Freelancer / 2022 ஜனவரி 27 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுகர்வோரால் திருப்பி அனுப்பப்படும் ஓரளவு பயன்படுத்தப்பட்ட சந்தேகத்துக்கிடமான எரிவாயு சிலிண்டர்களை ஏற்றுக்கொள்ளுமாறு, லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை, மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்தது.
பாதுகாப்பற்ற எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கும் எரிவாயு நிறுவனங்களின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றில், நேற்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது, நுகர்வோர் விவகார அதிகாரசபை சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி மனோகர ஜயசிங்க மேற்குறிப்பிட்ட விடயங்களைத் தெரிவித்தார்.
இந்த மனுவை தாக்கல் செய்த பொதுநல வழக்கு செயற்பாட்டாளர் நாகாநந்த கொடித்துவக்கு, இலங்கை தர நிர்ணய நிறுவன நியமங்களுக்கு இணங்காத பகுதியளவு பயன்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை மீளப்பெறுமாறு வழங்கிய நீதிமன்ற உத்தரவை எரிவாயு நிறுவனங்கள் உட்பட பிரதிவாதிகள் அமுல்படுத்தத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தினார்.
இதற்குப் பதிலளித்த சிரேஷ்ட அரச சட்டத்தரணி, நுகர்வோர் விவகார அதிகாரசபையானது பகுதியளவு பயன்படுத்தப்பட்ட சந்தேகத்துக்கிடமான எரிவாயு சிலிண்டர்களை அருகிலுள்ள விநியோக முகவர் அல்லது விற்பனை முகவர்களிடம் வழங்கி, அதில் மீதமுள்ள எரிவாயுவின் தற்போதைய சந்தை விலைக்கு அமைய புதிய எரிவாயு சிலிண்டரை பெறுவது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் பத்திரிகை விளம்பரங்களை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
இந்த செய்தியை மின்னணு ஊடகங்களிலும் வெளியிட தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ருவான் பெர்னாண்டோ மற்றும் நீதியரசர் சம்பத் விஜேரத்ன ஆகிய இரு நீதியரசர்களைக் கொண்ட குழாம்,மனுவை ஆதரிப்பதற்கான தினமாக பெப்ரவரி 8 ஆம் திகதியை அறிவித்தது.
லிட்ரோ நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அவரது மூத்த வழக்கறிஞர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதால் மனுவை ஆதரிப்பதற்கு பிறிதொரு தினத்தைக் கோரினார்.
நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான எரிவாயு பாவனையாளர்களை நேரடியாகப் பாதிக்கும் இந்த வழக்கை இயன்றவரை விசாரிக்க வேண்டியதன் அவசியத்தை மனுதாரர் நாகாநந்த கொடிதுவாக்கு வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி, இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பிட்ட தரநிலைகள் இல்லாமல் வீட்டு உபயோகத்துக்காக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீட்டித்தது.
இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட எரிவாயு கலவையை காட்சிப்படுத்தாமல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க வேண்டாம் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் மற்றும் இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026