய மார்க்கத்தில் பற்று என்று குறிப்பிட்டிருந்தீர்கள் இவர் உருவாக்கியது ஒரு புதிய மார்க்கம். கடாபியை பற்றி தங்களுக்கு முழுமையாகத் தெரியாது என்று எனக்கு தோன்றுகிறது.
Reply : 0 0
red Thursday, 01 September 2011 05:14 AM
கடாபிக்கும் இஸ்லாதிற்கும் தொடர்பு இல்லை
Reply : 0 0
Mohamed Hafeel Thursday, 01 September 2011 07:54 AM
கடாபி ஒரு ஆட்சி வெறியன். அவருடன் புனித இஸ்லாத்தை தொடர்புபடுத்துவது மாபெரும் தவறு. அவரிடம் இஸ்லாமிய பண்பாடே இல்லையே அதேநேரம் பெண்பித்தன்.
Reply : 0 0
reemco Thursday, 01 September 2011 04:05 PM
கட்டுரை மிக நன்றாக உள்ளது. தெரியாத விடயத்தில் கருத்துக்கூற முடியாது.
Reply : 0 0
avan Thursday, 01 September 2011 04:51 PM
மூஞ்சப்பாரு.
Reply : 0 0
Rifai Thursday, 01 September 2011 06:50 PM
Edirkalaththil libiyavai aalappovadu yar?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
43 minute ago
47 minute ago
49 minute ago