2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தமிழகத்தின் அரசியல் பாதயாத்திரை

Thipaan   / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தி  .மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் பாதயாத்திரை செல்கிறார். வருகின்ற செப்டெம்பர் 25ஆம் திகதி, 133 அடி திருவள்ளுவர் சிலை இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து யாத்திரையைத் தொடங்குகிறார். 38 நாட்கள் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் செல்லும் அவர், அ.தி.மு.க. அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் பற்றி மக்களிடம் நேரடியாகப் பேசப் போவதாக அறிவித்திருக்கிறார்.

மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடல், பொதுக்கூட்டங்கள், சாலையோர நிகழ்ச்சிகள் என்று 'மக்கள் சங்கமம்' என்ற இந்த திருவிழாவுக்கு தி.மு.க சூட்டியுள்ள பெயர் 'நமக்கு நாமே'. இப்பயணம் இரு விதத்தில் தி.மு.க.வுக்கு மிக முக்கியமானது. முதலில் தி.மு.க.வுக்குள் அறிவிக்கப்படாத முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என்பது இந்தப் பாதயாத்திரையில் உறுதி செய்யப்படும்.

இன்னொன்று மக்களிடம் நேரில் சென்று ஆதரவு திரட்டுவதால் மற்றைய கட்சிகள் 'தி.மு.க.தான் அடுத்து ஆட்சிக்கு வரும், ஆகவே அக்கட்சியுடன் கூட்டணி வைப்போம்' என்ற எண்ணவோட்டத்துக்கு வரும். இதுவரை 'மதுரையில் கேள்வி கேட்கும் பேரணி', 'கடலூரில் நீதி கேட்கும் பேரணி' நடத்தி முடித்து விட்ட தி.மு.க., இந்தச் சுற்றில் பாதயாத்திரை புறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு செப்டெம்பர் 5ஆம் திகதி திருப்பூர் மாவட்டத்தில் 'மீண்டுமொரு பேரணி' போன்ற மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்தும் அக்கட்சி 'நுடநஉவழைn அழனந' என்று சொல்வார்களே, அந்தக் கட்டத்துக்கு அவசரமாக வந்து நிற்கிறது.

இந்தப் பாதயாத்திரை அறிவிப்புக்கு முன்பு 'மதுவிலக்கை அமுல்படுத்துவோம்' என்று பிரகடனப்படுத்தி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது தி.மு.க. இதனால், மதுவிலக்குப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்து, இன்றைக்கு அ.தி.மு.க. தவிர அனைத்துக் கட்சிகளுமே 'மதுவிலக்கு வேண்டும்' என்ற ஒற்றைக் கோஷத்தை ஓங்கி ஒலிக்கின்றன. முதலில் 'மதுவிலக்கு அமுல்படுத்தப்படும்' என்ற தி.மு.க. அறிவிப்பு, காந்த சக்தி கொண்டதாக மக்கள் போராட்டத்தைத் தூண்டி விட்டது என்றே சொல்ல வேண்டும். இந்த அறிவிப்புக்குப் பிறகு அதற்காக நீண்டகாலமாகப் போராடிய காந்தியவாதி சசிபெருமாள், நாகர்கோயிலில் 150 அடி அலைபேசிக் கோபுரத்தில் ஏறி 'இறங்கமாட்டேன்' என்று போராடினார்.

அவரை அப்படியே கோபுரத்தில் இருக்கவிட்டதால், அங்கேயே உடல் நலம் குன்றிய அவர் கீழிறக்கப்பட்ட போது கிட்டத்தட்ட இறந்து போன நிலைதான். அவர் உயிரிழப்பு மதுவிலக்குப் போராட்டத்தில் 'திருப்புமுனை' என்றே சொல்ல வேண்டும்.

இதை அடிப்படையாக வைத்து எழுச்சி ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் 'டாஸ்மாக் மது பானக் கடைகள்' முன்பு ஆர்பாட்டம், போராட்டம் என்று தொடங்கின. அடுத்து - வைகோ,

மாக்ர்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அடங்கிய 'மக்கள் கூட்டு இயக்கம்' சார்பில் தமிழக பந்த் அறிவிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கலந்து ஆலோசிக்காமல் வைகோவே பந்த் அறிவித்து விட்டார் என்ற குற்றச்சாட்டு கிளம்பினாலும், 'மக்கள் கூட்டு இயக்கத்தில்' உள்ள கட்சிகள் அனைத்தும் இந்த பந்தை ஆதரித்தன. ஓகஸ்ட் 4ஆம் திகதி நடைபெற்ற இந்த பந்த்தில் பா.ம.க., தி.மு.க. போன்ற கட்சிகள் பங்கேற்கவில்லை.

அவர்களின் ஆதரவை பந்தை அறிவித்தவர்களும் கோரவில்லை. ஆனால், இ.காங்கிரஸ், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் தாங்களாகவே முன்வந்து ஆதரவளித்தன. இந்த பந்த் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்றாலும்,மாநிலம் முழுக்க மதுக்கடைகளுக்கு பொலிஸ் பாதுகாப்புப் போட வேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டது.

அதன் பிறகு ஓகஸ்ட் 6ஆம் திகதி மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி பொலிஸ் அனுமதி இல்லாமல் விஜயகாந்த் 'கோயம்பேடு முதல் கோட்டை' வரை மனித சங்கிலிப் போராட்டம் அறிவித்தார். அதற்கு பொலிஸ் அனுமதி கொடுக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்திலும் அனுமதி கோரிப் பார்த்தார்.

ஆனால், நீதிமன்ற தீர்ப்பு வரும் முன்பே 'மனிதச் சங்கிலி' போராட்டத்தை விஜயகாந்த் கோயம்பேட்டில் தொடங்கினார். அதில் விஜயகாந்த், அவர் மனைவி பிரேமலதா ஆகியோர் கைது செய்யப்பட்டு, இரவில் நீண்ட நேரத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். ஓகஸ்ட் 7ஆம் திகதி,அலைபேசிக் கோபுரத்தில் ஏறி இறந்த சசி பெருமாளின் உடலைப் பெற்றுக் கொண்டு சேலத்தில் அவரது உறவினர்கள் நல்லடக்கம் செய்தார்கள்.

அங்கு தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக ஓகஸ்ட் 10ஆம் திகதி தி.மு.க.வின் சார்பில் 'மதுவிலக்கை உடனே அமுல்படுத்தக் கோரி' மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இது எல்லாம் முடிந்த பின்னர் ஓகஸ்ட் 15 சுதந்திர தினம் வருகிறது.

அன்றைய தினம் மதுவிலக்கை அமுல்படுத்தியோ அல்லது இருக்கின்ற மதுக் கடைகளைக் குறைத்தோ முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இப்படி தமிழக அரசியல் ஜூலை மாதத்தில் இருந்து இந்த ஓகஸ்ட் மாதம் வரை 'மதுவிலக்கு மாதமாக' காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களின் பலத்துக்கு ஏற்றவாறு 'மதுவிலக்கு அரசியலை' முன்னெடுத்துச் செல்கின்றன. தமிழக மக்கள் மத்தியிலும் 'மதுவிலக்கு வர வேண்டும்', 'மதுக்கடைகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும்' என்ற எண்ணம் பெருகி வருகிறது.

மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பதில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இருந்தாலும், 'கூட்டணி' என்பதிலோ, அனைவரும் ஒன்றாகப் போராடுவோம் என்பதிலோ எந்தக் கட்சிகளும் ஒரே அணியில் சேரவில்லை என்பது தமிழக அரசியலின் துரதிர்ஷ்டம். 'தி.மு.க. அல்லது அ.தி.மு.க.' ஆகிய இரு கட்சிகளில் ஒன்றை எப்படித் தேர்வு செய்வது என்பதில் உள்ள குழப்பமே இதற்குக் காரணம்.

இந்தக் குழப்பத்தைப் பார்த்துத் தயங்கி நிற்க, தி.மு.க. போன்ற கட்சியோ, அ.தி.மு.க.வோ தயாராக இல்லை. இதுதான் ஸ்டாலினின் பாதயாத்திரை அறிவிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்க முடியும். தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே இருக்கும் நிலையில், கூட்டணிக் கட்சிகளின் தயவுக்காகக் காத்திருப்பதை விட, மக்களிடம் சென்று நேரடியாகத் தங்களுக்கு ஆதரவு திரட்டுவதே சாலச்சிறந்தது என்று கருதுகிறது தி.மு.க. தலைமை.

இதனால்தான் இந்தப் பாதயாத்திரை பல்வேறு தரப்பு மக்களையும் சந்திக்கும் வகையில் அமைக்கப்பட்டு, மூன்று கட்டங்களாக தமிழகத்தில் நடக்கப் போகிறது. இறுதியில் நவம்பர் 8ஆம் திகதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 'ஸ்டாலின் யாத்திரை' நிறைவுக்கு வருகிறது. 'மக்கள் சந்திப்பு' என்பதை முன் வைத்து தி.மு.க. காய் நகர்த்திக் கொண்டிருக்கின்ற வேளையில், சென்னையில் வித்தியாசமான நிகழ்ச்சி ஓகஸ்ட் 7ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

முதல் 'தேசிய கைத்தறி தினத்தை' முதல் முறையாக தமிழகத்தில் மத்திய அரசு கொண்டாடியிருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு நாடு முழுவதும் இருந்து கைத்தறி நெசவாளர்கள் வந்திருந்தார்கள். தமிழில் பேசிய பிரதமர் மோடி கூட்டத்தை மகிழ்வித்தார். இக்கூட்டம் முடிவடைந்ததும் அவர் நேராக முதல்வர் ஜெயலலிதா வசிக்கும் போயஸ் தோட்டத்துக்குச் சென்றார்.

அங்கு முதலமைச்சருடன் சந்தித்துப் பேசினார். 'லேடியா, மோடியா' என்று பிரதமர் நரேந்திரமோடி பற்றித் தேர்தல் பிரசாரத்தில் தாக்குதல் நடத்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் இது மூன்றாவது சந்திப்பு. முதலில் பிரதமரானதும் ஜெயலலிதா - டெல்லி சென்று நரேந்திரமோடியைச் சந்தித்தார். பிறகு ஸ்ரீஹரிஹோட்டாவுக்குச் செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் பிரதமரை முதலமைச்சர் ஜெயலலிதா சந்தித்தார்.

இப்போது மூன்றாவது முறையாக ஜெயலலிதாவின் வீட்டுக்கே சென்று மோடி அவரைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்புகள் அனைத்திலுமே அரசியல் இருக்கிறது என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழகத்தில் மாறி வரும் அரசியல் சூழ்நிலையில் பாரதிய ஜனதாக் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம் என்பதால் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு உச்சத்தில் இருந்த போது சென்ற 2011 சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க வேறு வழியின்றி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதே போன்றதொரு நெருக்கடியில் இருக்கிறது அ.தி.மு.க.

முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இது போன்றதொரு அரசியல் சூழலில் மத்திய அரசுடன் நட்புப் பாராட்டும் விதமாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் கட்டாயம் அ.தி.மு.க.வுக்கு வரலாம் என்பதே தமிழக அரசியல் வட்டாரத்தில் நிலவும் கருத்து. இந்த அடிப்படையில் பார்த்தால் 'மக்களை நோக்கி' பாதயாத்திரை செல்கிறது தி.மு.க என்றால் பா.ஜ.க.வை நோக்கி பக்குவமாக நகர்ந்து செல்கிறது அ.தி.மு.க.

இந்த இரு திராவிடக் கட்சிகளின் அசைவுகளையும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன மற்றைய அரசியல் கட்சிகள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X