
இந்திய அணியின் சகல துறை வீரர் ரவீந்தர் ஜடேஜாவிற்கு சர்வதேசக் கிரிக்கெட் சபை போட்டி ஊதியத்தின் 50 சதவீதத்தை தண்டமாக அறவிட்டுள்ளது. இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் அன்டேர்சன், இந்தியா வீரர் ரவீந்தர் ஜடேஜா ஆகியோர் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், அன்டர்சன் ஜடேஜாவை தள்ளி விட்டார். இந்த சம்பவம் நடுவர்களினால் கவனிக்கப்படவில்லை.
ஆனால் இந்திய அணியின் முகாமையாளர் இந்த சம்பவம் தொடர்பாக போட்டி மத்தியஸ்தரிடம் முறையிட்டார். இங்கிலாந்து இதற்க்கு தமது அதிருப்தியை வெளியிட்டு இருந்தது. பின்னர் இங்கிலாந்து அணியின் முகாமையாளர் ரவீந்தர் ஜடேஜா மீது முறையீட்டு செய்தார். இந்த முறையீட்டை விசாரணை செய்த போட்டி மத்தியஸ்தர் டேவிட் பூன், ரவீந்தர் ஜடேஜா முதற்படி தவறினை செய்து இருப்பதாகவும், ஒரு வருடத்திற்குள் இரண்டாவது தடவையாக இதே தவறை செய்து இருப்பதானால் போட்டி ஊதியத்தின் 50 சதவீதத்தை தண்டமாக அறவிடுவதாகவும் தீர்ப்பளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இந்த தண்டனைக்கு தனது கடும் ஆட்சேபனையை தெரிவித்துள்ள அதேவேளை மீள் முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஜேம்ஸ் அன்டேர்சனின் விசாரணை எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ள அதேவேளை அவருக்கு குறைந்தது இரண்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்படும என எதிர்பார்க்கப்படுகின்றது.