2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

2000 கி.கி பீடி இலைகள் பறிமுதல்: 4 இந்தியர்கள் உட்பட 10 பேர் கைது

Editorial   / 2026 மே 01 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


 எம்.எச்.எம். சியாஜ் 

சிலாபம் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கடந்த செவ்வாய்க்கிழமை (28) முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 2,000 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இக்கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடைய ஒரு இந்திய மீன்பிடிப் படகு மற்றும் நான்கு இந்தியச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பீடி இலைகளை நாட்டிற்குள் கொண்டு வருவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று உள்நாட்டுப் படகுகளும், அவற்றில் இருந்த ஆறு இலங்கையர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
 
சிலாபம் கடற்பகுதியில் கடற்படைக் கப்பல் ஒன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த ஓர் இந்தியப் படகும் மூன்று உள்ளூர் படகுகளும் சோதனையிடப்பட்டன. இதன்போது, இந்திய மீன்பிடிப் படகிலிருந்து உள்ளூர் படகுகளுக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்த 54 பொதிகள் அதிகாரிகளால் கண்டறியப்பட்டன. அவற்றை ஆய்வு செய்ததில், அவற்றில் பொதி செய்யப்பட்டிருந்த சுமார் 2,000 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகள் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட இந்தியச் சந்தேக நபர்கள் 18 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், இலங்கைச் சந்தேக நபர்கள் கற்பிட்டியைச் சேர்ந்த 21 முதல் 42 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், பீடி இலைகள் மற்றும் படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கொழும்பு துறைமுக சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .