2025 ஜூன் 14, சனிக்கிழமை

மாகாண சபை தேர்தல்: சில நடைமுறை யதார்த்தங்கள்

R.Tharaniya   / 2025 மே 20 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு, மாகாண சபைத் தேர்தல் பற்றிய உரையாடல்கள் தொடங்கியிருக்கினிறன. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த வருடத்திற்குள் நடக்குமா? நடக்காதா? என்ற விவாதங்களும் போய்க் கொண்டிருக்கின்றன.

நாட்டில் செயற்பாட்டில் இருந்த மாகாண சபைகள் அனைத்தினதும் ஆட்சிக்காலம் முடிவடைந்து பல வருடங்களாகி விட்டன. கடைசிக் கட்டமாக, 2014ஆம் ஆண்டு ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களின் ஆட்சி காலம் முடிவடைந்தது. அதற்கு முன்னர் ஏனைய மாகாண சபைகளின் காலம் முடிவுக்கு வந்து விட்டது,
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பல்வேறு காரணங்களைக் கூறி மாகாண சபை தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிப்புச் செய்தன.

எல்லா சபைகளும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் கீழேயே இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கின்றன.ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தாமதமாகியுள்ள தேர்தல்கள் அனைத்தும் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த எதிர்பார்ப்பதாக என்.பி.பி. அரசாங்கம் கூறியது. ஆனால், இந்த வருடத்திற்குள் அது நடைமுறைச் சாத்தியமில்லை என்று பிறகு ஒரு எம்.பி. கூறியிருந்தார்.

முன்னைய காலங்களில், உள்ளூராட்சி மன்றங்களில் ஜே.வி.பி. பெற்றுக்கொண்ட உறுப்பினர்களை விட, பன்மடங்கு அதிக உறுப்பினர்களை வடக்கு, கிழக்கு உள்ளடங்கலாகப் பல பகுதிகளிலும் என்.பி.பி. இம்முறை பெற்றிருக்கின்றது என்பது தெளிவான விடயமாகும்.

ஜே.வி.பிக்கு கிடைத்திராத இந்த அங்கீகாரம் என்.பி.பிக்கு கிடைத்தமை அவர்களளவில் பெருவெற்றியாகும்.இருப்பினும் கூட, பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளும் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் சரிவடைந்துள்ளன.

அரசாங்கம் வெளியில் என்ன நியாயம் சொன்னாலும், 23 இலட்சம் வாக்காளர்கள் சில மாதங்களுக்குள் மனம் மாறிப் போனமை குறித்து அவர்கள் கடுமையாகச் சிந்திக்கின்றார்கள் என்றே தெரிகின்றது.

இப்படியான ஒரு சூழ்நிலையில், ஏனைய தேர்தல்களை விட, பல சர்ச்சைகளும், வாதப் பிரதிவாதங்களும் உள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அசட்டுத் துணிச்சலை என்ப.p.பி. அரசாங்கம் எப்போது பெறும் என்பதுதான் கேள்வியாகும்.  

தமிழ் மக்களைச் சமாளிப்பதற்காக இந்தியத் தலையீட்டுடன் மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்டாலும் கூட, அதன் பலாபலன்களை முஸ்லிம்களும் மலையக மக்களும் மட்டுமன்றி, சிங்கள மக்களும் பெற்றுக் கொண்டார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. மறுபுறத்தில் இந்த முறைமை ஒரு ‘வெள்ளை யானை’ என்ற  விமர்சனங்களும் உள்ளன.

இப்போது மாகாண சபை தேர்தலை நடாத்துவதில் சட்ட ரீதியான மற்றும் அரசியல் ரீதியான தடங்கல்கள் பல இருக்கின்றன என்பதுதான் கள நிலை யதார்த்தமாகும்.
மாகாண சபை தேர்தல் சட்டத்தில் 2017ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தத்திற்கு அமைவாகக் கலப்பு முறை தேர்தல் நடைபெறுவதுடன் அதற்காக மாகாண சபைகளின் எல்லைகள் மீள் நிர்ணயம் செய்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

இதனால், புதிய முறைமையில் தேர்தல் நடத்த முடியாத சூழல் காணப்படுகிறது. எனவே, பழைய முறைமையில் நடத்த வேண்டுமாயின், பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்று கொண்டுவந்து நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், இப்பணிகள் கிட்டத்தட்டக் கிடப்பில் கிடக்கின்றன.

தனித்தனி மாகாணங்களாக இருந்து, மக்கள் வாக்கெடுப்பின்றி இணைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்ற உத்தரவின் படி பிரிக்கப்பட்ட வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்று தமிழ் தரப்பு கோரி வருகின்றது. அதனை முஸ்லிம்களோ சிங்கள மக்களோ விரும்பவில்லை என்பதுடன், அதனை எந்த அரசாங்கமும் செய்வதும் சாத்தியமற்றது.  

அத்துடன், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் புதிதாக உருவாகும் மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கும், அரசாங்கத்தின் கஜானாவில் நிதி இருக்க வேண்டும். இன்னுமொரு தேர்தல் காலத்தை எதிர்கொள்வதற்கு மக்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இதற்கப்பால் சில அரசியல் சார்ந்த காரணிகளும் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் மறைமுகமாக செல்வாக்குச் செலுத்தி வருகின்றன.
மாகாண சபை தேர்தல்களை நடத்தி, சபைகளை சுயமாக இயங்க வைத்தால் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் அதிகமாக வலியுறுத்துவார்கள்.

காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் வடக்கு, கிழக்கில் 13ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றோ தமிழர்களுக்குத் திருப்தியான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றோ இந்தியா உண்மையில் மனதார விரும்புகின்றதா? அல்லது இதனை வைத்து அரசியல் செய்கின்றதா? என்பதும் சந்தேகமே.

ஆயினும், 13ஆவது திருத்தத்திற்கு ஒப்பான ஒரு ஏற்பாட்டை நடைமுறைப்படுத்தும் படி இந்தியா பொதுவெளியில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம். எனவே, அதனைச் செய்வதா? இல்லையா? என்ற முடிவை எடுத்த பிறகுதான், அரசாங்கம் தேர்தல் ஒன்றுக்குச் செல்ல வேண்டும்.

எனவேதான், முன்னைய அரசாங்கங்களைப் போலவே, புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது என்றும் அதனூடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது என்றும் ஒரு பரப்புரையை என்.பி.பியும் மேற்கொண்டு வருகின்றது எனலாம்.

மக்கள் விடுதலை முன்னணி அடிப்படையிலேயே இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையும் 13ஆவது திருத்தத்தையும் அக்காலங்களில் எதிர்த்தது. என்.பி.பி. தனது அண்மைக்கால தேர்தல் மேடைகளில் தமிழர்களைக் கவரும் பரப்புரைகளைச் செய்திருந்தாலும் இது விடயத்தில் ஜே.வி.பி. தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதா? என்பது கேள்விக்குரியது.

இது இவ்வாறிருக்க, ஆளும் தரப்பிற்கு ஜே.வி.பிக்கும் என்.பி.பிக்கும் இடையில் உட்பூசல்கள் எழுந்துள்ளன. அண்மையில் ஒரு பொது மேடையிலேயே இது சாடைமாடையாக வெளிப்பட்டதாக அவதானிகள் கூறுகின்றனர்.

தேசிய மக்கள் சக்தியும், இனங்களைக் கடந்த இலங்கையர் என்ற கோஷமும் அனுரகுமார திசாநாயக்க என்ற மக்களைக்கவரும் பிரசாரகரும் இல்லாமல் போயிருந்தால், ஜே.வி.பி. ஒருபோதும் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்பதே நிதர்சனமாகும்.

ரில்வின் சில்வா தலைமையிலான அடிப்படை ஜே.வி.பிகாரர்கள் என்.பி.பிகாரர்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்வதாகவும், ஜே.வி.பியின் கடந்தகால இமேஜ் காரணமாக அதற்குள் அடங்கிப் போவதற்கு சில அரசியல்வாதிகள் விரும்பவில்லை என்றும் கூறப்படுகின்றது.

சில மாதங்களுக்கு முன்னர் உரையாற்றிய ரில்வின் சில்வா, 13ஆவது திருத்தத்தின் கீழான மாகாண சபை முறைமையானது இலக்குகளை அடையவில்லை என்று கூறியிருந்தார். ஆனால், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்கும் வரை அதனை ஒழிக்க மாட்டோம் என்ற தொனியிலும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

அப்படியென்றால், தமிழர்களுக்கான நியாயமான தீர்வு என்ன? அதன் மூலம் தமிழ் தரப்பு திருப்திப்படுமா? அப்படியொரு தீர்வு வழங்கப்படும் போது, முஸ்லிம்களுக்கான பங்கு என்னவாக இருக்கும்? ஜே.வி.பியின் பிடிக்குள் உள்ளதாகத் தோன்றும் அரசாங்கம் எப்போது இந்த முடிவை எடுக்கும்? என்பதெல்லாம் நடக்கும் போதுதான் தெரியும்.  

இந்த இடத்தில் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ள கருத்தையும் கவனிக்க வேண்டும். ‘வடக்கு, கிழக்கில் எழுச்சி பெற்ற தமிழ்க் கட்சிகள் மாகாணசபை தேர்தலைக் கோர வேண்டும் அனுரவின் புதிய அரசியலமைப்பு சூழ்ச்சிக்குள் சிக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார். இது சிந்திக்க வேண்டிய கருத்தாகும்.

இதனையெல்லாம் தாண்டி இன்னுமொரு விடயமுள்ளது. அதாவது, வடக்கு, கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் பாராளுமன்றத் தேர்தலில் அதிகமான வாக்குகளை என்.பி.பிக்கு வழங்கியிருந்தனர்.

அரசாங்கம் வெற்றிகரமாகப் பயணித்திருக்கும் என்றால், வாயைக் கட்டுப்படுத்தி இருப்பார்கள் என்றால், வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட ஆளும் கட்சி தமிழ் எம்.பிக்கள் தமிழ் மக்களுக்காகத் தீயாக வேலை செய்திருந்தால், உள்ளூராட்சி சபை தேர்தலில் அது தெரிந்திருக்கும்

அதேபோல், முஸ்லிம்கள் கணிசமான வாக்குகளை வழங்கிய போதும் என்.பி.பியில் வடக்கு, கிழக்கில் முஸ்லிம் ஒருவரைத் தெரிவு செய்ய முடியாமல் போனது. அம்பாறை மாவட்டத்தில் அதிக ஆதரவைப் பெற்றிருந்தவராக கருதப்பட்ட வேட்பாளருக்கு தேசியப் பட்டியல் எம்.பி. கொடுக்கப்படாமையும், அப்பதவியைப் பெற்றுக் கொண்டவரின் உரைகளும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தாக்கம் செலுத்தியுள்ளன என்றே கூறலாம்.

ஆகவே, இப்படியான சட்ட, நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வையும், வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விகளுக்குப் பதிலையும் ஓரளவுக்குக் கண்டுபிடித்த பிறகு தான் மாகாண சபை தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடுவது சாத்தியமாகும். இவற்றுள் அரசாங்கத்தின் அரசியல் நலன் மட்டுமன்றி, பல்வேறு சட்ட, சிக்கல்களும் உள்ளன.

இதனையெல்லாம் ஓரளவுக்குச் சீர்செய்து மாகாண சபை தேர்தலைக் கூடிய விரைவில் நடத்த அரசாங்கம் முயற்சி செய்கின்றது. அது எப்போது கைகூடும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .