-எஸ்.எச்.அமீர்,எஸ்.சசிக்குமார்
மூதூர் பிரதேசத்திலுள்ள கங்குவேலி வவுணவில் பகுதியிலுள்ள வயல் நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்த நால்வர் கடும் தாக்குதல்களுக்கு உள்ளான நிலையில் இன்று திங்கட்கிழமை மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏ.தேவ மனோகரன் (வயது 45), மாணிக்கம் கோணலிங்கம் (56), சிதம்பரப்பிள்ளை துளசி நாதன் (46), வைரமுத்து கிறிஷ்ணமூர்த்தி (53) ஆகியவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமக்குச் சொந்தமான வயல் நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்த போது இன்று 11.00 மணியளவில் திடீரென வயலுக்குள் நுழைந்த சிலர் மண்வெட்டி, கோடரிப் பிடிகளினால் தம்மை திடீரென சரமாரியாகத் தாக்கியதாகவும் அந்நேரம் தாம் செய்வதறியாது கங்குவேலிப் பகுதி நோக்கி ஓடிவந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஊர்காவல் படையில் கடைமை புரிபவர்கள் என்று தெரிவிக்கும் பாதிக்கப்பட்டோர், குறித்த நபர்கள் இதற்கு முன்பு தமது காணியை அபகரித்து நெற்செய்கையில் ஈடுபட்டவர்கள் என்றும் கூறுகின்றனர்.
இத்தாக்குதல் சம்பவம்பற்றி மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.