2026 மார்ச் 04, புதன்கிழமை

மூன்று திருமணம்; அடங்காத பெண் ஆசையால் கோரம்

S.Renuka   / 2026 மார்ச் 04 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் இடம்பெற்ற இரத்த சரித்திரம் ஒட்டுமொத்த ஊரையும் உலுக்கியெடுத்துள்ளது. 

கள்ளக்காதல் அட்டகாசங்கள் பெருகி வரும் நிலையில், இந்த கோவை மாவட்டத்தில் அரங்கேறியுள்ள சம்பவமும் வன்முறையில் முடிந்துள்ளது. இது தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர். அப்படி என்ன நடந்தது?

சூலூர் அருகே உள்ள நாகமநாயக்கன் பாளையம் பகுதியில் வசிப்பவர் 52 வயதான பிரேம் ஆனந்த். இவர் ஒரு லொறி உரிமையாளர் பிரேம் ஆனந்திற்கு ஏற்கெனவே மூன்று திருமணங்கள் நடந்து முடிந்து விட்டடன..

முதல் மனைவி இறந்து விட்டார்.. இரண்டாவது மனைவி விவாகரத்து பெற்றுச் சென்றுவிட்டார். மூன்றாவது மனைவியோ வேறொருவருடன் ஓடிவிட்டார். இதனால் நொந்து போய் விரக்தியில் இருந்த பிரேம் ஆனந்திற்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த 37 வயது அன்பு எஸ்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இந்த பெண், பிரேம் ஆனந்திற்கு உறவினர் ஆவார்.

அன்பு எஸ்தரின் கணவர் துபாயில் வேலை பார்த்து வரும் நிலையில், இரண்டு மகன்களுடன் வசித்து வந்த அன்பு எஸ்தருடன் பிரேம் ஆனந்த் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களது உறவு சுமூகமாகச் சென்று கொண்டிருந்தபோதுதான், மீண்டும் பிரேம் ஆனந்த் வாழ்க்கையில் புயல் அடித்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்பு அன்பு எஸ்தர் அந்த பகுதியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த திலீபன் நடத்தி வந்த ஓட்டலில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். திருப்பத்தூரைச் சேர்ந்த திலீபனுக்கு கல்யாணமாகிவிட்டது. சொந்த ஊரில் மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்..

இந்நிலையில், வேலைக்கு வந்த அன்பு எஸ்தருடன் திலீபனுக்கு நெருக்கம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.. இந்த விவகாரம் பிரேம் ஆனந்திற்குத் தெரியவரவே, அவர் கடும் ஆத்திரமடைந்து எஸ்தரை வேலைக்குச் செல்லக்கூடாது எனத் தடுத்துள்ளார். ஆனால், எஸ்தர் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஓட்டலுக்குச் சென்றதால் ஆத்திரமடைந்த பிரேம் ஆனந்த், கடந்த ஜனவரி மாதம் நேராக ஓட்டலுக்குச் சென்றுள்ளார்..

அப்போது திலீபனும், எஸ்தரும் ஒன்றாக உட்கார்ந்து காய்கறி நறுக்கி கொண்டிருந்தார்களாம. அதை பார்த்ததுமே பிரேம் ஆனந்துக்கு கோபம் தலைக்கேறிவிட்டது..

உடனே அங்கிருந்த கத்தியால் எஸ்தரின் கழுத்தில் குத்தினார். அதைத் தடுக்க வந்த திலீபனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இந்த கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட பிரேம் ஆனந்த், 17 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஜெயிலில் இருந்து வந்த பிறகும் எஸ்தர் மற்றும் திலீபனின் நெருக்கம் குறையவில்லை. இதனால் மீண்டும் ஆவேசமானார் பிரேம் ஆனந்த்.

"தனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக்கூடாது" என்ற கொடூர முடிவை எடுத்தார். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கத்தியுடன் எஸ்தரின் வீட்டிற்குச் சென்ற பிரேம் ஆனந்த், கதவை தட்டியுள்ளார். எஸ்தர் கதவைத் திறந்தபோது, உள்ளே கட்டிலில் திலீபன் படுத்திருப்பதைக் கண்டு ஆவேசத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்.

கண் இமைக்கும் நேரத்தில் திலீபனை சரமாரியாக கத்தியால் குத்தினார். உடலில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் பலமான குத்துக்கள் விழுந்ததில் திலீபன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தடுக்க வந்த எஸ்தருக்கும் காயம் ஏற்பட்டது.

அதோடு நில்லாமல், "சாகும்போதாவது நாம் ஒன்றாகச் சாகுவோம்" என்று கத்திக்கொண்டே சமையல் எரிவாயுவை திறந்து விட்டு தீ வைத்தார்.. இதில் வீடு முழுவதும் தீப்பற்றி எரிய, ஜன்னல் கண்ணாடிகள் வெடித்துச் சிதறின.. எஸ்தர் சமயோசிதமாக வேறொரு ரூமுக்கு ஓடி உயிர் தப்பினார்.

ஆனால் பிரேம் ஆனந்த் மீது தீப்பற்றியதில் அவர் 30 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடினார். சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், உயிரிழந்த திலீபனின் உடலை மீட்டு, படுகாயமடைந்த எஸ்தர் மற்றும் தீக்காயமடைந்த பிரேம் ஆனந்தை மருத்துவமனையில் அனுமதித்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் அரங்கேறிய இந்த கோரத் தாண்டவம் சூலூர் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .