2026 மே 11, திங்கட்கிழமை

28 உயிர்களை பலியெடுத்த விபத்துக்கு ஒரு வருடம் (வீடியோ)

Lenin Raj   / 2026 மே 11 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ் கௌசல்யா


கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட கெரண்டியல்ல பகுதியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த கோர பஸ் விபத்தின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, கண்ணீர் மல்க இன்று 11 அதே இடத்தில் நடைபெற்றது.

கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி, கொரண்டியல்ல பகுதியில் சுமார் 300 அடி பள்ளத்தில் பஸ் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 23 பேர் உயிரிழந்ததுடன், சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்தனர்.

மொத்தம் 28 உயிர்களைப் பறித்த இந்த விபத்து, முழு நாட்டையுமே உலுக்கியிருந்தது.

நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வை கொத்மலை பொலிஸ் அதிகாரி திரு. இந்திக்க லலித் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் பிரதேச சபை செயலாளர், சர்வமத மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தியதுடன், மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

விபத்து நடந்த தருணத்தில், ரப்பொடகம மற்றும் கெரண்டியல்ல பகுதி மக்கள் காட்டிய மனிதாபிமானம் இன்றும் நினைவுகூரத்தக்கது. செங்குத்தான பள்ளத்தில் இறங்கி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து காயமடைந்தவர்களை மீட்டெடுத்த அந்த மக்களின் செயல், மனித நேயத்தின் உச்சமாகப் போற்றப்பட்டது.

பஸ் விபத்தின் வடு மாறுவதற்குள்ளேயே, அண்மையில் ஏற்பட்ட 'டித்துவா' (Dithuva) சூறாவளி இப்பகுதியை மீண்டும் நிலைகுலையச் செய்தது. இதனால் ஏற்பட்ட பாரிய மண்சரிவுகளில் சிக்கி சுமார் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தொடர்ச்சியான இந்த உயிரிழப்புகளால், ஒரு காலத்தில் செழிப்புடன் காணப்பட்ட கெரண்டியல்ல பகுதி, இன்று மௌனமான ஒரு மயான பூமியாகக் காட்சியளிக்கிறது.

உயிரிழந்த அனைவரது ஆத்மாவும் சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .