2026 மே 01, வெள்ளிக்கிழமை

‘ஆன்மீக வளர்ச்சிக்கு ஒரு பலமான உந்துசக்தி’

Editorial   / 2021 மார்ச் 11 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள், சிவபெருமானின் அருள் ஒளி கொண்டு, அறியாமை இருள் அகற்றி, ஞானத்தின் மகிமையை அடைவதற்கான பிரார்த்தனையுடன், பழங்காலத்திலிருந்தே மகா சிவராத்திரி தினத்தில் மிகுந்த பக்தியுடன் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, உலகில் சக்திவாய்ந்த தெய்வமாக, அவர்கள் கருதும் சிவபெருமானின் ஆசீர்வாதம் சமூக, பொருளாதார சுபீட்சத்துக்கும் சிறந்த ஆரோக்கியத்துக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் பலமான உந்துசக்தி என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்து சமய பக்தர்களால் அனுஷ்டிக்கப்படும் மகா சிவராத்திரி தினத்தில், அவர்கள் கண் விழித்து பல்வேறு கலாசார பெறுமானங்களுடன் கூடிய சடங்குகளில் ஈடுபட்டு, சிவபெருமானுக்குப் பூஜை செய்கிறார்கள். இதன் மூலம்  நித்திய ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கிறார்கள். மனதை ஒருநிலைப்படுத்தி, பக்திச் சிரத்தையுடன் சிவ வழிபாட்டில் ஈடுபடுவதன் மூலம், ஆன்மீக உயர்வை அடைய முடியம் என்று இந்து பக்தர்கள் நம்புகிறார்கள்.

பழங்காலத்திலிருந்தே இலங்கை வாழ் இந்துக்களின் இந்த அற்புதமான கலாசார விழா, எமது சமூகத்துக்கு அளவிடற்கரிய பெறுமதியை சேர்த்துள்ளது. இந்தச் சமய நடைமுறைகள், பல்வகை கலை இலக்கிய அம்சங்களைப் போன்றே, சிறந்த நடனப் பாரம்பரியத்துக்கும் வழிவகுத்துள்ளது.

கடந்த ஆண்டு கோவிட்-19 நோய் பரவலின் காரணமாக, இந்து பக்தர்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி, மகா சிவராத்திரி கிரியைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. அந்தக் கட்டுப்பாடுகளில் இம்முறை சிறிது தளர்வு இருந்தாலும், கடந்த வருடத்தைப் போன்றே இவ்வருடமும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி, மகா சிவராத்திரி தினத்தை அனுஷ்டிப்பார்கள் என்று நாம் நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மகா சிவராத்திரி தின தீப ஒளி, இந்து மக்களின் ஆன்மீகத்தை ஒளியூட்டுவதைப் போன்றே, சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சியை அடைந்துகொள்வதற்கும் சிவபெருமான் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் என, தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .