2025 மே 19, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் 34 பேருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், எஸ்.றொசேரியன் லெம்பேட், மார்க் ஆனந்த்

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்பரப்புக்கு அண்மித்த பகுதிகளில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 34 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம்

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டபோது, யாழ்;ப்பாணக் கடற்பரப்பில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (27) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

நெடுந்தீவுக்கு அண்மிய கடற்பரப்பில் 2 விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்ட 13 மீனவர்களை, எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் உத்தரவிட்டார்.

அத்துடன், பருத்தித்துறைக்கு அண்மிய கடற்பரப்பில் 2 விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களை, எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் உருத்திரேஸ்வரன் விஜயராணி உத்தரவிட்டார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த தமிழகத்தின் நாகை மற்றும் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேற்படி மீனவர்களை பொறுப்பேற்ற யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள், அவர்களை அந்தந்த நீதவான்கள் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

மன்னார்

இதேவேளை, தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட வேளை, கடற்படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை (27) அதிகாலை கைதுசெய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் உத்தரவிட்டார்.  

குறித்த இந்திய மீனவர்கள் 11 பேரும் 3 படகுகளில் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர், இவர்களைக் கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு நேற்று மதியம் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்தனர். 

குறித்த மீனவர்கள், மன்னார் கடற்தொழில் திணைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டு அவர்களிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின் மன்னார் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X