2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இந்திய - மீனவர் பிரச்சினைக்கு புறக்கணிப்பு தீர்வைத் தராது

Mayu   / 2024 பெப்ரவரி 27 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

எல்லை தாண்டிய மீன்பிடி காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கும் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் இந்திய நாட்டின் பக்தர்கள் கலந்து கொள்ளாமைக்கும் இருக்கின்ற தொடர்பு சற்று வித்தியாசமானதுதான்.

எப்படியாயினும், இந்திய மத்திய அரசும், தமிழ்நாட்டு அரசும் இந்திய-இலங்கை மீனவர்களுக்கிடையில் இருக்கும் முரண்பாட்டினைத் தீர்த்துவைக்க முயற்சிக்க வேண்டும். அந்த முயற்சி இலங்கை நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாட்டினைப் பாதிக்காத வகையில் அமையவேண்டும்.

1921ஆம் ஆண்டு இந்திய - இலங்கை பிரிட்டிஷினால் செய்துகொள்ளப்பட்ட மீன்பிடி ஒப்பந்தத்தின்படி இந்திய மீனவர்களுக்குப் பாக்கு நீரிணையில் அதிக கடல்பகுதியும், இலங்கை மீனவர்களுக்குக் குறைவான கடல் பகுதியும் பிரிக்கப்பட்டது. அதில் கச்சத்தீவு உள்ளிட்ட 28 கடல் மைல் பகுதிகள் இந்தியாவுக்கும் நெடுந்தீவு உள்ளிட்ட 12 கடல் மைல் கடல் பகுதிகள் இலங்கைக்கும் என பிரிக்கப்பட்டன.

1974இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. அதனால் இந்திய மீனவர்கள் பயன்படுத்தி வந்த 500 சதுர கி.மீ. கடல் இலங்கை வசமாகியது. இதனால், தமது பாரம்பரிய மீன்பிடி பகுதிகள் பறிபோனதாக இந்திய மீனவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால், 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தின் 6ஆம் சரத்துப்படி இந்த 500 சதுர கி.மீ. பரப்பளவில் இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடிக்க உரிமையுள்ளது.

இருந்தாலும் பாக்கு நீரிணைப் பகுதியில் இழுவைப் படகுகளைப் பயன்படுத்துவதும் இழுவை வலைகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதனாலேயுமே பிரச்சினைகள் எழுகின்றன. இந்திய- இலங்கை மீனவர்களிடையே இருக்க வேண்டிய ஒற்றுமை சீர்குலைவுக்கும் இதுவே காரணம்.

பாக்கு நீரிணை கடல்பகுதியில் இந்திய மீனவர்கள் இழுவை வலையைப் பயன்படுத்தக் கூடாது என்பது இலங்கை மீனவர்களின் கோரிக்கை. இந்த நடைமுறையைக் கைக்கொள்ள முடியாமையினால் ஏற்படும் பிரச்சினை பல தசாப்தங்களாகத் தொடர்கின்றன எனலாம். இழுவைப்படகுகளின் செயற்பாட்டினால், இலங்கைக் கடற்பரப்பிலுள்ள மீனும் பிற வளங்களும் அழிகின்றன.

அதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இவ்வாறான சூறையாடலுக்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவும் இருக்கிறது என்பதே இலங்கை மீனவர்களது கருத்து. அதற்கு இலங்கைக் கடற்பரப்பில் கைது செய்யப்படும் தமது மீனவர்களது விடுதலை தொடர்பில் கொடுக்கப்படும் அழுத்தம் உதாரணமாகக் காட்டப்படுகிறது. யுத்த காலங்களிலும் இப்பிரச்சினை இருந்திருந்தாலும், யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் அதிகரித்திருப்பதாகவே உணரப்படுகிறது.

இலங்கை அரசாங்கமானது இப்பிரச்சினையைப் பூதாகாரமாக்குவதற்கு இலங்கைத் தமிழர்கள் தமிழக மீனவர்களுடனும், இந்தியாவுடனும் முரண்படும் நிலை அல்லது முறுகல் நிலை ஏற்படுவதற்காக இருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுகிறது. அதேநேரத்தில், இந்தியா ஆதிக்க மனோநிலையிலேயே செயற்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இலங்கையர்கள் மாத்திரமன்றி, இந்தியப் பக்தர்களும் இணைந்து வருடம்தோறும் வெகு விமர்சையாக கொண்டாடும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இவ்வருடம் இந்தியர்களில்லாது நடைபெற்று முடிந்திருக்கிறது.

திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து 4,454 பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்தியப் பக்தர்கள் மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி எவரும் வருகை தரவில்லை. பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வரலாற்றுத் தவல்களின்படி 111 திருவிழாவாக இது அமைந்திருந்தது.

இத்திருவிழாவுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டு அநாகரிகப்படுத்தப்படாது, ஆன்மீக நலன்களை மேவும் புனிதமான திருவிழாவாக நடைபெறவேண்டுமென்பதே கத்தோலிக்க மக்களின் வேண்டுகோளாகும் என்று திருவிழாவை இந்தியர்கள் பகிஷ்கரிக்கக்கூடாது எனவும் கருத்துக்கள், வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, தீர்க்கப்படாமல் இழுபட்டுச் செல்லும் இரு நாட்டு மீனவர் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு ஏற்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

இழுவை மடிகளைக் கொண்ட ரோலர் படகுகள் கடல் வளத்தை நாசப்படுத்திக் கொண்டிருப்பதனை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது. சாதாரண நாட்கூலிகளான மீனவர்கள் ரோலர் படகுகளின் சொந்தக்கார முதலாளிகளின் பிடிகளுக்குள் அகப்பட்டுச் செய்வதறியாது, கட்டளைகளுக்குப் பணிந்து தொழில் செய்யும் சூட்சுமம் உயர்மட்ட அளவில் நிறுத்தப்பட வேண்டும். இதை விடுத்து, ஆன்மீகத்திற்கும் வியாபாரத்திற்கும் முடிச்சுப் போடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என மட்டக்களப்பு ஆயர் இல்ல அருட்தந்தை ஜே.ஐ.சந்திரா இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கிடையில், இந்திய இழுவை படகுகளுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் ஒன்றினை இந்திய- இலங்கை கடல் எல்லையில் நடத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. இப் போராட்டம் இந்தவாரத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய இழுவை படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தொழில் முதல்களை அழித்து வந்தவேளை, எமது கடற்படையினரால் அந்த இந்திய இழுவைப்படகுகள் கைப்பற்றப்பட்டு அதில் பயணித்த கடற்றொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இப்போது இந்திய அரசாங்கம், அந்த கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யுமாறு எமது அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. எங்களுடைய வளங்களை அழித்தவர்களை எப்படி விடுதலை செய்ய முடியும்? அவர்களுக்குரிய தக்க தண்டனை கொடுத்த பின்னரே அவர்களை விடுதலை செய்யலாம். ஏனென்றால் எங்களது வளங்கள் எத்தனையோ காலமாக அழிக்கப்பட்டுள்ளன.

எங்களுடைய வளங்களைச் சூறையாடி தங்களது பிழைப்புகளை நடத்தியவர்கள், தங்களது மீனவர்களை எமது அரசாங்கம் பிடித்து வைத்துள்ளபோது அவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள் என்பது அவர்களது குற்றச்சாட்டு. எங்களது அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியக் கூடாது.

கைது செய்த மீனவர்களுக்குத் தக்க தண்டனையைக் கொடுக்க வேண்டும் எக்காரணம் கொண்டும் அவர்களிடம் மண்டியிடக் கூடாது என்ற பிடிவாதத்துடன் இருக்கின்ற இலங்கை மீனவர்களுக்கு அரசாங்கங்கள் எவ்வாறான முடிவைக் கொடுக்கப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்திய இழுவைப் படகுகள் பல சூழலியல் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளன. மீன்களின் பெருக்கமும் வளர்ச்சியும் இப் படகுகளின் செயலால் ஏற்படுகின்றன.

இழுவைப் படகு மீன்பிடி என்பது, கடலின் அடிவரை உள்ள அனைத்தையும் வாரி அள்ளி எடுப்பதாகும். இந்த மீன்பிடி முறையில், வலையை வீசி, கடலின் அடி வரையுள்ள அனைத்தையும் அள்ளுவதால், மீன்களின் வகை, வளர்ச்சி கருத்தில் கொள்ளப்படுவதில்லை. கடலடித் தாவரங்கள் அழிகின்றன. இதனால், கடலடி உயிரியல் சமநிலையைப் பாதிக்கப்படுகிறது.

கடல் வாழ் உயிரினங்கள், கடலடித்தள உயிரியல் நிலைப்புக்கு வேண்டிய நுண்ணுயிரிகளும் உயிரினங்கள், கடலடி பவளப்பாறைகளும் முருகைக் கற்களும் அழிகின்றன. மீன்களின் முட்டைகளும் குஞ்சுகளும் அழிவதனால், மீன்களின் இனப்பெருக்கம் தடுக்கப்படுவதுடன், நீண்டகாலத்தில் மீனிருப்புக்குப் பாதிப்பு என பல சூழலியல் பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கின்றது.

இந்திய-இலங்கைத் தமிழர்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத் தரும் என்றே இப்போதும் பெரும்பாலான தமிழ்த் தேசியக் கட்டுக்குள் இருக்கும் அரசியல்வாதிகள் நம்புகின்றனர்.

ஆனால், வருடத்திற்கு ஒரு தடவை நடைபெறும் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவுக்கு இந்தியப் பக்தர்கள் வருகை தரா, இந்தியப் பக்தர்களில்லாத திருவிழா நடைபெறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசும் பல வழிகளிலும் இந்திய மீனவர்களது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மத்திய அரசைக் கோரிவிட்டது ஏன் அப்பிரச்சினை தீர்க்கப்படாமலேயே தொடர்கிறது என்பது புரியாத புதிரே. இந்திய மத்திய அரசாங்கமானது வருடத்தில் குறிப்பிட்டளவான நாட்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கோருகிறதே தவிர, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையோ, இழுவைப் படகுகளால் ஏற்படும் சூழலியல் நீண்ட காலப் பிரச்சினையையோ கவனத்தில் எடுப்பதாக இல்லை. இவ்வாறான நிலையில் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்பதே வெளிப்படை.

27.02.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .