2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சர்ச்சைகளுக்குரிய விடயங்​களை‘விக்னேஸ்வரன் பேசவில்லை’: சபையில் சம்பந்தன் விளக்கம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற 'எழுக தமிழ்' பேரணியின் போது, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாகச் சர்ச்சைகள் எழுப்பப்பட்டுவரும் கருத்துக்கள், அவரால் பேசப்பட்டிருக்கவில்லை என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04) சபையில் விளக்கமளித்தார்.  

எழுக தமிழ் நிகழ்வில் போது, பௌத்த சாசனத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணான வகையிலுமான கருத்துக்களை விக்னேஸ்வரன் முன்வைத்தார் என்று சுட்டிக்காட்டிய, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, 23/2ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ், நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்து உரையாற்றுகையிலேயே, சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,  

“இந்த விடயத்தைச் சர்ச்சைக்குள்ளாக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. நாம் அந்த எழுக தமிழ் நிகழ்வில் கலந்துகொள்ளவுமில்லை. அதில் கலந்துகொள்ளாமல் இருந்தமைக்கு எம்மிடம் உரிய காரணங்களும் உண்டு.  

இதேநேரம், வடக்கிலும் அதேபோல், கிழக்கிலும் உள்ள மக்கள் நீண்ட காலமாக பாரிய கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அவற்றில் மிகவும் விரைந்து தீர்க்கப்பட வேண்டிய பல நியாயபூர்வமான விடயங்கள் இருக்கின்றன. இவ்வாறான விடயங்களில் அரசாங்கத்தின் மந்தகதியான செயற்பாடு குறித்து அதிருப்பதி தெரிவித்து, இந்த சபையில் நான் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் முறையிட்டிருக்கிறேன். அந்த விடயங்கள் தொடர்பில், அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டிய அவசியம் காணப்படுகிறது.  

எழுக தமிழ் நிகழ்வைப் பொறுத்தவரையில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பேச்சு, அச்சு மற்றும் இலத்திரனியல் என இரு ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன. அந்த வகையில், அவர் கூறியதாக காரணம் கூறப்படும் அனைத்து விடயங்களையும் அவர் அங்கு பேசியிருந்தார் என்று நான் கருதவில்லை. உண்மையில், தாம் கூறியதாக காரணம் கூறப்பட்ட விடயங்களுக்கு, அவர் பின்னர் மறுப்பும் வெளியிட்டிருந்தார்.

விக்னேஸ்வரனின் பேச்சு, தமிழில் கிடைத்தது. நான் அதை தமிழில் வாசித்திருந்தேன். அந்த வகையில், எனது நிலைப்பாடு என்னவென்றால், அவர் கூறியதாக காரணம் காட்டப்படும் பல்வேறு கருத்துக்களும் அவரால் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .