2024 மே 06, திங்கட்கிழமை

‘சகல குடிமக்களுக்கும் மொழி, மதத்தில் சம உரிமை வேண்டும்’

Nirshan Ramanujam   / 2017 நவம்பர் 02 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சகல குடிமக்களுக்கும் மொழியில் சம உரிமையும் மதத்தில் சம உரிமையும் வழங்கப்படவேண்டும்” என, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

“எந்தவொரு மதத்தையும் உயர்த்தியோ அல்லது தாழ்த்துவதன் ஊடாக, இனங்களுக்கிடையில் ஒன்றுமையை ஏற்படுத்த முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.

அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், நேற்று (01) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போ​தே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“அரசமைப்புத் தொடர்பில் அரசமைப்பின் வழிநடத்தல் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தை விடவும்,  நாடாளுமன்றத்துக்கு வெளியே பரபரப்பாகப் பேசப்படுகின்றது. பலர் பொய்யான தகவல்களைப் பரப்புவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால், தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுகின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.

“நாடாளுமன்றத்தைக் குண்டு வைத்துத் தாக்கப்போவதாகக் கூறும் சிலரது கருத்துகளை நாம் செவிமடுக்கத் தேவையில்லை. அதனை நாம் பொருட்டாகவே கொள்ளத் தேவையில்லை” என்றார்.

“அரசமைப்பு உருவாக்கம் என்பது இந்த முறையில்தான் முன்மொழியப்படுகிறது எனக் கூறுகிறார்கள். ஆனால், கடந்த காலங்களில், குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல்களில் அரசமைப்பு உருவாக்குவது தொடர்பில் உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

“முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, ஜனாதிபதித்  தேர்தலில் போட்டியிடும் போது, புதிய அரசமைப்பின் அவசியம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புதிய அரசமைப்புக் குறித்து, அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்துள்ளார். அவ்வாறு பார்க்கையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, புதிய அரசமைப்புத் தொடர்பில் தொடர்ச்சியாக உறுதியளித்துள்ளது. ஆகையால், புதிய அரசமைப்பை, இப்போது நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டை சுதந்திரக் கட்சி  கொண்டிருக்கிறது” என்றும் அவர் ஞாபகமூட்டினார்.

“இங்கு, இடம்பெறுகின்ற விவாதத்தில் ஒரு சிலரின் கருத்துகளை அவதானிக்கும் போது, நாட்டுக்கு அரசமைப்பு ஒன்று அவசியமா என்பதில் உடன்பாட்டுக்கு வரவேண்டியுள்ளதாக நான் எண்ணுகின்றேன். ஏனென்றால், அரசமைப்பு அவசியம் என வாக்குக் கேட்டவர்களே, இன்று வேறு விதமான கருத்துகளை முன்வைக்கிறார்கள். நாமும் நாட்டை நேசிப்பவர்கள். நாடு பிளவுபடுவதற்கு நாம் அனுமதிக்கப்போவதில்லை. ஆனால், இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சமமான வகையிலான தீர்வு அவசியமாகும்” என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,  தேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்கள். வடக்கில் விக்னேஷ்வரன் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் தேவைகளுக்காகச் சிறைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து வெளியில் வந்திருக்கக் கூடிய நிலை இது. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X