2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிறுபான்மையினருக்கு தீர்வில்லாத நில ஆக்கிரமிப்பு

Editorial   / 2023 ஒக்டோபர் 29 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம் 

சிறுபான்மை இன மக்களின் பூர்வீக நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டே வருகிறது. திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் இந்த நிலவரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அண்மையில் அரிசி மலை விகாரைக்கு அண்மித்த பகுதியில் பௌத்த மதகுரு ஒருவரினால் பூஜா பூமி என்ற அடிப்படையிலும் தொல்பொருள் என்ற போர்வையில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. 

 அரிசிமலை விகாரையை அண்மித்த பல ஏக்கர் நிலங்கள் தனியார் மக்களுக்குச் சொந்தமான விவசாய காணியாகும் இவர்களின் வாழ்வாதாரம் மீன் பிடி விவசாயம் சேனை பயிர்ச் செய்கை என ஜீவனோபாயமாக காணப்படுகிறது.

 அப்பாவி மக்களின் காணிக்குள் அடாத்தாகக் கையகப்படுத்த முனையும் பௌத்த பிக்குகளை யாரும் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குப் போகின்றது. 

 ஏழை மக்களின் காணிகளை அதுவும் சிறுபான்மை சமூகத்தினரின் காணிகளே கபளீகரம் செய்கின்றனர். பூஜா பூமி,  தொல்பொருள் திணைக்களத்தின் மூலமான வர்த்தமானி அறிவித்தல் என மக்கள் காணிகளை அவர்களது விவசாய பூர்விக நிலங்களைக் கையகப்படுத்த முனைகின்றனர். 

இது தொடர்பில் உரிய தரப்புக்கள், அம்மக்களுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத் தருவதில்லை எனவும் அங்கலாய்க்கின்றனர். 

தேர்தல் காலங்களில் வாக்கு கேட்பதற்காக வரும் அரசியல் தலைமைகள் அரசியல்வாதிகள் காணி பிரச்சினை என்றால் வருவதில்லை, வெறுமென அறிக்கைகளை மாத்திரமே விடுகிறார்கள், செயலில் காட்டுவதில்லை. தீர்வில்லாமல் வாழ்க்கை தொடர்கிறது எனவும் தெரிவிக்கின்றனர். 

 பிரச்சினைக்கான தீர்வு இல்லாமல் திருகோணமலை மாவட்ட சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவது வருத்தமளிக்கிறது. 

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கூட பங்கேற்காத நிலையில் காணப்படுகிறார்கள். சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு வருகின்றன.

பெரும்பான்மை இன மக்கள் யாருமே இல்லாத இடத்தில் பௌத்த விகாரை அமைக்கவும் சிலை வைக்கவும் முயற்சிக்கின்ற பௌத்த மதகுருக்கள்  மூலமாக மக்களுக்கான தொடர் பிரச்சினையாக இலுப்பைக்குளம் பகுதியிலும் நடந்தேறுகிறது.

எந்த அரசாங்கம் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் நிலப் பிரச்சினைகள் தீர்வதில்லை. விவசாய நிலங்கள், மக்கள் காணிகள் அடாத்தாக கையகப்படுத்த முனைகின்றனர். இதன் மூலமாக நல்லிணக்கம் நாட்டில் சீர்குலைக்கப்படுகிறது. 

கிண்ணியா பிரதேசத்தில் உள்ள குரங்குபாஞ்சான் பகுதியில் பௌத்த மதகுரு தலைமையில் ஐவர் அடங்கிய குழு அங்கு சென்றதனால் பதற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இவர்கள் ஏன் செல்ல வேண்டும் புதையல் தோண்டவா? அல்லது வேறு நடவடிக்கைக்காக என ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் காணி கபளீகரம் செய்ய வந்திருப்பார்கள், எல்லைக் கற்களை இடுவார்கள் என்ற அச்ச நிலை குடியிருப்பாளர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. 

 இது போன்ற காணி பிரச்சினை மூலமாகத் திருகோணமலை மாவட்டத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பௌத்த பிக்குகள் ஒரு இடத்தில் போராட்டம் செய்தார்கள் சில இடங்களில் சிறுபான்மை அரசியல்வாதிகள் பொதுமக்கள் என இலுப்பைக்குள விகாரை கட்டுமான பணியின்போது, வீதி மறியல் போராட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

சட்ட ரீதியான தடை உத்தரவு, கிழக்கு மாகாண ஆளுநரின் தடை உத்தரவு என கூறப்பட்ட போதிலும், அதையும் மீறி விகாரை கட்டிடப்பணி, விகாரைக்கான பெயர்ப்பலகை இடப்பட்டுள்ளது. 

 மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போது, கூட்டத்தைக் குழப்பிய தேரருடன் கலைந்து சென்ற ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற நிலைவரமும் அண்மைக் காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருந்த போதிலும், ஆர்ப்பாட்டம் செய்வதற்கு சிறுபான்மை சமூகத்துக்கு நீதிமன்றம் ஊடான தடையும் இலுப்பைக்குள விவகாரம் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்து அவர்களின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில், இருக்கும்போது, இவ்விடயங்கள் கண்டிக்கத்தக்கது.

திருகோணமலை, புல்மோட்டை பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு  சொந்தமான வயல் நிலங்கள் பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு,  அப்பாவி பொதுமக்கள் புத்த பிக்கு தரப்பினரால் தாக்கப்பட்ட சம்பவம்  தமிழ், முஸ்லிம், மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நில அபகரிப்புக்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது.

விகாரைகள் என்ற பெயரில் தமிழ் முஸ்லிம் மக்களின் வரலாற்றை மாற்றியமைக்கும் வகையில் குடியிருப்புக்களுக்கு மத்தியில்  விகாரைகள் அமைக்கப்படுகின்றது. அதேநேரம் எல்லை கிராமங்களில் வயல் நிலங்கள் குடியேற்றங்கள் என்ற பெயரில் அபகரிக்கப்படுகின்றது. 

புல்மோட்டை பகுதியிலும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்கள் புத்த பிக்குகளினால் “பூஜா பூமி” என்றபெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்கு  முஸ்லிம் விவசாயிகள் மற்றும் பெண்கள் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர். 

திருகோணமலை மாவட்டத்தில் திட்டமிட்டு இனக்கலவரத்தை தூண்டும் வகையில் இனவாத செயற்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது அரச இயந்திரமும் பாதுகாப்பு தரப்பினரும் வேடிக்கை பார்ப்பவர்களாக இருப்பது தமிழ், முஸ்லிம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புல்மோட்டையில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள் மக்களிடம் மீள வழங்கப்படவேண்டும். திட்டமிட்டு தமிழ், முஸ்லிம் மக்கள் மீது  நடத்தப்படும்  இனக்குரோத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் ஸ்ரீபிரசாத் தெரிவித்துள்ளார்.

அன்றாடம் உழைத்து தங்களது ஜீவனாம்சத்தைக் கழிக்கும் மக்களின் துயர் துடைக்க யாருமின்றி கண்ணீர் வடிக்கின்றனர். அத்துமீறி தனியார் காணிக்குள் நுழைய  இவர்களுக்கு சண்டித்தன அதிகார போக்கை வழங்கியது யார் என்பதே கேள்வியாக உள்ளது. 

திருகோணமலை மாவட்டத்தில் இந்த பிரச்சினை தொடராக இருக்கிறது குறிப்பாக சிறுபான்மை சமூகம் வாழும் பகுதிகளில் இது தொடர்கின்றன. 

இந்த நிலை இன்றி மக்கள் அன்றாட வாழ்வாதாரமாக விவசாயம் மீன் பிடியை நிம்மதியாக செய்து வாழ வேண்டும் அவர்களது காணிக்குள் சுதந்திரமாகப் பயிர்களைச் செய்து வாழ வேண்டும் எந்த தடையோ தொல்பொருள் திணைக்களத்தின் தலையீடோ, பௌத்த மதஸ்தலங்களை அமைப்பதோ, புத்தர் சிலை வைப்பதோ என்ற பிரச்சினை வராமல் நிம்மதியாக வாழ வழி விட்டுக் கொடுக்க வேண்டும். 

தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகள் அபகரிப்பதை நிறுத்த வேண்டும் இதற்கான நிலையான தீர்வினை உரியத் தரப்புக்கள் முன்வைக்க வேண்டும் என மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .