2025 மே 21, புதன்கிழமை

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 மே 19 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை, மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு கோரியும் அவ்வித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் இன்று வியாழக்கிழமை காலை வித்தியாலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, இவ்வித்தியாலய அபிவிருத்திச் சங்க செயலாளர் கு.மயிலன் தெரிவிக்கும்போது, 'எமது பாடசாலையில் சுமார்; 457 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். தற்போது 12 ஆசிரியர்களே உள்ளனர். எமது பாடசாலையில் கடந்த வருடம் 18 ஆசிரியர்கள் இருந்தார்கள். இதில் 6 ஆசிரியர்கள் வருடாந்த இடமாற்றம் மூலம் 2016ஆம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டு சென்றார்கள். எனினும், அதற்குப் பதில் ஆசிரியர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.

இது விடயமாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினாலும் பாடசாலை அதிபரினாலும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணிக்கு கடிதம் அனுப்பியும் எதுவித பதிலும் கிடைக்கவில்லை. தேர்தல் காலத்தில் மாத்திரம் கிராமங்களுக்கு தேடி வருகின்றார்கள். தேர்தல் முடிந்த பின் வெற்றி பெற்று கிராமங்களை கவனிக்காது நகரப்புறங்களில் கவனம் செலுத்துகின்றார்கள்' என்றார்.

மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து உதவிக் கல்வி பணிப்பாளர்களான வீ.எம்.லாபிர், ஏ.உதயக்குமார் ஆகியோர் ஆர்ப்பாட்ட வந்ததுடன், உடனடியாக நான்கு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .