2025 ஜூன் 14, சனிக்கிழமை

தமிழர் விடுதலைக்கான துரோகக் கோட்பாட்டின் முடிவு

R.Tharaniya   / 2025 மே 26 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

இலங்கை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலையான பின்னர் முகிழ்த்த தமிழ்த் தேசிய விடுதலைக்கான சிந்தனாவாதக் கோட்பாடுகளுக்கு இதுவரையில் சரியான வடிவம் கொடுக்கப்படாத நிலை உள்ளதா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

ஏனெனில், அதன் நோக்கத்தை அடைவதில் உள்ள இதுவரையான இழுபாடுகளே அதற்குக் காரணமாகும். அந்த வகையில்​ தான் சுதந்திர இலங்கையில் தமிழர்களின் அபிலாஷையைத் தமிழ்த் தேசியம் எய்தவில்லை என்ற முடிவு கிடைக்கும்.  

தமிழர்கள் எதிர்பார்க்கின்ற விடுதலையை, உரிமையை வென்றெடுப்பதற்காக அகிம்சைப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம் பெற்ற ஜனநாயக அரசியல் கட்சிகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. 

அதன் தோல்வி காரணமாகத்தான் ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. விடுதலை அமைப்புக்களின் தோற்றமும் தமிழ் மக்களின் அபிலாசை என்ற  நோக்கத்தை அடைவதற்கான முயற்சியும் 80 வருடத்தை எட்டுகின்ற சுதந்திர இலங்கையில் கைகூடவில்லை.

தமிழ் மக்களின் சுயநிர்ணய விடயத்தினை அடைந்து கொள்வதற்காக 32க்கும் மேற்பட்ட ஆயுதப் போராட்ட அமைப்புகள் தோற்றம் பெற்றிருந்த, ஆனால், விடுதலைப்புலிகள் அமைப்பினால் ஏனைய இயக்கங்கள் அழித்து ஒழிக்கப்பட்டதும், அவை துரோகிகளாகக் காட்டிக்கொடுத்தவர்களாக, கொலைகாரர்களாக பட்டங்கொடுக்கப்பட்டு தமிழ் மக்களிடமிருந்து விரோதிகளாக விலக்கி வைக்கப்பட்டனர்.

ஏனைய ஆயுத அமைப்புகள் இணைக்கப்பட்ட ஏற்பாடான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் தாங்கள் செய்தவைகள் அனைத்தும் தவறு என விடுதலைப் புலிகளால் வெளிப்படுத்தப்பட்டதான அறிவிப்பாகவே கொள்ளப்படலாம். அத்துடன் முடிந்து போனதாகவே அதற்கு அர்த்தமிருந்தாலும் விடுதலைப் புலிகளின் மௌனிப்பின் பின்னர் மீண்டும் அது கையிலெடுக்கப்பட்டது வேடிக்கையானது.

ஏகாதிபத்திய சிந்தனையுடன் ஏனைய ஆயுத அமைப்புகளை முடக்குவதற்குக் கையாளப்பட்ட அதிகார வேட்கைகளும், அதற்காக உபயோகிக்கப்பட்ட ‘துரோகி’ என்ற பதப்பிரயோகமும், தமிழர் அரசியலை ஆக்கிரமித்து வழிப்படுத்தியிருந்தது.

இதனால், அழிவுகளின் பாதையில் சொல்லொண்ணாத் துயரங்களின் மத்தியில் தமிழர்களைத் தள்ளியது. ஆயுதப் போராட்டத்தின் மௌனிப்பின் பின்னரும் கூட தமிழர் அரசியலில் இருந்தும், தமிழ் மக்களிடமிருந்தும் ‘துரோகி’ 
என்ற பதப் பிரயோகம் நீக்கப்படவில்லை.

இன்று அப்பதப் பிரயோகம் தமிழர்களை, அவர்களின் அரசியல் இருப்பை நிர்க்கதியாக்கியுள்ளது என்ற கருத்துகள் உருவாகிவருவது இதற்கு எடுத்துக்காட்டு எனலாம்.

தங்கள் கருத்துக்கு முரணானவர்கள் அனைவரையும் ‘துரோகி’ என்னும் வரையறைக்குள் தள்ளி ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கு அர்த்தம் புரியாத வகையில் இந்த பாசிசச் சிந்தனாவாத எழுச்சியின் வடிவமான ‘துரோகி’ என்ற பதப் பிரயோகம் இன்றும் தமிழ் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு மிக்க ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

தமிழர்களுடைய நீண்ட விடுதலைப் பயணத்தில் அகிம்சாப் போராட்டத்திலும் சரி, ஆயுதப் போராட்டத்திலும் சரி அதன் பின்னரான தமிழ் மக்களின் விடுதலைக்கான ஜனநாயக அரசியல் கட்சிகளின் உருவாக்கத்திலும் சரி, ஜனநாயகத்திற்கு முரணான வகையில் கருத்தியல் வாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல், சகித்துக்கொள்ள முடியாமல் துரோகிகள் பட்டங்களை வழங்கியிருக்கின்றது.

இது தனிநபர் துரோகச் சிந்தனைகள் மூலம் தங்கள் அரசியல் இருப்புக்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக வெறும் வார்த்தை ஜால அரசியலால் நகர்த்தப்படுவது வேடிக்கையானது.

தமிழரின் பெயரால், தமிழ் இனத்தின் விடுதலையின் பெயரால், அரசியல் கசாப்புக் கடை நடத்தும் இன்றைய தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்கள் அனைவரையும் கருத்தியல் தெளிவும், கருத்தியல் சிந்தனையும், விமர்சன அரசியல் பற்றிய கோட்பாடுகளை ஆராயாமல் மறுதலிக்கும் போலித் தனமான நிலைப்பாடுடையவர்களாக வரலாற்றில் மாற்றிவருகிறது.

இதை நிரந்தரமானதாகப் பதித்துக் கொள்வதற்குத் தூண்டப்படுகிறது. இது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள், விடுதலை இருப்பு, உரிமைகள் என ஒவ்வொன்றையும் சிதைத்து சின்னா பின்னப்படுத்தி வெறுமனே கதிரை அரசியல் அதிகார வர்க்கச் சிந்தனையின் பால் தமிழ் மக்களை மூழ்கடித்துள்ளது.

‘துரோகி’ என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியாமல், எத்தகைய கருத்தியல் யதார்த்தங்களையும் ஆராயாமல், தமக்குத் தாம் முடியாதவற்றை ‘துரோகம்’ என்றும், எதிர்வாதம் புரிபவர்கள் மீது நடைமுறை யதார்த்தங்களுக்குப் புறம்பான வகையில் கருத்தியல்களை முன்வைத்து பொது வெளிகளில் தனிநபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதே நேரத்தில், தேர்தல் காலங்களில் ‘துரோக’ அரசியல் மூலம் மிக மோசமான முறையில், ஒட்டுக் குழுக்கள், மண்டையன் குழு, அடிவருடிகள் பாசிசவாதிகள், பயங்கரவாதிகள், கொலைகாரர்கள், கடத்தல் காரர்கள், உரிமைகளை நிராகரிப்பவர்கள், சோரம் போனவர்கள் என்ற மாயாஜால வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டு மக்களைக் குழப்பி, தமிழ் மக்களின் காதுகளில் பூச்சுற்றி, கடுக்கன் பூட்டி தமிழ் விடுதலை அரசியல் அலங்கோலப்படுத்தப்படுகின்றது.

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யுத்த மௌனிப்புக்குப் பின்பு கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்பட்டது, அது சிதையச் சிதைய கை காட்டுவதற்கு யாருமற்றவர்களாகத் தமிழர்கள் அரசியல் பொது வெளியில் அரசியல் அனாதைகளாக விடப்பட்டனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இன்னமும் கூட்டமைப்பு இருப்பதாகவும் அதற்கான சின்னம் வீடு என்றுமே பெரும்பாலான தமிழ் மக்கள் நம்புவதுதான். யுத்த மௌனிப்பின் பின் உருவான அரசியல் பொது வெளியை தம்வசப்படுத்திக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, விடுதலைப் புலிகள் ஆயுதத்தை (துரோகி) கொண்டு மேற்கொண்ட வேலையைச் செய்யத் தொடங்கி தமிழர் அரசியல் மீது தமிழ் மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் சூழ்நிலையைத் தோற்றுவித்திருக்கின்றனர்.

போர் முடிந்து 16 ஆண்டுகளின் பின்னரும், நாம் எதையும் சாதிக்கவில்லை. அரசியல் அபிலாஷையை அடைவதில் ஒரு இம்மியும் நகரவில்லை என்பது புரிந்திருந்தாலும், சர்வதேசத்திடம் முறையிடுவோம், இந்தியாவிடம் முறையிடுவோம், மூன்றாம் தரப்பிடம் பேசுவோம், மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும், மேற்குலகமே அங்கீகரி எனப் பல்வேறு கோசங்களைத் தொடர்ச்சியாகத் தமிழ் மக்களுக்குக் கூறிக்கொண்டு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழர் உரிமையின் பெயரால் ஒருவரை ஒருவர் தேர்தல் காலங்களில் தாக்கி எழுதும், பேசுவதும், துண்டுப்பிரசுர விநியோகமும் நடைபெறுகிறது. துரோகிகளுடன் கூட்டே இல்லையெனச் சபித்து மக்களை அணி திரட்டுகின்றனர். ஆனால், தேர்தல் முடிந்த பின்னர் தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க ஓரணியில் செல்வோம் என்ற கருத்துகள் வெளிப்படுகின்றன.

அதிகாரத்தைத் தக்கவைக்க எந்தப் பிசாசுகளுடனும் கூட்டுச் சேர்வதற்குத் தயார் என்கின்ற இந்தக் கருத்தியல் முரண் எதற்கு என்பதே இந்த இடத்தில் கேள்வியாகும்.

இத்தகைய போலித்தனமான அரசியல் மூலம், தமிழ் மக்களின் விடுதலையை இத் தலைமைகளால் வென்று கொடுக்க முடியுமா. இது எத்தனை காலத்திற்குத் தமிழர்களுடைய விடுதலைக்கான அரசியலாக இருக்கும் என்பதும் புரியாத புதிராக மாறுகிறது.

இவ்வாறு தமிழர்களுக்கான விடுதலைப் போராட்ட அரசியலை ஒரு முடிவுக்குக் கொண்டு வராமல் தொடர்ச்சியாக இழுத்தடித்து வருவதிலேயே ஈடுபட்டுவரும் தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினர் காலப்போக்கில் காணாமலாக்கப்படுவதே நடைபெற்றாக வேண்டும்.

எனவே, எவ்வித ஆவணமுமற்ற, திட்டமில்லாத, வாய்ச்சவாடல் விடும் 
இந்தத் தலைமைகள் தங்கள் அதிகாரங்களைத் தக்கவைப்பதில் சிந்திப்பார்களாக இருந்தால் தமிழர்கள் பலிக்கடாவாகி தீர்வின்றி, அடுத்த தலைமுறைக்கும் ஆறாத வடுவாக உரிமைப் போராட்டத்தை நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வடிவமாகக் கொண்டு நகர்த்தி விடுவர்.

எனவே இந்த நிலைமை மாற்றமடைய வேண்டுமாயின், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான தீர்மானத்தின் அடிப்படையில், தமிழர்களுக்கான வேலைத் திட்டத்தை ஒரு பொது வரைபின் மூலம் முன் நகர்த்திச்
 செல்ல வேண்டும்.

அதற்கு எவரும் தயாரில்லாத நிலை தொடர்ந்தால், சிங்களத் தேசியம் தமிழ் மக்கள் மட்டில் எவ்வித கவலையும் கொள்ளாது என்பதுடன்,  தமிழர்கள் வெறுமனே குரைப்பவர்களே. அவர்கள் கடிப்பவர்கள் அல்ல என்ற முடிவையும் நிரந்தரமாக்கிக் கொள்ளும்.

உள்ளொன்றும் புறம் ஒன்றும்  வைத்து தமக்குள்ளே குத்து வெட்டுக்கள் செய்வதும் கூட்டுக்குள்ளேயே கூட்டுச் சதி செய்து கூட்டுக்களை ஏமாற்றுவதும். “ஆறு கடக்கும் மட்டும் அண்ணன் தம்பி ஆற்றைக் கடந்தால் நீ யாரோ நான் யாரோ” என்று தங்கள் தங்கள் இருப்புக்களைப் பாதுகாப்பது தமிழர் நாம் கண்ட வரலாறு. இருந்தாலும், வரலாறு கற்றுத்தந்த பாடங்களை அனுபவங்களாகக் கொள்ளாத சமூகம் அழிந்து போகவேண்டியதும் வரலாற்றின் கட்டாயம்.

இதில் தமிழர்கள் விதிவிலக்கானவர்களா?  இனிவரும் காலங்களிலேனும் விட்டுக் கொடுப்பும், விண் பிடிவாதமின்மையும், வெளிப்படைத்தன்மையும், தமிழரின் தமிழ்த் தேசிய அரசியல் அபிலாசை ஒன்றே இலக்கென்றும் நகரும் தமிழ்த் தேசிய அரசியலைக் காண்போம்.

ஏமாற்றுகளிலிருந்து வெளியேறி, இருப்பதில் ஒன்று என்ற சிந்தனையிலிருந்து விடுபட்டு,அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலிலேனும் மக்கள் தெளிவுடன் முடிவுக்கு வருதல் நடைபெறட்டும். அரசியல் கட்சியை, அரசியல்வாதிகளை வழிப்படுத்துவதும் மக்களின் வேலை என்றவகையில் தமிழ்த் தேசிய அரசியல் வழிக்கு வரட்டும்.

26.05.2025


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .