2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சம்பூர் மக்களின் நிலங்களை மீள கையளிக்க நடவடிக்கை

Kogilavani   / 2015 மார்ச் 20 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார், வடமலை ராஜ்குமார்

சம்பூர் மக்களிடமிருந்து பெற்றுகொள்ளப்பட்ட நிலங்களை எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

'சம்பூர் உயர் பாதுகாப்பு வலயமாக கடந்த 9 வருடங்களாக கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 234 ஏக்கர் நிலமும் கேற்வே நிறுவனத்துக்கு அரசாங்கத்தினால் கையளிக்கப்பட்ட நிலையில் பொருளாதார அபிவிருத்தி வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட 818 ஏக்கர் நிலமுமே இவ்வாறு ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் சம்பூர் மக்களிடம் கையளிக்கப்படும்' என புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தலைமையில் அவரது அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற போதே, அமைச்சர் உத்தியோகபூர்வமாக இத்தகவலை வெளியிட்டார்.

இச்சந்திப்பு தொடர்பில் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவிக்கையில்,

'கடந்த 9 வருடங்களுக்கு மேலாக சம்பூர் மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு சென்று மீளக்குடியேற போராடி வருகின்றார்கள். அதற்கு நல்லதொரு தீர்வு இப்பொழுது கிடைத்துள்ளது.சம்பூர் குடியேற்றம் தொடர்பாக நல்லதொரு தீர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தற்பொழுது வழங்கியுள்ளனர்.

அமைச்சரவையும் சம்பூர் மக்கள் உடனடியாக மீளக்குடியேற்றப்பட வேண்டுமென்றே அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அதற்கமைவாக இரண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று முதலீட்டு வலயத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 818 ஏக்கர் காணியையும்-உடனடியாக உரிய சம்பூர் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுப்பதாகும்.

இரண்டாவது, கடந்த 9 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாக கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 234 ஏக்கர் நிலமும் உடனடியாக விடுவிக்கப்படவுள்ளது. கடற்படை உயர் அதிகாரிகள் இதற்குறிய ஒப்புதலை அளித்துள்ளார்கள். கடற்படையினருக்கு வேறு ஒரு இடத்தில் படை முகாம் அமைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

அத்துடன் மீளக்குடியேற்றப்பட உள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஐக்கிய நாடுகள் நிறுவனம் மற்றும் தொண்டர் நிறுவனங்களின் உதவிகளை பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்' என குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலின் போது கிழக்கு முதலமைச்சர் அல்ஹாஜ் ஹாபீஸ் நசீர் -கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, உள்ளுர்  போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக், மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஷ்வரன், மீள்குடியேற்ற அதிகார சபை தலைவர் ஹரீம்பீரிஸ், மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் திருமதி ரஞ்சனி நடராஜபிள்ளை மற்றும் பிரதேச செயலாளர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .