2025 ஜூன் 09, திங்கட்கிழமை

முச்சக்கர வண்டி குடைசாய்ந்ததில் சிறுவன் பலி

Princiya Dixci   / 2016 ஜூலை 07 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.என்.எம்.புஹாரி, ஏ.எம்.ஏ.பரீத், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

திருகோணமலை மாவட்டம் மூதூர் பொலிஸ் பிரிவு 3ஆம் கட்டை மலையடியில் நேற்று புதன்கிழமை (06) மாலை, முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் ஏழு வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பாலத்தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த பாலத்தோப்பூர் ஸாஹிறா வித்தியாலயத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவந்த ஹாபிஸ் இஜாஸ் (வயது 07) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

மேலும், இந்த விபத்தில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற அதன் உரிமையாளரான பாலத்தோப்பூரைச் சேர்ந்த ஹனீபா அஷ்ரப் (வயது 42) என்பவர் படுகாயமடைந்த நிலையில் முன்னதாக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,

மேற்படி முச்சக்கர வண்டிக்காரர், தனது சிறுவன் மற்றும் தனது மைத்துனரின் மூன்று சிறுவர்களையும் தனது முச்சக்கரவண்டியில் ஏற்றிக் கொண்டு பாலத்தோப்பூரிலிருந்து மூதூர் நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது 3ஆம் கட்டை மலையடி வளைவில் முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்துள்ளது.

அந்நேரத்தில் முச்சக்கரவண்டியில் இருந்த சிறுவர்களும் வீதியில் வீசியொறியப்பட்டுள்ளனர்.
எனினும், அதில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றவரும் ஒரு சிறுவனுமே பாரதூரமான காயங்களுக்குள்ளாகிய நிலையில், வீதியில் சென்றோரால் மீட்கப்பட்டு, மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பயனின்றி சிறுவன் அங்கு உயிரிழந்துள்ளான்.  

சிறுவனின் ஜனாஸா நல்லடக்கம், நேற்று (06) இரவு தோப்பூர் மையவாடியில் இடம்பெற்றது.

நோன்புப் பெருநாளன்று, சிறுவன் விபத்தில் உயிரிழந்துள்ளமை தோப்பூர் பிரதேசத்தைச் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

இச்சம்பவம் பற்றிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .