2025 மே 14, புதன்கிழமை

‘தேர்தலை பிற்போடுவதில் எமக்கு உடன்பாடில்லை’

ஒலுமுதீன் கியாஸ்   / 2017 ஓகஸ்ட் 20 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“தேசியக் கட்சிகளிடையே நிலவும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கு, முஸ்லிம் காங்கிரஸுக்கு எவ்வித உடன்பாடும் கிடையாது” என்று,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்று (19) நடைபெற்ற ஸ்ரீ லங்‌கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது,

“மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுவதாக இருந்தால்,  2/3 பெரும்பான்மை ஆதரவுடன் யாப்பு திருத்தப்படவேண்டும். அந்த அறிவித்த தற்போது வர்த்தமானியில் பிரிசுரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கெதிராக சில சிவில் அமைப்புகள் வழக்குத்தாக்கல் செய்வதற்குத் தயாராகிவிட்டன.

“வடமத்தி, சப்ரகமுவ, கிழக்கு மாகாணசபைகளின் ஆயுட்காலம் விரைவில் நிறைவடையவுள்‌ள நிலையில், தேர்தலை பிற்போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் பல கட்சிகள் அதிருப்தி நிலையில் இருக்கின்றன. எதிர்வரும் திங்கட்கிழமை (இன்று) இதுதொடர்பில் கட்சித் தலைவர்கள், ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.

“இதுதவிர, வட்டாரமுறை ரீதியிலான தேர்தல்முறை பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. எங்களுடைய நீண்டகால போராட்டத்தின் பின்னர் 70:30 என்றிருந்த வட்டாரம் மற்றும் விகிதாசார தேர்தல் முறையை மாற்றுவதற்கான திருத்தம் அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்‌ளது. 60% வட்டாரம் மற்றும் 40% விகிதாசரம் என்ற ரீதியில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

“வட்டார எல்லை நிர்ணயம் தொடர்பிலும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. வட, கிழக்கில் எல்லை நிர்ணயத்தில் பல குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. இதுதொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. தேர்தலொன்று நடைபெறுமானால், அதற்கு முன் எல்லைநிர்ணய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உத்தரவாதம் ஒன்றை தரவேண்டுமென நான் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அவரும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

“எந்த சூழ்நிலை வந்தாலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலுக்கு முகம்கொடுக்க என்றும் தயாராகவே இருக்கிறது. வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாணசபை தொடர்பில் தேசியக் கட்சிகள் அச்சம்கொள்கின்றன. ஆனால், கிழக்கு மாகாணசபையைப் பெறுத்தவரை முஸ்லிம் காங்கிரஸும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தேர்தலை எதிர்கொள்ள என்‌றும் தயாராகவே இருக்கிறது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X