2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இந்தியன் சுப்பர் லீக்: இறுதிப் போட்டியில் சென்னையின் கா.கழகம்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தொழில்முறைக் கால்பந்தாட்டத் தொடரான இந்தியன் சுப்பர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு, சென்னையின் கால்பந்தாட்டக் கழகம் தகுதிபெற்றுள்ளது. நடப்புச் சம்பியன்களான அத்லெட்டிகோ டி கொல்கத்தாவைத் தோற்கடித்தே அவ்வணி, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

புதன்கிழமை இரவு இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது பகுதியில், 1-2 என்ற கோல் கணக்கில் சென்னையின் அணி தோல்வியடைந்த போதும், அதற்கு முன்னதாக இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியின் முதலாவது பகுதியில், 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றதன் காரணமாக, சென்னையின் கால்பந்தாட்டக் கழக அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது

கொல்கத்தாவிலுள்ள சோல்ட் லேக் விளையாட்டரங்கில், 68,340 இரசிகர்கள் சூழ இடம்பெற்ற இப்போட்டியில், நடப்புச் சம்பியன்கள், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

போட்டியின் 22ஆவது நிமிடத்தில், கொல்கத்தை அணியின் லேகிக், முதலாவது கோலைப் பெற்றுக் கொடுத்துத் தனது அணிக்கு முன்னிலை வழங்கியதோடு, முதலாவது பாதி முடிவிலும், அதேநிலை நீடித்தது.

இரண்டாவது பாதியின் பெரும்பாலான நேரத்தில் கோல்கள் பெறப்பட்டிருக்காத போதிலும், போட்டியின் 87ஆவது நிமிடத்தில், கொல்கத்தா அணியின் ஹ{மே பெற்ற கோலின் உதவியுடன், 2-0 என்ற முன்னிலையை கொல்கத்தா பெற்றது. எனினும், 90ஆவது நிமிடத்தில், சென்னை அணியின் ‡பிக்ரு, கோலொன்றைப் பெற்று, தோல்வியை 1-2 என்ற கணக்கில் குறைத்தார்.
இறுதியில், இரண்டு போட்டிகளினதும் கோல் கூட்டுத் தொகையின்படி, 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற சென்னை அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

முன்னதாக, டெல்லி டைனமோஸ் கால்பந்தாட்டக் கழகத்தை, 3-1 என்ற கணக்கில் வெற்றிகொண்ட கோவா கால்பந்தாட்டக் கழகம், இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தது.

இதன்படி, கோவா கால்பந்தாட்டக் கழகமும் சென்னையின் கால்பந்தாட்டக் கழகமும் மோதும் இறுதிப் போட்டி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. இப்போட்டி, ‡படோர்டாவிலுள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .