2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

விஜய்க்கு எதிராக 5 பிரிவுகளில் வழக்கு

Editorial   / 2026 மார்ச் 31 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழக சட்டசபைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 23-ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4-ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுத் தொடங்கிய நிலையில், மனுத் தாக்கல் செய்ய ஏப்ரல் 6-ம் திகதி கடைசித் திகதியாகும்.

கால அவகாசம் குறைவாக இருப்பதால், முதலாம் திகதியான நேற்றே வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய மிகுந்த ஆர்வம் காட்டினர்.

 

  • மு.க.ஸ்டாலின்: சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
  • விஜய்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். நேற்று அவர் பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

 

மனுத் தாக்கலுக்குப் பின், பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகம் நோக்கி விஜய் பிரசார வாகனத்தில் சென்றார். வழியெங்கும் திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்ததால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து பெரம்பூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஆண்கள், பெண்கள் எனப் பெருந்திரளான மக்கள் கூட்டமாகத் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசலைக் குறைக்க பிரசார வாகனம் 500 மீற்றர் தள்ளி நிறுத்தப்பட்டது. இளைஞர்களின் எழுச்சிக்கு மத்தியில் விஜய் தனது முதல் பிரசாரத்தைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து, நாளை மறுதினம் திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார்.

 

சென்னை கொளத்தூரில் பிரசாரத்தின்போது தேர்தல் விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது பெரவள்ளூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வழக்கிற்கான காரணங்கள்:

  1. ஒலிபெருக்கி விதிமீறல்: 5 ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த மாத்திரமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதனை மீறி 30 ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை.
  2. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் கூட்டம்: 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களைத் திரட்டியமை.
  3. அவசர கால சேவைக்கு இடையூறு: பிரசாரத்தின் போது ஆம்புலன்ஸ் செல்வதற்கான பாதையை மறைத்தமை.

தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் பெரவள்ளூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .