2025 நவம்பர் 19, புதன்கிழமை

’தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை ஒருபோதும் விடுவிக்காதீர்’

Freelancer   / 2025 நவம்பர் 19 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை ஒருபோதும் விடுவிக்கக் கூடாது. தனிப்பட்ட பாதுகாப்பினை விட  தேசியப் பாதுகாப்பு  முக்கியம் எனவே தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய வடக்கு காணிகளை  இராணுவத்தினர் வசம் வைத்துக் கொள்ள வேண்டுமென  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பி.  நளின் பண்டார வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) அன்று இடம்பெற்ற   2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டகுழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  இவ்வாறு வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளால்  தேசியப் பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது.நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்பற்று  செயற்படுகிறது.  30 ஆண்டுகால யுத்தத்தால் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டார்கள். யுத்தம் முடிவடைந்து விட்டது என்று குறிப்பிட முடியாது. எதிர்காலத்தில் யுத்தம் ஒன்று தோற்றம் பெறலாம். ஆகவே அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியம்.

வடக்கு மாகாணம் தேசியப் பாதுகாப்பின் பிரதான கேந்திர மையமாக உள்ளது .வடக்கில் காணி பிரச்சினை காணப்படுகிறது. தனிப்பட்ட பாதுகாப்பினை விட, தேசியப் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு  காணி விடுவிப்பு குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும். தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை  இராணுவத்தினர் வசம் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறான காணிகளை ஒருபோதும் விடுவிக்கக்கூடாது. பாதுகாப்பு  காரணிகளுடன் தொடர்புடைய காணிகளை விடுவிப்பதற்குப் பதிலாகக் காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அல்லது காணிகளுக்குப் பதிலாக நஷ்டஈடு வழங்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெறாத வகையில்  தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகள்  முறையாக அடையாளப்படுத்தப்பட வேண்டும். தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய  காணிகளை விடுவிக்கவே  கூடாது. வடக்கு மக்களுக்கு அநீதி இழைக்க வேண்டும் என்று நாங்கள் குறிப்பிடவில்லை. காணிக்கு போதுமான அளவு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறுகின்றேன் .

வடக்கு வாக்குகளைப் பெறுவதற்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்காமல் தேசியப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி அரசாங்கம் செயற்பட  வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில்  தேசியப் பாதுகாப்பு குறித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் .அதுதான் நாட்டுக்குத் தேவை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X