2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

நல்ல மக்களின்றி நல்லாட்சி இல்லை

Thipaan   / 2015 ஜூலை 16 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

இலங்கையின் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல், தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்களும் ஆர்வமும் மீண்டும் அதிகரித்திருக்கின்றன. 'நல்ல' அரசியல்வாதிகளைத் தெரிவு செய்வதற்கான தங்கள் விருப்பத்தையும் ஆர்வத்தையும் பொறுப்பையும் மக்கள் வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும், இதே மாதிரியான உணர்வை மீண்டும் கொண்டிருப்பார்கள்.

எம் எல்லோருக்கும் ஊழல்கள், மோசடிகள், சட்டமீறல்கள் இல்லாத அரசாங்கத்தையும் அரசியல்வாதிகளையும் கொண்டிருக்கும் ஆர்வமிருக்கிறது. ஆனால், அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்வதற்கு மாத்திரம் எம்மில் பலருக்கு ஆர்வமிருப்பதில்லை.

முதலில், மிக அடிப்படையான விடயமாக இருப்பது, இந்த அரசியல்வாதிகள் எனப்படுபவர்கள், எங்கள் சமூகத்தின் அங்கங்கள். அவர்கள் இந்நாட்டின் கல்வித் திட்டங்களில் பாடங்களைக் கற்று, சமூகத்தின் அங்கமாக இருந்து, இந்த நாட்டிலுள்ள மதங்களை அல்லது கொள்கைகளைப் பின்பற்றி, இந்த நாட்டின் பண்பாட்டைப் பின்பற்றி வந்தவர்களே ஆவர்.

அவர்களை வெறுமனே விதிவிலக்குகள் என்றும் தட்டிக் கழித்துவிட முடியாது. அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பதன் அடிப்படையில், அவர்கள் விதிவிலக்குகள் அல்லர் என்பது ஓரளவு தெளிவாகிறது. ஆக, பிரச்சினை எங்கேயிருக்கிறது?

இலங்கையின் பெரும்பாலான வீதிகளின் இன்று மஞ்சள் கோடுகள் காணப்படுகின்றன. தலைநகரின் பெரும்பாலான வீதிகளில் மஞ்சள் கோடுகள் சமிக்ஞை விளக்குகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. வீதிகளைக் கடப்பதற்காக எங்களில் எத்தனை பேர் மஞ்சள் கோடுகளைப் பயன்படுத்துகிறோம்? மஞ்சள் கோடுகளில் சமிக்ஞை விளக்குகளுக்காகக் காத்திருந்து, வீதியைக் கடக்கிறோம்?

எம்மில் எத்தனை பேர் வீதியில் பயணஞ் செய்வதற்கான அடிப்படை விதிகளை, நடத்தைகளைப் பின்பற்றுகிறோம்? வீதியில் சனநடமாட்டமில்லாத அல்லது

பொலிஸார் இல்லாத இடங்களில் நாங்கள் விதிகளை விருப்பத்துடன் பின்பற்றுவதற்குத் தயாராக இருக்கிறோமா? எல்லா நாடுகளிலும் விதிகளைப் பின்பற்ற விரும்பாத அல்லது அவற்றை விருப்புடன் பின்தொடர விரும்பாத நிலைமை காணப்படுகிறது. ஆனால், இலங்கை, இந்தியா போன்ற கீழைத்தேய நாடுகளில் இப்பிரிவினர் பெரும்பான்மையினராக இருப்பதை மறுக்கவியலாது.

இப்போது, வீதியில் பொலிஸ் அதிகாரி இல்லாத நிலையில் வீதி விதிகளைப் பின்பற்றாத ஒரு நபர், அரசியல்வாதியாக, அதிகாரமிக்க நபராக மாறும் போது, வீதி விதிகளை மாத்திரமன்றி, அத்தனை விதிகளையும் பின்பற்றாது செய்யவே முயற்சிப்பார். குற்றங்கள் செய்தால் அதற்கான பின்விளைவு ஏற்படாது என்ற நிலை வரும் போது, அரசியல்வாதிகள் தவறு செய்வதில் வியப்புக்களேது?

அமெரிக்காவின் தலைசிறந்த ஜனாதிபதிகளுள் ஒருவராகக் கருதப்படும் ஏபிரஹாம் லிங்கன், இதைத் தெளிவாகக் குறிப்பிட்டார். 'எல்லா மனிதர்களாலும் துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், மனிதனொருவரின் உண்மையான நடத்தையை அறிய விரும்பினால், அவனுக்கு அதிகாரத்தை வழங்கிப் பாருங்கள்'.

ஆக, நல்லாட்சிக்கான முதற்படியாக, சட்டத்தை மதிக்கும் பண்புள்ள நல்ல மக்கள் உருவாக வேண்டிய தேவையிருக்கிறது. அதற்கான முழுப் பொறுப்பும், மக்களான எம்மிடத்தே தான் இருக்கிறது. இதற்காக, அரசியல்வாதிகள் மேல் தவறுகளே இல்லையென்று சொல்லிவிட முடியாது.

அனேகமான அரசியல்வாதிகள், தங்களது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக இன, மத ரீதியிலான பிளவுகளை ஏற்படுத்தியோ அல்லது ஊக்குவித்தோ, பிழைப்புவாத அரசியலை மேற்கொண்டுவரும் அவர்கள், போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவர்களுமல்லர்.

வேட்புமனுத் தாக்கல் மாத்திரமே நிறைவடைந்துள்ள நிலையில், எத்தனை குத்துக் கரணங்களும், தில்லுமுல்லுகளும் இடம்பெற்றிருக்கின்றன? ஆகவே, அரசியல்வாதிகள் மீது தவறுகள் இல்லையென்ற முடிவுக்கு வரப்படக்கூடாது.

மாறாக, இவ்வாறான அரசியல்வாதிகளை உருவாக்குவதிலும் அவர்களைத் தெரிவுசெய்வதிலும், மக்களினுடைய பங்கு பற்றிய கவனம் செலுத்தப்பட வேண்டும். அரசியல்வாதிகள் மீதான விமர்சனங்கள் வெறுமனே வெளிப்படையானதாக, இருந்துவிடக்கூடாது,

நாட்டின் ஊழல் பெருச்சாளிகளும் போதைமருந்துக் கடத்தல்காரர்களும் இன்னோரன்ன குற்றவாளிகளும், தொடர்ச்சியாக பல்லாயிரக்கணக்கான வாக்குகளைக் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது, இந்த மோசமான தெரிவுகளை மக்கள் மேற்கொண்ட வண்ணம் இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டுகிறது.

இலகுவாக, 'இல்லை. அவர்கள் அதிகாரத்தையும் பணத்தையும் துஷ்பிரயோகம் செய்து வாக்குகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்' எனத் தெரிவித்துவிட்டுப் போகலாம். ஆனால், மக்களினுடைய வாக்குகள் அவற்றில் பெரும்பங்கை வகிக்கின்றன என்பது அப்பட்டமான, மறுக்க முடியாத உண்மை.

ஜனநாயகத்தின் அடிப்படையில், நாங்கள் பெறத் தகுதியான அரசியல்வாதிகளையே பெற்றுக்கொள்ள முடியும். எங்களுடைய வாக்குகளை தகுதியற்றவர்களுக்கு அளித்துக் கொண்டிருந்தால், தகுதியற்ற அரசியல்வாதிகளையே தொடர்ந்தும் பெற்றுக் கொண்டிருக்க வேண்டியேற்படும். ஆனால், இங்கு தான் எமக்கான சவால் எழுகிறது, எல்லா அரசியல்வாதிகளும் இறுதியில் சுயநலவாதிகளாகவே மாறப் போகின்ற நிலையில், எமக்கான தெரிவு தான் என்ன?

அரசியலென்பது இலகுவானதொன்றும் அல்ல. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவைப் பெற்றுக் கொள்வது கடினமானது. அதற்கே பணம் செலுத்த வேண்டியேற்படும். அதனைத் தொடர்ந்து, விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக, பலதரப்பட்ட விளம்பரங்கள், பிரசாரங்களை மேற்கொள்வதற்கு அதிகமான பணம் தேவைப்படும் நிலை இருக்கிறது.

ஊடக ஆளணியொன்றை அதற்காக நிர்வகிக்க வேண்டிய தேவையுண்டு. அதற்கான செலவுகள் காணப்படுகின்றன. இவ்வாறு, தேர்தலுக்கு முன்னரான செலவுகள் பல மில்லியன்களைத் தாண்ட, தேர்தலின் பின்னும் கூட தனிப்பட்ட பிரசாரங்களுக்கும் மக்கள் தொடர்புக்குமாக, ஏராளமான பணத்தைச் செலவிட வேண்டியேற்படுகிறது. இவற்றுக்கெல்லாம் சொந்தப் பணத்தைச் செலவிட்டு, மக்களுக்கான சேவைகளைச் செய்வதற்கு யாரும் இங்கில்லை. அந்தளவுக்கு தூய எண்ணம் கொண்டோரும் இங்கில்லை. இந்தச் செலவுகளைச் சமாளிப்பதற்காக முறைகேடுகள் ஆரம்பிக்கின்றன.

ஆக, பிரசாரங்களுக்காக அன்றி, கொள்கைகளின் அடிப்படையில் (அப்படி ஏதுமிருப்பதாக அவர்கள் வெளிப்பறடுத்தினால்!) அவர்களைத் தெரிவு செய்யக்கூடிய பொறுப்பு மக்களிடத்தே இருக்கிறது.

அதேபோல, தன்னுடைய இனத்தை, மதத்தை, ஊரை, சாதியை முன்னிறுத்தும் வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளிப்பதையும் மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய தேவையுண்டு. தன்னுடைய இனத்தை அல்லது சாதியை மாத்திரம் பிரதானப்படுத்தும் எந்தவொரு நபரும், நல்லாட்சிக்கான பங்கினை வகிக்க முடியாது. ஆகவே, குறித்த நபரொருவரை இனத்துக்காகத் தெரிவுசெய்வதை விடுத்து, அதிகபட்ச சேவைகளை, குறித்த மாவட்டத்துக்கோ அல்லது தொகுதிக்கோ அல்லது ஒட்டுமொத்த நாட்டுக்கோ செய்யக்கூடியவரைத் தெரிவுசெய்வது, நல்லாட்சிக்கான சிறந்த அடித்தளமாக இருக்கும்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக, நாட்டின் சட்டதிட்டங்களையும், உலகின் மனித ஒழுக்கங்களையும் பண்புகளையும் மதிக்கின்ற சமூகமொன்றை உருவாக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உண்டு. சட்டத்தினை மதிக்கின்ற சமூகமொன்றிலிருந்து, மோசமான பண்புகளையுடைய அரசியல்வாதிகள் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்படுகிறது,

ஆகவே நல்லாட்சிக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. அத்தோடு, நல்லாட்சி என்பது வெறுமனே அரசியல்வாதிகளுடன் தேர்தல் முடிந்தவுடன் முடிந்துபோகப் போவதில்லை. எனவே, நாட்டின் அரசாங்கம், அரசியல்வாதிகள், அதிகாரிகள், கீழ்நிலை உத்தியோகத்தர்கள் தொடர்பான முழுமையான கவனத்தைச் செலுத்துவதோடு, ஒவ்வொருவரும் தனிப்பட்டு தங்களது பங்களிப்பை மேற்கொண்டாலே, நாட்டில் நல்லாட்சிக்கான வாய்ப்புக்கள் ஏற்படும்.

மாறாக, கடந்த நாடாளுமன்றக் காலத்தில் மக்களுக்காக எதையும் செய்யாதவர்களை அல்லது புதியவராக இருந்தால், எதையும் செய்ய வாய்ப்பில்லாதவர்களை வாக்களித்துத் தெரிவு செய்தால், எங்களுக்குக் கிடைக்கப் போகும் விடையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. அமெரிக்காவின் பிரபல ஊக்கப்படுத்துகைப் பேச்சாளரும் எழுத்தாளருமான அன்டி றொபின்ஸ் தெரிவித்த கருத்துக்கள் இதற்கு மிகவும் பொருத்தமானவை. 'நீங்கள் எப்போதும் செய்தவற்றையே தொடர்ந்தும் செய்து கொண்டிருந்தால், நீங்கள் பெற்றுக் கொண்ட விளைவுகளையே தொடர்ந்தும் பெற்றுக் கொண்டிருப்பீர்கள்'.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .