Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
R.Tharaniya / 2025 மே 01 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
முருகானந்தம் தவம்
இலங்கையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடம் ஏறியது முதல், நாட்டில் அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களையும் அதில் கொல்லப்பட்டவர்களையும் வெறுமனே பாதாள உலகக் குழுக்களுடனும் போதைவஸ்து வர்த்தகத்துடனும் மட்டும் தொடர்புபடுத்தி கடந்து போக அரசு முயற்சிப்பதாகவே தெரிகின்றது.
ஆனால், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் படுகொலைகளும் இவற்றுக்கு அப்பால் அரசியல் மற்றும் சாட்சியங்கள் அழிப்புகளுடன் தொடர்புபட்டுள்ளமையாகவே கருதப்பட வேண்டியுள்ளது.
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்று வரையான நான்கு மாத காலப்பகுதியில் 40க்கு மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளன. இந்த துப்பாக்கிச் சூடுகளில் இதுவரை 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் 25 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டவை என்றும் ஏனைய சம்பவங்கள் தனிப்பட்ட விரோதம் காரணமாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் என்றும் கூறப்பட்டாலும் இந்தப் படுகொலைகளில் சிலவற்றின் பின்னணியில் அரசியல் உள்ளமை அனைவருக்கும் தெரிந்த இரகசியமாகவுள்ளது.
இவ்வாறான படுகொலைகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு நெருக்கமாக இருந்த அருண விதாகனகே மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்துடன் நெருக்கமான டேன் பிரியசாத் ஆகியோரின் படுகொலைகள் அரசியல் படுகொலைகளாகவும் சாட்சியம் அழிப்பு கொலைகளாகவும் இருக்கலாம் என்ற சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளன.
அருண விதாகனகே,டேன் பிரியசாத் ஆகியோர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்களாக இருந்த நிலையிலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது பல்வேறு வழக்குகள், விசாரணைகள், குற்றச்சாட்டுகள் இருப்பதால் இவர்களுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்குமிடையில் தொடர்புகள் இருக்கலாம்.
அதனால் அவர்களுக்கிடையிலான முரண்பாடுகளினால் இக்கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என பாதுகாப்புத் தரப்புக்களினால் தெரிவிக்கப்படுகின்றபோதும், இவர்கள் இருவரும் சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட சில தினங்களிலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளமை தான் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
‘மித்தெனிய கஜ்ஜா’ என அழைக்கப்படும் அருண விதான கமகே கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி மித்தெனிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் அருண விதான கமகேயுடன் அவரது 2 குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.
மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசியான இவர், பல்வேறு கொலைகள், குற்றங்களுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர். அருண விதான கமகே ‘அரகலய' ஆர்ப்பாட்டத்தில் மூவரைக் கொலை செய்த குற்றச்சாட்டுக்குமுள்ளானவர்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். இவ்வாறான நிலையில், இவர் கொல்லப்படுவதற்கு ஓரிரு சில தினங்களுக்கு முன்னர், சமூக ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில், ராஜபக்ஷக்களின் பல இரகசியங்களை அறிந்து வைத்துள்ளதால் தான் எவ்வேளையிலும் கொல்லப்படலாம் என கூறியிருந்தார்.
அதேபோன்றே அவர் ஓரிரு தினங்களுக்குள் படுகொலை செய்யப்பட்டார்.
அடுத்ததவரான டேன் பிரியசாத் படுகொலையும் இதே பின்னணியைக் கொண்டதாகவே இருக்கின்றது. இவரும் ராஜபக்ஷக்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவர். ‘அரகலய' போராட்டம் மீது தாக்குதல் நடத்தியவர்களில் முக்கியமானவர். 2017ஆம் ஆண்டு ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கியமானவர்.
2018ஆம் ஆண்டின் திகன இனக் கலவரத்தின் முக்கிய சூத்திரதாரியாக இருந்தவர், முள்ளிவாய்க்கால் படுகொலைகள், யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்து கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் குழப்பம் விளைவித்தவர். இவர் ஒரு மிக மோசமான இனவாதி.
‘நவ சிங்கள தேசிய இயக்கத்தின்’ ஒருங்கிணைப்பாளரான இவரை, மஹிந்த ராஜபக்ஷவின் மொட்டுக் கட்சியினர் சமூக செயற்பாட்டாளர் என அழைப்பதுடன், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமது கட்சி வேட்பாளராகவும் நிறுத்தியுள்ள நிலையிலேயே கடந்த 22ஆம் திகதி மாலை வெல்லம்பிட்டியில் உள்ள ‘லக்சந்த செவன’ வீட்டுத்திட்ட வளாகத்தில் வைத்து இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரும் சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஓரிரு தினங்களிலேயே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியிருக்கும் பின்னணியில் சுட்டுக்கொல்லப்பட்ட அருண விதான கமகே, டேன் பிரியசாத்திற்கு இந்தத் தாக்குதல்கள் குறித்த தகவல்கள் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. இதனால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் சூத்திரதாரிகள் யார் என்பது வெளிப்பட்டு விடும் என்பதால் இவர்கள் ‘ஒப்பந்த கொலைகாரர்கள்' மூலம் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ள மித்தெனிய கஜ்ஜா என்றழைக்கப்படும் அருண விதான கமகே, டேன் பிரியசாத் ஆகியோர் ராஜபக்ஷக்களிற்கு ஆதரவாகவே செயற்பட்டு வந்துள்ளனர். அவர்களுக்காவே பல குற்றங்களிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவ்விருவரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைகளுக்கு அழைக்கப் பட்டு விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் எவ்வேளையிலும் கைதாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்த சூழலிலேயே இருவரும் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரினது படுகொலைகளில் இருபக்க குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ராஜபக்ஷக்களுக்கு நெருக்கமான இவர்கள் பல்வேறு கொலைகள், குற்றங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு இவர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதால்,
இவர்கள் கைதானால் ராஜபக்ஷக்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள், இரகசியங்கள் வெளியாகும் என்ற அச்சத்தால் இவ்விருவரும் ‘ஒப்பந்த கொலைகாரர்கள்' மூலம் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் ராஜபக்ஷக்களின் இரகசியங்கள் தெரிந்த சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பது ஒரு பக்க குற்றச்சாட்டு.
இவர்கள் இருவரும் ஜே.வி.பியின் பின்னணியில் இடம்பெற்ற ‘அரகலய' போராட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டவர்கள், அருண விதானகமகே ‘அரகலய' ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவரைச் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டுக்குள்ளானவர்.
டேன் பிரியசாத் கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்று வந்த ‘அரகலய' போராட்டத்தின் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியவர்களில் மிக முக்கியமானவர். ஆக, தற்போது ஜே.வி.பியே தேசிய மக்கள் சக்தியாக ஆட்சியில் இருக்கும் நிலையில், போராட்டக்காரர்களை கொன்றவரும் போராட்டத்தின் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளமை ஒரு அரசியல் பழிவாங்கல் படுகொலை என்பது
மற்றைய பக்க குற்றச்சாட்டு.
பாதாள உலகக் குழுக்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவினர் என பலரும் கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுடனும் அரசியல் கட்சிகளுடனும் தொடர்புகளைப் பேணி வந்தனர். அரசியல்வாதிகளும் தமது அரசியல் தேவைகளுக்காக அவர்களைப் பயன்படுத்தியிருந்ததுடன், சட்டத்தை நிலைநாட்டும் தரப்பினர்களால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படாதும் பாதுகாத்து வந்தனர்.
எனினும்,தற்பொழுது ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசு எவருக்கும் அஞ்சாது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ள நிலையிலேயே தமது கடந்தகால நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் தற்பொழுது வெளிவந்துவிடும் என்ற அச்சத்தினால் இதுபோன்ற ‘சாட்சிகளை அழிக்கும்' படுகொலைகள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago