2025 நவம்பர் 19, புதன்கிழமை

’’கடற்படை முகாமைஅகற்றவேண்டாமென மக்கள் கோருகின்றனர்’’

Freelancer   / 2025 நவம்பர் 19 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று தமிழ் அரசியல்வாதிகள் வலியுறுத்தும் நிலையில், யாழ்ப்பாணம் காரைத்தீவு பகுதியில் உள்ள கடற்படை  முகாமை அகற்ற வேண்டாம் என்று  அப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளார்கள். 147 பேர் கைச்சாத்திட்டு கையளித்த அந்த கடிதத்தைச் சபைக்குச் சமர்ப்பிக்கிறேன் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) அன்று இடம்பெற்ற   2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட   குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர்  பேசுகையில்,

எமது அரசு 2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாதாளக் குழுக்களுக்கு இடையிலான மோதல் மற்றும் அதனூடான தாக்கங்கள் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் தான் சுற்றுலா செல்வதற்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலையில் உள்ளது.

போதைப்பொருள் வியாபாரத்தை இல்லாதொழிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் போதைப்பொருள் வியாபாரத்திலும் ஈடுபடுகிறார்கள். இலங்கையின் கடற்பரப்பு மற்றும் ஆழ்கடல் பரப்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய  சர்வதேச மட்டத்தில் ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய அண்மைய காலப்பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினர், பொலிஸார் ஈடுபடுவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியிருந்தார். இது முற்றிலும் தவறானது. போதைப்பொருள் ஒழிப்புக்கான முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருந்தொகையான இராணுவத்தினர் இருப்பதாகவும், ஒரு சிவில் பிரஜைக்கு இரண்டு படையினர் இருப்பதாகவும் தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடுகிறார்கள். இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார்கள். ஆனால்,  யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள கடற்படை  முகாமை அகற்ற வேண்டாம் என்று அப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளார்கள். 147 பேர் கைச்சாத்திட்டு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்கள். அந்த கடிதத்தைச் சபைக்குச் சமர்ப்பிக்கிறேன்.
 
கடற்படை முகாம் இருப்பதால் தான் எமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. போதைப்பொருள் வியாபாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று காரைநகர்  பகுதி தமிழ் மக்கள் குறிப்பிடுகிறார்கள். பொதுமக்களின் அபிலாசைகளை அடிப்படையாகக்  கொண்டு உரிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம் தேசியப் பாதுகாப்புடன் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வடக்கு , கிழக்கு மாகாணத்தில் காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுகின்றன. காணி விடுவிப்புக்குத் தடையாக உள்ள காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X