2025 ஜூன் 21, சனிக்கிழமை

'மீண்டுமொரு இளைஞர் கிளர்ச்சிக்கு இடமளிக்க முடியாது'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 02 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம், வடமலை ராஜ்குமார்

'இந்த நாட்டில் மீண்டுமொரு இளைஞர் கிளர்ச்சிக்கு இடங்கொடுக்காமல் இருப்பது ஆட்சியில் இருப்பவர்களின் பொறுப்பாகும் என்பதுடன், எதிர்காலத்தில் அவ்வாறான  நிலைமைக்கு எமது இளைஞர்களை உருவாக்குவதற்கு இடமளிக்க முடியாது' என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

திருகோணமலை மெய்கெய்ஷர் விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (1) மாலை நடைபெற்ற யொவுன்புர இறுநாள் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'வடகிழக்கில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற குழப்பமான சூழ்நிலை காரணமாக இரண்டு பிரிவுகளிலும் எமது இளைஞர்களே உயிரிழந்தார்கள். எனவே, மீண்டும் இளைஞர் கிளர்ச்சிக்கு இடங்கொடுக்க முடியாது என்பதுடன்,  இளைஞர்களின் கைகளில் ஆயுதத்தைக்  கொடுக்க முடியாது. அவ்வாறான நிலைமையை முற்றாக ஒழிப்பது ஆட்சியாளர்களின் கடமையாகும்.

உங்களுக்கு இடையில் காணப்படும் வேறுபாடுகளுக்கு  அப்பால் நாடு என்ற அடிப்படையில் செயற்படும் நிலைமையை உருவாக்க வேண்டும் என்பதுடன்,  இளைஞர்களுக்கு ஏற்புடைய சூழலையும்  உருவாக்க வேண்டும்.

இளைஞர்கள் வேலைவாய்ப்புத் தேடி அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் நிலைமையை முற்றாக மாற்ற வேண்டும். இந்த இளைஞர்களை சிறந்த எதிர்காலத்தை நோக்கிய செயற்பட வைக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக இளைஞர்களின் எண்ணம், கருத்துகளை புரிந்துகொள்ளும் வகையில் திறந்த மனதுடனான செயற்பாடு அவசியமாக ஏற்படுத்தப்பட வேண்டும்.

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை எடுத்துக்கொண்டால், இது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் காணப்படும் பிரச்சினை அல்ல.

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை இந்த வருடத்துக்குள்  தீர்ப்பதற்கான சில முடிகளை எடுத்துள்ளோம்.
மேலும், இந்த நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவும் வெளிநாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும்  பல வகைகளில் இளைஞர்களை நாம் முறையாகப் பயன்படுத்த வேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது.

இவ்வாறிருக்க,  இந்த நாட்டிலுள்ள மூவின மக்களும்  ஒன்றிணைந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்திலும் இளைஞர்களின் பங்களிப்பை உறுதி செய்த வண்ணம் செயற்பட வேண்டும். எனவே, இளைஞர்களின் எதிர்காலத்தை சிறந்த முறையில் ஏற்படுத்த வேண்டியது அரசாங்கம் என்ற வகையில் எமது பொறுப்பாகும்' என்றார்.

'கடந்த 2 வருடகாலத்தில் பல விடயங்களில் எம்மால் வெற்றி காண முடிந்தது. சர்வதேச நிலைமையை வெற்றி கொண்டமை, நாட்டினுள் சமாதானச் சூழலை ஏற்படுத்தியமை, சுதந்திரமாக சகலரும் வாழும் சூழ்நிலையை உறுத்திப்படுத்தியமை போன்றவற்றில் நாம் முக்கியத்துவம் வழங்கியுள்ளோம்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .