2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

ஐவர் அச்சத்தில் பா.ஜ.க.

Thipaan   / 2014 நவம்பர் 03 , பி.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் அளித்த மரண தண்டனை, தமிழகத்தில் பெரிய போராட்டங்களுக்கு வித்திட்டுள்ளது.
ஏற்கெனவே இருந்த இலங்கை மீதான எதிர்ப்பு, மேலும் உச்சத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது.

இந்த தண்டனைக்கு எதிரான போராட்டத்தை மீனவர்கள் பெருமளவில் நடத்துகிறார்கள். இராமேஸ்வரம் பகுதியில் ரயில் தண்டவாளங்கள் பெயர்ப்பு, தொடர் உண்ணாவிரதம், பஸ்கள் மீது கல் வீச்சு என்று தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒன்றான இராமநாதபுரம், போராட்டக் களமாக மாறியிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளும் இந்த தண்டனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம், உடனே மத்திய அரசுக்கு அதாவது பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, ஐந்து பேரின் மரண தண்டனையை இரத்து செய்து அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வர வேண்டும் என்று நீண்டதொரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில் எமர்சன், அகஸ்தஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய ஐந்து மீனவர்களின் விடுதலைக்காக மத்திய அரசுடன் மேற்கொண்ட பல முயற்சிகளை விளக்கி, இந்த விடயத்தில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தினார்கள் என்ற குற்றச்சபட்டின் கீழ் கடந்த 2011 நவம்பர் 28ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்த ஐந்து பேரும், அப்பாவிகள் என்பதுதான் மீனவர்களின் வாதம். மாநில அரசின் வாதம். ஏன் இந்திய மத்திய அரசின் வெளிவிவகார அமைச்சும் கூட இந்தக் கருத்தையே பிரதிபலித்திருக்கிறது.

அப்பாவிகளுக்கு ஏன் மரண தண்டனை என்பதுதான் தமிழகத்தில் கிளம்பியுள்ள இந்த கொந்தளிப்புக்கு காரணமாக அமைந்திருக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தனியாக அறிக்கை விட்டு, இவர்கள் ஐவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

ராஜ்ய சபை எம்.பி. கனிமொழியோ, ஏற்கெனவே இருந்த வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் விடப்பட்ட கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் இப்போதுள்ள வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

இது தவிர ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, நரேந்திர மோடி கொடுத்த தைரியத்தில்தான் இப்போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இப்படியொரு மரண தண்டனையை நீதிமன்றத்தின் மூலம் கொடுக்க வைத்துள்ளார் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இப்போதுதான் தமிழகம், ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு தொடர்பில்  பெரிய போராட்டத்தை சந்தித்தது. அந்த நீதிபதி மீதும் தீர்ப்பு வழங்கப்பட்ட நீதிமன்றம் உள்ள கர்நாடக மாநிலத்தின் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. தமிழர் விரோதப் போக்கு என்று சித்திரிக்கப்பட்டு, பெரும் ரகளையையே அ.தி.மு.க. செய்து முடித்திருக்கிறது.

இந்நிலையில், இலங்கை மீது இந்த போராட்டம் ஆரம்பித்திருக்கிறது. இராமேஸ்வரம் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை பற்றி போராட்டம் நடத்தும் மீனவர்கள் அனைவரும், தமிழின விரோதப் போக்கை இலங்கை அரசு விடவில்லை என்று குரல் கொடுத்து வருகிறார்கள்.
சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு போராட்டங்கள் களை கட்டியுள்ளன. இலங்கை ஜனாதிபதியின் உருவப் பொம்மைகள் கொளுத்தப்பட்டுள்ளன.

இலங்கை தமிழர் போராட்டத்தை முன் எடுத்துச் செல்லும் தியாகு போன்றவர்கள், முன்பு தமிழர்களை இராணுவத்தின் மூலம் கொன்றார். இப்போது நீதித்துறையை வைத்து தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இதற்கெல்லாம் மேலாக, பாட்டாளி மக்கள் கட்சி தனியாக மாபெரும் ஆர்பாட்டத்தை நவம்பர் 5ஆம் திகதி நடத்தவிருக்கிறது.

வைகோ மீண்டும் மீண்டும் மத்திய அரசையும், நரேந்திர மோடியையும் சாடி வருகிறார். அவர், முன்பிருந்த அரசு (காங்கிரஸ் அரசு) மறைவாக செய்த உதவிகளை இப்போதுள்ள பா.ஜ.க. அரசு வெளிப்படையாக இலங்கைக்கு செய்கிறது. தமிழக மீனவர்களை அச்சுறுத்தவே இந்த அப்பாவிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று தடாலடியாக அறிவித்துள்ளார்.

இந்த போராட்டங்கள் எல்லாம் தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பா.ஜ.க.வுக்கு தலைவலியாக மாறியிருக்கிறது. அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் மாற்றாக பா.ஜ.க. தமிழகத்தில் உருவெடுக்கும் என்று பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளர் ரூடி, சென்னையில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஆனால், தி.மு.க - அ.தி.மு.க மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுமே, இலங்கை தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிராகவே பா.ஜ.க செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பிரசாரத்தை கடுமையாக மேற்கொண்டு வருகின்றன.

இது மாதிரி பிரசாரங்களை சமாளிக்க முடியாமல் பா.ஜ.க. திணறுகிறது. ஏனென்றால், இங்குள்ள பா.ஜ.க.வினர், முன்பு காங்கிரஸ் ஆட்சி இருந்த போது, எங்கள் மத்திய அரசு வந்தால் இலங்கை தமிழர் பிரச்சினையும் தமிழக மீனவர்கள் பிரச்சினையும் உடனே தீரும் என்ற வகையில் பிரசாரம் செய்ததை தமிழக கட்சிகள் மறக்கவில்லை.

ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு பதவியேற்பு விழாவுக்கு இலங்கை ஜனாதிபதியை அழைத்தமை, இலங்கை தமிழர் பிரச்சினையில் பா.ஜ.க.வின் அணுகுமுறையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமை, தமிழக மீனவர்கள் விடயத்திலும் மாற்றம் இல்லாமை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது ஐந்து மீனவர்களுக்கு மரண தண்டனை விதித்தமை மத்திய அரசால் தடுக்க முடியாமல் போனமை எல்லாம் பா.ஜ.க.வுக்கு எதிராக திரும்பிக்கொண்டிருக்கிறது.

அப்பீல் செய்யப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு சார்பில் கருத்து வெளியிட்டாலும், மோடி அரசு ஐந்து மீனவர்களையும் காப்பாற்றி அழைத்து வரும் என்று பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர்கள் குரல் கொடுத்தாலும் மற்ற தமிழக கட்சிகள் இதை நம்பத் தயாராக இல்லை.
அந்த அளவில்தான் அவர்களது போராட்டங்களும் கருத்துக்களும் அணி சேர்ந்து வருகின்றன.

முதலமைச்சராக ஜெயலலிதா இல்லாத இந்த நேரத்தில் கிளம்பியுள்ள இப்பிரச்சினையை இதுவரை அரசு ரீதியாக மட்டுமே அ.தி.மு.க. சந்தித்து வருகிறது. இன்னும் அ.தி.மு.க. இப்பிரச்சினையை கையில் எடுக்கவில்லை.

அக்கட்சியின் சார்பில் அறிக்கை எதுவும் வரவில்லை. இருந்தாலும் மற்ற கட்சிகள் எல்லாம் இப்போது ஒட்டு மொத்தமாக மத்திய அரசை விமர்சித்து வருகின்றன.

இதுவே காலப்போக்கில் அ.தி.மு.க. அரசுக்கு எதிரான விமர்சனமாகவும் மாறி விடும். ஏனென்றால், சென்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்த போது தி.மு.க. ஆட்சி இருந்தது.

அப்போது இப்பிரச்சினைக்கு தி.மு.க. காரணம் என்றுதான் அ.தி.மு.க. பிரச்சாரம் செய்தது. அதே பாணி அரசியல் ஐவர் தூக்குத் தண்டனை விடயத்திலும் உருவாகும் என்றே தெரிகிறது.

மொத்தத்தில் ஐவர் மீதான மரண தண்டனை இப்போதைக்கு பா.ஜ.க.வுக்கு  எதிராக மற்ற கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர வைத்துள்ளது. அதனால், அ.தி.மு.க. அரசு ரீதியான நடவடிக்கையில் மட்டும் கவனம் செலுத்துகிறது.

இதுவே மரண தண்டனை, மேல் நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டால், அது பா.ஜ.க.வுக்கு மட்டுமின்றி அ.தி.மு.க.வுக்கு எதிரான போராட்டமாக மாறிவிடும்.

இந்த நிலை நீடித்தால், தமிழகத்தில் பா.ஜ.க. தனித்து அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு மாற்று சக்தியாகவோ அல்லது காங்கிரஸுக்கு மாற்று சக்தியாகவோ வருவது கேள்விக்குறியாகிவிடும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஐவரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்கு எப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை வைத்துத்தான் தமிழக அரசியலில் பா.ஜ.க.வின் பாதையும் மற்ற கட்சிகளின் போக்கும் முடிவுக்கு வரும் என்பதே இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் நிலவும் தட்பவெட்ப நிலை. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .