2025 ஜூன் 14, சனிக்கிழமை

தமிழ்த் தேசிய ஒற்றுமை-முள்ளிவாய்க்கால் 16

R.Tharaniya   / 2025 மே 19 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஷ்மன்

தமிழர்கள் ஒரு சமூகமாக முன்னோக்கிப் பயணிப்பதற்கு கடந்த காலங்களில் மீறல்கள் இடம்பெற்றன என்பதை அங்கீகரிப்பதும், அவை தொடர்பில் பொறுப்புக் கூறலை உறுதி செய்வதும் அவசியம் என வலியுறுத்தி பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்ராமர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் நினைவுகூரல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

அதே நேரத்தில், தமிழர்கள் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்வதற்கும், தமது தாய் நாட்டில் அமைதியாகவும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு உரித்துடையவர்களாவர்.

இலங்கை அதை கடந்த காலத்திலிருந்து முன்னோக்கிப் பயணிப்பதற்கும் பிரஜைகள் அனைவருக்குமான நிலையானதும் சுபிட்சமானதுமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் கடந்த கால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை உறுதி செய்வதும் இன்றியமையாததாகும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டெபோரா ரோஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

இந்த இரண்டு கருத்துமே தமிழர்களுக்கு நிகழ்ந்த கொடூரத்துக்கு நீதி கோரி நடைபெற்று வருகின்ற போராட்டங்களின் வெளிப்பாடாகக் கொள்ளலாம். கடந்த காலங்களில் இது போன்ற பல வலியுறுத்தல்களும், கருத்துக்களும், அறிவிப்புகளும் வெளிவந்தே இருக்கின்றன.

ஆனால் அவற்றினால் ஏதும் பயன் விளைந்ததாகத் தெரியவில்லை. மூன்று தாசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற ஆயுதப் போராட்டம் பல நாடுகளின் இணைவினால் 2009 மே மாதத்தில் இலங்கை அரசாங்கத்தால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. யுத்தம் மௌனிக்கச் செய்யப்பட்ட கடந்த 16 வருடங்களாகத் தமிழர்கள் தமக்கான நீதியைக் கோரி வருகின்றனர்.

அதே ஒழுங்கில் இவ்வருடத்திலும் கடந்த ஒரு வார காலமாக முள்ளிவாய்க்கால் நினைவு வார நிகழ்வுகள் வடக்கு, கிழக்கிலும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்றன. இவற்றினை பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் ஏற்பாடு செய்திருந்தன. உணர்வுப்பூர்வமாக நடைபெற்றுவரும் நினைவுகூரல்கள் சற்று வழமைக்கு மாறாக இவ்வருடம் அமைதியாக நடைபெறுகின்றன. இல்லையானால் பாதுகாப்புத் தரப்பினரது கெடுபிடிகள், தடை உத்தரவுகள், அச்சத்துக்கு மத்தியில் நடைபெறுவது வழக்கமாகும்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டில் ஆட்சிக்கு வந்தவுடன் நடைபெற்ற மாவீரர் தின காலத்திலும் அதன் பின்னர் நடைபெற்ற அன்னை பூபதி நினைவு நாள் காலங்களிலும் பல நெருக்கடிகளைக் கொடுத்திருந்த பாதுகாப்புத் தரப்பு இப்போது அமைதி காப்பது 
சந்தேகத்தையும் எழுப்பியிருக்கிறது.

ஒவ்வொரு வருடத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில்,  இனப் படுகொலைக்கு நீதி வேண்டும், இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும் என்று கோருவதுடன், தமிழ்த் தேசமும் அதன் இறைமையும் அங்கீகரிக்கப்பட்ட தீர்வே தேவை என்பதனையும் வலியுறுத்தி வரும் தமிழர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாக இருந்து வருகிறது.

வருடத்தின் இரண்டு தடவைகளில் ஐக்கிய நாடுகள் சபையினை நம்புவதும் ஏமாறுவதும் நடைபெற்றே வருகிறது. முள்ளிவாய்காலுக்கு பல்லாயிரமாய் அணிதிரள்வதும் இறுதி யுத்த முள்ளிவாய்க்கால கஞ்சி அருந்துவதும் தமிழ் மக்கள் அன்றைய காலத்தில் அனுபவித்த கொடுமைகளை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றன.

ஆனால், அவற்றினை யாரும் பெரிதாகக் கணக்கிலெடுப்பதாக இல்லை. இருந்தாலும், தமிழர்கள் தங்கள் அடுத்த சந்ததிக்குத் தமிழர்களின் போராட்ட வரலாற்றைக் கடத்துவதும் சில தேவையற்ற விமர்சனங்களுக்கு உள்ளாவதுமே நடைபெறுகின்றன.

வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நடைபெற்ற அத்துமீறல்களுக்கு எதிராக ஆயுத இயக்கங்கள் உருவாயின. அதற்கு முன்னர் நடைபெற்ற அகிம்சை ரீதியான போராட்டங்களில் தோல்வியே ஆயுத இயக்கங்களின் உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்தது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்காகப் போராடப் புறப்பட்ட இயக்கங்களின் இலக்கு ஒன்றாக இருந்த போதிலும் நடைமுறைகள், சித்தாந்தங்கள், கொள்கைகள், அணுகுமுறைகள் காரணமாக இலக்கை மறந்தவர்களாகவும், சந்தேகங்கள், மற்றும் தவறான எண்ணங்களால் முரண்பட்டு ஒரு எல்லைக்கு அப்பால் மோதலை நடத்தினர். இந்த மோதல்களில் துரோகிகள், விரோதிகள் எனப் பலரும் உருவாக்கப்பட்டனர்.

ஆயுதப் போராட்டம் மட்டுமே அரசியல் விடுதலைக்கான வழி என்ற நிலை ஏற்பட்டதன் காரணமாக நீண்ட காலம் ஆயுதப் போராட்டமே நடைபெற்று வந்தது. இருந்தாலும் பல சந்தர்ப்பங்களிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகளைக் காண்பதற்காகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும் அவை தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன.

ஆனாலும் அரசியல் ரீதியான செயற்பாடும் விடுதலைக்குத் தேவை என உணரப்பட்டதன் பலனாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைக்கப்பட்டு 2001இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இடையில் தமிழர் விடுதலைக் கூட்டணி விலக இலங்கை தமிழரசுக் கட்சி சேர்க்கப்பட்டது) விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது.

இந்தக் கூட்டு அரசியல் ரீதியாகவும், விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாகவும் தமிழ் மக்களது அரசியல் அபிலாஷை நிறைவேற்றத்துக்கான ஏக பிரதிநிதிகளாக பிம்பப்படுத்தப்பட்டிருந்தனர். ஆனால், 2009 மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் யுத்தம் மௌனிக்கச் செய்யப்பட்டதுடன், விடுதலைப்புலிகள் அமைப்பு இல்லை என்றானது.

அதன் பின்னர் தமிழர்களின் தலைவிதி யார் கையில் இருக்கிறது என்பது கேள்விக்குறியாகிப் போயிருக்கிறது. அதை முள்ளிவாய்க்கால் முடிவு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷையைப் புதைத்து விட்டதாகக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை மேற்கொண்டு வந்தாலும், தமிழர்களிடம் ஒற்றுமையின்மை அதிகரித்திருக்கிறது. 
இந்த ஒற்றுமையின்மை காரணமாகத் தமிழர்களின் போராட்டம் வலுவிழந்து வருகிறது என்றே  சொல்லவேண்டும்.

இருந்தாலும், புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டங்களும் இலங்கை அரசாங்கத்தை இனப் படுகொலையாளியாக நிரூபிக்கும் முயற்சிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதைக் காணமுடிகிறது.

இருந்தாலும், வடக்கு, கிழக்கில் மக்களின் உணர்வு சார்ந்த விடயமாக இருந்து வருகின்ற முள்ளிவாய்க்கால் அவலமானது சரியான வகையில், அரசியல் கட்சிகளாலும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளாலும் கையாளப்படவில்லை என்றே கொள்ளலாம்.

அதேநேரத்தில்,  எதிர்கால சந்ததியினருக்கு இதன் தாற்பரியம், தமிழ் மக்களுடைய அரசியல், உரிமைக்கான சுய நிர்ணயப் போராட்டம் குறித்த விடயங்கள் கடத்தப்படுகின்றனவா என்ற கேள்வி இருந்து கொண்டேயிருக்கிறது.

அரசாங்கங்கள் மேற்கொள்கின்ற வரைமுறைகள், அல்லது செயற்பாடுகள் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை இல்லையென்றாக்க முடியாது என்பது பொதுக் கருத்தாக இருந்தாலும், தலைமுறை மாற்றங்கள் காரணமாகப் போராட்டம் மழுங்கடிக்கச் செய்யப்படுகின்ற நிலையை அவதானிக்க முடிகிறது.

தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் பெற்றோர்கள், குடும்ப உறவுகள், போராளிகள் என லட்சக்கணக்கானவர்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள்.

அவர்களின் நினைவு என்பது எமது உள்ளத்தில் எப்போதும் இருக்கின்ற விடயம். இதனைப் பொதுவெளியில், உலகறியத்தான் அனுஷ்டிக்க வேண்டும் என்றில்லை. அவர்களின் தியாகங்களை எண்ணி எமது உள்ளத்தில் இருந்து எழும் கண்ணீர் கூட அவர்களுக்கான அஞ்சலிதான்.

இதனை யாரும், எந்த அரசாங்கமும் தடுக்க முடியாது என்கிற நிலைப்பாடும் குறிப்பிட்ட மக்களிடம் இருந்தாலும் முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது சரியாக மக்கள் மயப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருப்பது இந்த இடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

யுத்தம் மௌனிக்கப்பட்டு 16 வருடங்கள் கடந்துவிட்டது. அதன் பின்னர் ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை அறிக்கைகளை வழங்கியிருக்கின்றன.

இருந்தாலும் அவற்றின் அறிக்கைகளால் காணாமல்போனாருக்கான அலுவலகம், மரணச் சான்றிதழ் வழங்கல் என சில விடயங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், அதனைப் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக ஏற்கவில்லை. இவ்வாறான நிலையில்தான் புதிய அரசாங்கம் அரசியலமைப்பு மாற்றத்தினை மேற்கொள்ளவுள்ளோம் என்று அறிவித்திருக்கிறது.

இன அழிப்பு, மனித உரிமை மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் சர்வதேசத்தினால் நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன்  சர்வதேசத்தை எதிர்பார்த்திருக்கின்ற தமிழர் தரப்பினர் இந்த அரசியலமைப்பு மாற்றத்தினை ஏற்பார்களா என்பது பரியாத புதிரே.

எப்போதுமே தமிழர்களுக்குத் தனியான பிரச்சினை இல்லை என்ற ஒரு நிலைப்பாட்டிலிருக்கின்ற பேரினவாதத்திடம் தமிழர்களுக்காக நீதியையே பக்கச் சார்பின்மையையோ எதிர்பார்க்கலாமா என்பது இந்த இடத்தில் கேள்விதான்.

யுத்தத்தில் பலியான படையினருக்கான 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் வைபவம் நடைபெறும் நாட்டில் தமிழர்களுக்கான இன அழிப்பு நீதியைக் கோருவது எந்தளவுக்கு சாத்தியப்பாடுடையது.

இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தோற்றம் பெற்றிருந்தாலும் இதுவரையிலும் தீர்ப்பதற்கான எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுத்திராத இலங்கை அரசிடம் இனிவரும் காலத்திலும் அதற்குச் சாத்தியம் இருக்கும் என்று நம்புவது புத்திசாலித்தனம் தானா என்றும் சிந்திக்கவேண்டும். 

இது முள்ளிவாய்க்கால் நேரத்திலேனும் நினைவுபடுத்தப்படட்டும். அதேநேரத்தில், மக்களுக்காக அரசியலை நடத்தும் அரசியல் தரப்பினர் தமக்குள் இருக்கும் முரண்களையும் களைந்துகொள்ள முயலவேண்டும். இதுவே முள்ளிவாய்க்கால் அவலத்துக்கான சரியான அஞ்சலியாகவும் இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .