2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

திருகோணமலை நகர் -கிண்ணியாவுக்கான பஸ் சேவையை ஆரம்பிக்க வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை நகரிலிருந்து கிண்ணியாவுக்கு இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வு செவ்வாய்க்கிழமை (4)  நடைபெற்றபோது, போக்குவரத்து அமைச்சின் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'கிண்ணியாப் பாலம் திறந்து வைக்கப்படும் வரையில் திருகோணமலை நகரிலிருந்து கிண்ணியாவுக்கு தனியான பஸ் சேவை இருந்தது. ஆனால், இப்பாலம் திறந்து வைக்கப்பட்ட பின்னர், இச்சேவை நிறுத்தப்பட்டு, திருகோணமலை - மூதூர் என்ற சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், மூதூரிலிருந்து வரும் பஸ்ஸிலேயே கிண்ணியாவைச் சேர்ந்தவர்கள்; பயணிக்க வேண்டியுள்ளது' என்றார்.  
மேலும், தற்போது கல்முனை -யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான சேவையில் ஈடுபடும் பஸ்கள் பொலன்னறுவை, ஹபரனை, அநுராதபுரம் ஊடாகப் பயணிக்கின்றன. இவற்றில் சில பஸ்களை  வாகரை -திருகோணமலை ஊடாக யாழ்ப்பாணத்துக்கு பயணிக்கும்  வகையில்  ஏற்பாடு செய்ய  வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர்,  இதன் மூலம் வாகரை, வெருகல், சேருவில ஆகிய  பகுதிகளைச் சேர்ந்த மக்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவுக்குப் பயணிப்பதில் எதிர்நோக்கும் சிரமத்தைக் குறைக்க முடியும் எனத் தெரிவித்தார்.

கிண்ணியா, மூதூர், கந்தளாய்  ஆகிய பஸ் டிப்போக்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X