2026 மார்ச் 26, வியாழக்கிழமை

அபிவிருத்திக்கு உறுதியான அடித்தளம் அவசியமாகும்

Janu   / 2026 மார்ச் 26 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்கால அபிவிருத்திக்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கும் அதேவேளை, பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிப்புக்குள்ளாகக்கூடிய விளிம்புநிலை மக்களைப் பாதுகாக்கும் வகையிலான மறுசீரமைப்புச் செயல்முறையை நோக்கி இலங்கை பயணிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் கொள்கை நவீனமயமாக்கல் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார நிபுணர் எலினா பனரிடிஸை (Elena Panaritis), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வியாழக்கிழமை (26) அன்று  சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

உலக வங்கியின் முன்னாள் பொருளாதார நிபுணரும், கிரேக்க பாராளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான எலினா பனரிடிஸ், பல்வேறு நாடுகளில் நிறுவன மறுசீரமைப்பு, பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் நிதி மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் நீண்டகால அனுபவம் கொண்டவர்.

இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கையின் நீண்டகால வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில், ஆட்சிக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல் குறித்து இரு தரப்பினரும் விரிவாக ஆராய்ந்தனர். நடைமுறைச் சாத்தியமான கொள்கைத் தீர்வுகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மக்களுக்குச் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, நிலையான பொருளாதார மீட்சியை எட்டுவதற்கு உலக மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கொள்கை அணுகுமுறைகளை ஆராய்வது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு சுட்டிக்காட்டினார். பொருளாதார நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நிறுவனங்களை உருவாக்குவதில் சர்வதேச அனுபவங்கள் குறித்தும் இதன்போது மதிப்பாய்வு செய்யப்பட்டது.

வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் வினைத்திறனான அரச சேவையை உறுதிப்படுத்துவதுடன், நிதி ஒழுக்கத்தைச் சமூக நலனுடன் சமநிலைப்படுத்தும் மக்கள் மையப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

எதிர்கால அபிவிருத்திக்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கும் அதேவேளை, பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிப்புக்குள்ளாகக்கூடிய விளிம்புநிலை மக்களைப் பாதுகாக்கும் வகையிலான மறுசீரமைப்புச் செயல்முறையை நோக்கி இலங்கை பயணிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .