2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

’தோற்கடிக்கப்பட்டவரை மீண்டும் தோற்கடிப்பதா?’

Editorial   / 2019 ஒக்டோபர் 29 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் கொட்டத்தைத் தோற்கடித்த நிலையில், மீண்டும் அவரைத் தோற்கடிப்பதற்காக சஜித்துக்கு வாக்களியுங்கள் என்று கோருவது அபத்தமானதென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் தமிழ்மிரருக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

“கோட்டாபயவைத் தோற்கடிக்க வேண்டுமானால் சஜித்துக்கு வாக்களியுங்கள் எனப் பிரசாரம் செய்கின்றனர். 2015ஆம் ஆண்டில், இதே மக்கள்தான் மஹிந்த கொட்டத்தை அடக்கியவர்கள் என்பதை சஜித் தரப்பு மறந்துவிட்டது. ஏற்கெனவே தோற்கடித்தவரை மீண்டும் தோற்கடிக்க வேண்டுமெனக் கோருவது வெட்கக்கேடானது. 

“நம்பிக்கையுடன் இருந்த மக்களை இந்த அரசாங்கம் நடு வீதியில் விட்டுவிட்டது. அதனை மறைப்பதற்கு மீண்டும் பொய்களைக் கூறத் தொடங்கியிருக்கிறார்கள். இதனை மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்” என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

“இந்த நாட்டுக்கு இரண்டுவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. ஒன்று, வெளிநாடுகளின் அழுத்தம். அதனை ஒருபோதும் நாங்கள் ஏற்கப்போவதில்லை. அந்த அழுத்தங்களைக் கையாழுவது மிக முக்கியமானது. மற்றையது, தீவிரவாத நடவடிக்கைகள். தீவிரவாத நடவடிக்கை என்பது, தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற பலம்கொண்ட அமைப்பாக உருவாகும் சாத்தியம் இல்லை. 

'சிறு குழுக்களாகத் தீவிரவாதம் உருவாகலாம். அதனை அடக்குவது பீல்ட் மார்ஷல் போன்றவர்கள் தேவையில்லை. சிறு தீவிரவாதத்தை அடக்குவதற்கு முழுப் பலத்தையும் பிரயோகிக்க நினைப்பது தேவையற்ற வீண்விரயமாகும்” எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க, மேலும் தெரிவித்தார்.

“தமிழ் மக்கள் சில விடயங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களது இடத்தில் அங்குள்ள கட்சிகளை அவர்கள் ஆதரிக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால், தெற்கில் இருக்கும் எந்தக் கட்சியையாவது அவர்கள் ஆதரிக்க நினைத்தால் எங்களை ஆதரியுங்கள். 

'நாங்கள் நிச்சயமாக அவர்களுக்கு உதவக் காத்திருக்கிறோம். வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற பேதமின்றி அனைவரது பிரச்சினைகளையும் தீர்க்கும் திட்டம் எங்களிடம் இருக்கிறது. எம்மைப் பலப்படுத்துவதனூடாக, அந்த இலக்கை எம்மால் அடையமுடியும்” எனவும் அநுர தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .