Niroshini / 2021 மே 24 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியதை அடுத்து, அவருடன் தொடர்பிலிருந்த அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனைக்கமைய, அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் இடம்பெற்ற சபை அமர்வுகளில், எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொண்டிருந்த நிலையில், அவருடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, அவர்களை அனைவரும் சுயதனிமைப்படுத்தலில் இருக்க வேண்டுமென்று, சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென்று, பாராளுமன்றத்தின் பிரதம படைக்களச் சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாஸவுடன் நெருங்கிப் பழகியவர்களை, சிசிடிவி கெமராக்களின் உதவியுடன் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கண்டறியப்படுபவர்கள் அனைவரும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, சஜித் பிரேமதாஸவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்ததால், தானும் தற்போது தனிமைப்படுத்தலில் இருப்பதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
தான் உள்ளிட்ட எம்.பிக்கள் சிலர், கொரோனா தொற்றைக் கண்டறிவதற்கான பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாகவும், மத்துமபண்டார எம்.பி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .