2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

வட மாகாணசபைத் தேர்தல் நடந்தால் தான் உண்மை

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 25 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண சபைக்கான தேர்தலை அடுத்த செப்டெம்பர் மாதம் நடத்துவதாக ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒருமுறை கூறியிருக்கிறார். கடந்த வார இறுதியில் வெலிஒயாவில் விவசாயிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்களை பகிர்ந்தளிக்கும் வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியிருக்கிறார்.

ஆனால் வட மாகாண சபை தேர்தல் விடயத்தில் அரசாங்கம் இது கால வரை காட்டிய அச்சத்தை பார்க்கும் போது உண்மையிலேயே அரசாங்கம் செபடெம்பர்; மாதத்தில் அத் தேர்தலை நடத்துமா என்பது இன்னமும் சந்தேகமாகவே இருக்கிறது.

இந்த தேர்தலை இவ்வருடம் செப்டம்பர் மாதத்தில் நடத்துவதாக ஜனாதிபதி அறிவித்த முதலாவது முறை இதுவல்ல. கடந்த வருடம் ஜுலை மாதம் 11ஆம் திகதி வெளியாகிய இந்து பத்திரிகை இதழுக்காக அவர் வழங்கிய பேட்டியின் போது தான் அவர் அதனை முதன் முதலாக கூறியிருந்தார்.

சிலவேளை ஜனாதிபதி கடந்த வருடம் இந்தக் கருத்தை அவ்வளவு பாரதூரத் தன்மையோடு வெளியிட்டு இருக்க மாட்டார். அவர் இந்திய பத்திரிகைகளுக்கு பேட்டி வழங்கும் போது இந்திய தலைவர்களை திருப்திப்படுத்தும் வகையில் கருத்துக்களை கூறுவதுண்டு.

13ஆவது அரசியலமைப்புக்கு அப்பாலும் செல்வேன் என்று அவர் இந்திய ஊடகங்களுக்கு பலமுறை கூறியிருப்பது உதாரணமாகும். அதேபோல் தான் அவர் கடந்த வருடம் வட மாகாண சபை தேர்தலைப் பற்றியும் கருத்து வெளிட்டு இருக்கக் வேண்டும்.

13ஆவது அரசியலமைப்புக்கு அப்பாலும் செல்வேன் என்று கூறும் போது அதற்கு அப்பால் செல்வது ஒருபுறம் இருக்க 13ஆவது அரசியலமைப்பையாவது பூரணமாக நிறைவேற்றும் நோக்கம் அவரிடம் இருந்ததாக தெரியவில்லை என்பது இப்போது தெட்டத் தெளிவான விடயம். அதேபோல் கடந்த வருடம் வட மாகாண சபைத் தேர்தலைப் பற்றிக்; குறிப்பிடும் போதும் அவர் அதைப் பற்றி பெரிதாக சிந்தித்து இருக்க மாட்டார்.

அப்போது அவர் அந்த விடயத்தில் 'சீரியசாக' இருந்திருந்தால் அவரது தம்பிமார்களான அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் அதன் பின்னர் 13ஆவது அரசியலமைப்பை ரத்துச் செய்ய வேண்டும் என்ற கருத்தை பரப்ப முற்பட்டு இருக்க மாட்டார்கள்.

இந்திய தலைவர்கள் அவர்களின் தலையீட்டில் சட்டமாக்கப்பட்ட 13ஆவது அரசியலமைப்பின் கீழ் மாகாண சபைகள் இயங்கி வருவதை விரும்புவார்கள் என்றே ஊகிக்க முடிகிறது. இந்த வகையில் அவர்களை திருப்திப்படுத்துவதற்காக கூறினாலும் உண்மையிலேயே வட மாகண சபைக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கூறினாலும் ஜனாதிபதி கடந்த வருடம் வெளியிட்ட அக்கருத்து வெகு தூரம் சென்றுவட்டது.

அதனை இந்தியா மட்டுமன்றி அமெரிக்கா போன்ற நாடுகளும் பிடித்துக் கொண்டன. அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியாக அமைந்த கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையலும் இந்த தேர்தல் விவகாரம் இடம் பிடித்துக் கொண்டது.

'2013ஆம் ஆண்டு செப்டெடம்பர் மாதம் வட மாகாணத்தின் மாகாண சபைக்காக தேர்தல்களை நடத்துவதென்ற இலங்கை அரசாங்கத்தின் அறிவித்தலை பாராட்டுவதோடு...' என்று இவ்வருடம் ஜெனீவா பிரேரணையின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணையின் இறுதிவரைவில் இந்திய அரசாங்கம் வெகுவாக தமது செல்வாக்கை செலுத்தியிருப்பதாக கூறப்பட்டது. எனவே இந்தியாவின் தலையீட்டினாலேயே வட மாகாண சபைக்கான தேர்தல் பிரேரணையில் இடம்பிடித்துக் கொண்டிருக்கிறது என்று ஊகிக்க முடிகிறது.

ஏவ்வாறாயினும் வட மாகாண சபைக்கான தேர்தலை இவ்வருடம் செப்டெம்பர் மாதம் நடத்துவது என்ற விடயம் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிலைப்பாடாகிவிட்டது. அது இப்போது வெறுமனே இலங்கையின் உள் விவகாரம் மட்டும் அல்ல.

வட மாகாண சபைத் தேர்தலை செப்டெம்பரில் நடத்துவதாக ஜனாதிபதி வெலிஒயாவில் வைத்து கடந்த வார இறுதியில் கூறியதன் பின்னரும் அவரது அரசாங்கத்தற்குள்ளருந்தே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் விமல் வீரவன்ச அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஒருவராவார்.

வழமையாக ஜனாதிபதி உண்மையிலேயே எதையாவது விரும்பினால் இந்த அரசாங்கத்தில் எவரும் அதனை எதிர்க்கப் போவதில்லை. மாறாக தாம் விரும்பாவிட்டாலும் அரசாங்கத்தில் எல்லோரும் ஜனாதிபதியின் கருத்தை வரவேற்பார்கள். நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை எதிர்த்த அரசாங்கத்திலுள்ள எல்லோரும் ஜனாதிபதி ராஜபக்ஷ அவ்வாட்சி முறையை நீடிக்க முற்பட்ட போது புதுப்புது வாதங்களை முன்வைத்து ஜனாதிபதியின் நிலைப்பாட்டை ஆதரித்தமையும் சூதாட்ட சட்டத்தை பிக்குகளின் கட்சியான ஜாதிக்க ஹெல உருமயவும் கூட ஆதரித்தமையும் இதற்கு உதாரணமாகும்.

வேண்டும் என்றால் சில விடயங்களில் சில அமைச்சர்கள் ஜனாதிபதியின் கருத்துக்கு மாறான கருத்துக்களை பகிரங்கமாக கூறலாம். அவ்வளவு தான். கசினோ விளையாட்டு சம்பந்தமாக தற்போது ஹெல உருமய போன்ற கட்சிகள் கருத்து வெளியிட்டு வருவதையும் மின் கட்டண உயர்வை வீரரவன்ச மற்றும் வாசுதேவ நாணாயக்கார போன்றவர்கள் எதிர்ப்பதையும் அவ்வாறு தான் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் வாக்களிப்பு என்ற நிலைக்கு வந்தால் அவர்கள் எவரும் ஜனாதிபதியின் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்வதில்லை.

ஆனால் விமல் வீரவன்ச வட மாகாண சபைத் தேர்தலை எதிர்ப்பதை அந்த அடிப்படையில் பொய்யான எதிர்ப்பு என்றே கூற முடியாது. ஏனெனில் அதில் வேறு திட்டங்களும் இருக்கலாம். வீரவன்சவை போல் வேறு சில அமைச்சர்களையும் இவ்வாறே இந்த தேர்தலுக்கு எதிராக குரல் எழுப்பச் செய்து ஹலால் இலட்சினைக்குப் போல் நாட்டில் அத் தேர்தலுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்களை முடுக்கி விட்டு அவற்றை காரணமாக காட்டி தேர்தலை நடத்தாமல் இருக்கவும் வாய்ப்பு இல்லாமல் இல்லை.

ஜாதிக்க ஹெல உருமய இதற்கு முன்னர் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டு இருந்தது. பிரதீபய என்ற பெயரில் லங்காதீப பத்திரிகைக்கு பத்தியொன்றை எழுதி வரும் அக்கட்சியின் மூத்த தலைவரும் மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில 2011 ஆண்டு ஜூன் 30ஆம் திகதிய பத்திரிகைக்கு எழுதிய பத்தியில் இவ்வாறு கூறியிருந்தார்.

'ஏனைய மாகணங்களில் மாகாண சபைகள நிறுவப்பட்டுள்ளதால் வட மாகாண சபையை நிறுவுவதை எவரும் எதிர்க்க முடியாது. எனவே வட மாகாண சபையை நிறுவுவதை மட்டுமன்றி அதற்கான தேர்தலை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

'அரசாங்கத்திற்கு சாதகமான நிலைமை உருவாகும் வரை வட மாகாண சபை தேர்தல் நடத்தப்படக் கூடாது என்று அரசாங்கத்தில் சில அமைச்சர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நான் அதனை ஏற்கவில்லை.

'தமிழ் தேசிய கூட்டமைப்பு வட மாகாண சபையை வெற்றி கொள்வதில் நன்மையும் இருக்கிறது. இப்போது அக்கட்சி வெறுமனே அரசாங்கத்தை விமர்சித்துக் கொண்டுதான் அரசியலை நடத்துகிறது. ஆனால் அவர்கள் வெற்றி பெற்றால் கொழும்பில் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு தாம் இது வரை தேவை என்று கூறியவற்றை நிறைவேற்றுவதில் உள்ள கஷ்டத்தை அவர்கள் உணர்வார்கள்.

அவர்கள் வட மாகாண சபையை பொறுப்பேற்றால் அவர்களது விமர்சனங்களும் நின்றுவிடும். ஆதன் பின்னர் அவர்கள் மக்களின் விமர்சனங்களையும் வெளிநாட்டு நெருக்குதல்களையும் எதிர்நோக்க வேண்டியிருக்கும்'
ஆனால் இவ்வாறு கூறிய ஹெல உருமய நாளை வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்த வேண்டாம் என்று கூறினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஏனெனில் அவர்கள் இனவாத விடங்களில் மற்றவர்களை விஞ்ச பெரும் ஆர்வத்தை காட்டுபவர்கள்.

அரசாங்கம் உண்மையிலேயே வட மாகாண சபை தேர்தலை நடத்தும் அறிகுறிகள் தான் தெரியவிருக்கினறன என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களில் ஒருவரான அனுர குமார திஸாநாயக்க கூறியிருக்கிறார். துமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான அச்சுறுத்தல்களின் அதிகரிப்பு, தமிழ ஊடகங்கள் மீதான் தாக்குதல்கள், ஜனாதிபதி யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டமை மற்றும் அவர் வட பகுதி உருளை கிழங்கு விவசாயிகளை சந்தித்தமை ஆகியவை தேர்தல் வருகிறது என்பதை கோடிட்டு காட்டுவதாக அவர் கூறுகிறார்.

இருந்த போதிலும் பதவிக்கு வந்தது முதல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி; அதிகார பரவலாக்கல் விடயத்தில் காட்டிய அசிரத்தையை கவனத்தில் கொள்ளும் போது  இந்த அரசாங்கம் அதிகார பரவலாக்கலுக்கு சாதகமான வட மாகாண சபைத் தேர்தலை நடத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.   

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .