Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை
R.Tharaniya / 2025 மே 15 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
முருகானந்தம் தவம்
இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்திற்காக நடந்து முடிந்த தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் கைவிடப்பட்ட தமிழ்த் தேசியம் அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மீண்டும் கையிலெடுக்கப்பட்டதால் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் புத்துணர்ச்சியடைந்துள்ளதுடன்,
மாகாண சபைகளுக்கான தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டுமென அனுரகுமார அரசுக்கு அழுத்தங்களும் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க வடக்கில் காணாமல் போயிருந்த தமிழ்த் தேசியம் மீண்டும் தமிழர்கள் மத்தியில் தலைதூக்கக் காரணம் யார்? என்பதில் உரிமை கோர வழக்கம் போலவே தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளிடையில் போட்டியும் ஏற்பட்டுள்ளது.
இதனால் உள்ளூராட்சி சபைககளில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான பேச்சுக்களும் ஆதரவுகளும் விட்டுக் கொடுப்புக்களும் கொஞ்சம் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. எனவே, பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் கைவிடப்பட்ட தமிழ்த் தேசியம் மீண்டும் கையிலெடுக்கப்பட்ட நிலையில், தமிழ் தேசியக் கட்சிகள் தமிழ்த் தேசிய வாக்குகளைப்பெற்றுள்ள வீதங்களை இங்கு பார்ப்போம்.
கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த பாராளுமன்றத்திற்கான தேர்தலில்
ஜனாதிபதி அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ‘திசைகாட்டி’ சின்னத்தில் போட்டியிட்டு தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் உள்ள 12 ஆசனங்களில்
5 ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது.
இதன் மூலம் தமிழ்த் தேசியக் கொள்கையிலிருந்து வடக்குத் தமிழர் ‘தடம்’ புரண்டு விட்டதாகத் தமிழ் தரப்பினரால் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில் நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு மக்களினால் தேசிய மக்கள் சக்தி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பு கடந்த 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம் பெற்றது. 8,287 ஆசனங்களுக்காக 75,589 வேட்பாளர்கள் போட்டியிட்டநிலையில், இந்த தேர்தலில் வாக்களிக்க 17,156,338 பேர் தகுதிபெற்றிருந்தனர்.
ஆனால், வாக்களிப்பில் மக்கள் அக்கறை காட்டாத நிலையில் காலையிலிருந்து மந்த கதியிலேயே வாக்களிப்பு இடம்பெற்றது. இதற்கமைய காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணிக்கு முடிவடைந்த நிலையில், நாடளாவிய ரீதியில் 65 வீத வாக்களிப்பே இடம்பெற்றிருந்தது.
அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 79.46 வீத வாக்களிப்பும் பாராளுமன்றத் தேர்தலில் 68.93 வீத வாக்களிப்பு இடம்பெற்ற நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கான இந்த தேர்தலில் 65 வீத வாக்களிப்பே இடம்பெற்றது.
அதிலும், நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பில் வடக்கு மாகாண மக்கள் பெரிதும் அக்கறை காட்டாத நிலை காணப்பட்டது. வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் என ஐந்து தேர்தல் மாவட்டங்கள் உள்ள நிலையில், கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்களிப்பு
வீதத்தை விடவும் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டது.
இதற்கமைய கடந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 69 வீத வாக்களிப்பு இடம்பெற்ற நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 56.6 வீத வாக்களிப்பே இடம்பெற்றுள்ளது. இதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் 62 வீத வாக்களிப்பும் இம்முறை 61 வீத வாக்களிப்பும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் 63 வீத வாக்களிப்பும் இம்முறை 61.32 வீத வாக்களிப்பும் வவுனியா மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் 65 வீத வாக்களிப்பும் இம்முறை 59.56 வீத வாக்களிப்பும் மன்னார் மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் 70 வீத வாக்களிப்பும் இம்முறை 70.15 வீத வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளது.
இதில், வடக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களில் மன்னார் மாவட்டத்தில் மட்டுமே கடந்த பாராளுமன்றத் தேர்தலை விடவும் சற்று அதிகமான வாக்களிப்பு வீதம் பதிவானதுடன், இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பில் வடக்கில் அதி கூடிய வாக்களிப்பு வீதம் பதிவான மாவட்டமாகவும் மன்னார் மாவட்டம் உள்ளது.
அதேவேளை, மிகவும் குறைந்த வாக்களிப்பு வீதம் பதிவான மாவட்டமாக யாழ். மாவட்டம் உள்ளது.வடக்கில் இவ்வாறு வாக்களிப்பு வீதம் குறைவடைந்தாலும் வாக்களித்த மக்கள்
கடந்த முறை விட்ட தவறை மீண்டும் செய்யாது தமிழ்த் தேசியத்திற்கு வாக்களித்து தமிழரைத் தமிழ்த் தேசியக் கட்சிகளே
ஆள வேண்டும் என்ற செய்தியை மீண்டும் உலகிற்கு தெரிவித்துள்ளனர்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியிடம் வடக்கு மக்களினால் ‘அடகு’ வைக்கப்பட்ட தமிழ்த் தேசியத்தை எவ்வாறு அவர்கள் உளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மீட்டு எடுத்துள்ளனர் என்பதனைப் பார்ப்போம்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 6 ஆசனங்களைக் கொண்ட யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் 80,830 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் 39,894 வாக்குகளைப்பெற்று
2 ஆசனங்களையும் என வடக்கு மாகாணத்தில் 120,724 வாக்குகளைப் பெற்று 5 பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. அதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்
கட்சி 63,327 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 27,986 வாக்குகளைப் பெற்று
1 ஆசனத்தையும் ஊசி சின்னத்தைக் கொண்ட சுயேச்சைக் குழு 27,855 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றின. அதேவேளை, வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி 32,232 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் இலங்கை தமிழரசுக் கட்சி 29,711 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் அகில ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி 21,102 வாக்குகளைப் பெற்று
1 ஆசனத்தையும் இலங்கை தொழிலாளர் கட்சி 17,710 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றின. இவ்வாறான நிலையில், நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் 67,167 வாக்குகளைப் பெற்று கடந்த முறை பெற்ற வாக்குகளிலிருந்து 13,663 வாக்குகளை இழந்ததுடன், எந்தவொரு சபையையும் கைப்பற்றவில்லை. அதேபோன்று,
வன்னி தேர்தல் மாவட்டத்தில் 41,651 வாக்குகளைப் பெற்றது. இதன்மூலம்
வடக்கில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 108,818 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற 120,724 வாக்குகளை விடவும் 11,936 வாக்குகள் குறைவாகும்.
தேசிய மக்கள் சக்திக்குச் சென்ற வாக்குகள் இவ்வாறு குறைவடைந்த நிலையில், தமிழ் தேசியக் கட்சிகளுக்கான வாக்குகள் இம்முறை பெருமளவில் அதிகரித்துள்ளன.
இதற்கமைய பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் 93,038 வாக்குகளைப் பெற்றிருந்த தமிழரசுக் கட்சி இந்த தேர்தலில் 162,137 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது கடந்த முறை பெற்ற வாக்குகளைவிடவும் 69,099 வாக்குகள் அதிகம். அதேபோன்று, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கடந்த முறை வடக்கில் 35,478 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், இம்முறை 64,119 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இது கடந்த முறை பெற்ற வாக்குகளை விடவும் 28,641 வாக்குகள் அதிகம். தமிழ்த் தேசிய ஜனநாயக கூட்டமைப்பு கடந்த முறை 43,615 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், இம்முறை 71,278 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது கடந்த முறை பெற்ற வாக்குகளை
விடவும் 27,663 வாக்குகள் அதிகம்.
இதன்மூலம் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முக்கியமான தமிழ்த் தேசிய கட்சிகளான தமிழரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய வடக்கில் மொத்தமாக 172,131 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கில் மொத்தமாக 297,534 வாக்குகளைப் பெற்றுள்ளன. இது இவர்கள் கடந்த முறை பெற்ற வாக்குகளை விடவும் 125,403 வாக்குகள் அதிகம்.
அதேபோன்று, பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழரசுக் கட்சி 257,813 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 307,657 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இது 49,844 வாக்குகள் அதிகம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்றத் தேர்தலில் 39,894 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 70,944 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது 31,050 வாக்குகள் அதிகம். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் 65,382 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 89,177 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது 23,795 வாக்குகள் அதிகம்.
ஈ.பி.டி.பி. பாராளுமன்றத் தேர்தலில் 24,300 வாக்குகளை பெற்றிருந்த நிலையில், இம்முறை 20,000 வாக்குகள் வரையே பெற்றுள்ளது. அதேவேளை, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வடக்கில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 47,508 வாக்குகளைப் பெற்ற நிலையில், இந்த தேர்தலில் 35,893 வாக்குகளைப் பெற்றுள்ளதன் மூலம் 11,615 வாக்குகளை இழந்துள்ளது.
இதேபோன்று, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தேசிய கூட்டணி மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வாக்குகள் இம்முறை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கே சென்றுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
31 May 2025