2025 ஜூன் 28, சனிக்கிழமை

சமவுரிமையுடன் வாழவேண்டுமென்பதையே தமிழர்கள் கேட்கின்றனர்: திருமலை முதன்மை வேட்பாளர்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


இந்த நாட்டில் சமவுரிமை உள்ள பிரஜைகளாக வாழ வேண்டும் என்பதையே தமிழர்கள் கேட்கின்றனர். பெரும்பான்மை மக்களுக்கு இல்லாத எந்த உரிமைகளையோ அதிகாரங்களையோ அவர்கள் கேட்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

திருகோணமலை சல்லிப்பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாண தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற சிங்கள மக்கள் எங்கள் நண்பர்கள். முஸ்லிம்கள் எங்கள் உறவினர்கள். இவர்கள் எல்லோருடனும் இணைந்து வாழவே நாங்கள் விரும்புகின்றோம். எல்லா மக்களையும் அரவணைத்துக்கொண்டு செல்லவே நாம் விரும்புகின்றோம்.
இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மையான தமிழ் இனம் 60 வருடங்களுக்கு மேலாக தமது உரிமைகளுக்காக போராடி வருகின்றது. சுதந்திரத்திற்கு பின் 30 வருடங்களாக தந்தை செல்வாவின் வழியில் அகிம்சை ரீதியில் போராடினார்கள். ஆனால் அந்தக் காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களை கவனத்திற்கொள்ள மறுத்துவிட்டனர்.

தமிழர்களின் அகிம்சைவழிப் போரட்டங்கள் கொடூரமாக தொடர்ந்து ஒடுக்கப்பட்டது. இதனால் ஆயுத ரீதியில் தமது உரிமைகளைப் பெறுவதற்கான ஒரு முனைப்பு தமிழ் இளைஞர்களுக்கு ஏற்பட்டது. இது 30 வருடங்களாக நீடித்தது. ஆனால் அந்தப் போராட்டமும் தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வையும் தராமல் முடிந்தது.

உள்நாட்டில் தமிழர்களின் உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் பெரும்பான்மை இனத்திற்கும் அதன் தலைவர்களுக்கும் இருந்தபோதும், அது அவர்களால் பயன்படுத்தப்படவில்லை.

தற்போது அமெரிக்கா, இந்தியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வைக் காணுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றன. இந்த அழுத்தங்களில் இருந்து விடுபட அரசாங்கம் ஒரு உபாயமாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முன்வைத்துள்ளது. தனக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்காக இந்தத் தேர்தல் முடிவுகளைக் காட்டுவதற்கு விரும்புகின்றது. கிழக்கு மாகாணசபையை வெற்றிகொள்வதன் மூலம் கிழக்கில் வாழ்கின்ற மக்கள் தனது பக்கமே உள்ளனர் என்று காட்ட முனைந்துள்ளது.

உள்நாட்டில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான பல சந்தர்ப்பங்களை பதவியில் இருந்த அரசாங்கங்களும் அதன் தலைவர்களும் தவறவிட்ட நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இப்போது சர்வதேசம் அக்கறை கொண்டுள்ளது. ஆகவே இந்தத் தேர்தலை அரசாங்கம் வெற்றிகொள்வதன் மூலம் சர்வதேசத்தின் அக்கறையை பின்தள்ளிவிட எண்ணுகின்றது. அதனை தமிழர்களாகிய நாம் அனுமதிக்கக்கூடாது.
அரசாங்கத்துக்கு துதிபாடும் முதலமைச்சர்களும் அமைச்சர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் தமிழ் மக்களது உரிமைகள் பற்றிக் குரல் கொடுக்க முடியாது உள்ளனர். தமிழ் பேசுகின்ற சிறுபான்மை மக்களது நில உரிமைகள் தொடர்பாக அரசாங்கம் சார்ந்த அமைச்சர்களின் நிலைப்பாடு எங்களுக்கு தெளிவாகவே தெரியும். எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள மாகாணசபையை ஒரு கருவியாக பயன்படுத்திக்கொள்ள முடியும். மாகாண நிர்வாகத்தை நாங்கள் கைப்பற்றுவதன் மூலம் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளையும் எமது உரிமைகளுக்கான கோரிக்கைகளையும் மிகப் பலமாக முன்னெடுக்க முடியும்.

நாங்கள் மாகாண நிர்வாகத்தை கைப்பற்றுவதன் மூலம் சகல இனமக்களும் எந்தவித பேதங்களும் இல்லாமல் சரிசமமாக நடத்தப்படுவதை உறுதி செய்யமுடியும். எங்களுடைய ஆட்சியில் எல்லா மக்களும் இதனைக் காணமுடியும்.

இந்த நாட்டில் வாழ்கின்ற எந்த ஒரு இனமும் இன்னும் ஒரு இனத்திற்கு தாழ்ந்தது அல்ல. எல்லா இனங்களும் சமமான உரிமையுடன் வாழவேண்டும் என்பது எங்களது போராட்டத்தின் அடிப்படையாகும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .