2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

இந்தியாவில் அதிக அன்பு கிடைக்கிறது

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 13 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்ச் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரில் பங்குபற்றுவதற்காக இந்தியாவை வந்தடைந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் ஷகிட் அப்ரிடி, இந்திய இரசிகர்கள் மீது பாராட்டுமழை பொழிந்துள்ளார். பாகிஸ்தானை விட இந்தியாவில் அதிக அன்பு கிடைப்பதாகத் தெரிவித்த ஷகிட் அப்ரிடி, கிரிக்கெட் விளையாடும் போது இந்தியாவில் மகிழ்வடைவதைப் போல மகிழ்வடையும் நாடுகள் அரிது எனக் குறிப்பிட்டார்.

பாதுகாப்புக் காரணங்களால், பாகிஸ்தான் அணியின் விஜயம் பின்தள்ளிப் போய்க் கொண்டிருந்த நிலையில், அது குறித்துக் கேட்கப்பட்டபோது, தொடர்ந்தும் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகவும் உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் பயிற்சிகளை மேற்கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் குழுநிலைப் போட்டிகளிலேயே சந்திக்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுப் பலமானதாகக் கருதப்படும் நிலையில் இந்திய அணியின் துடுப்பாட்டம் பலமாகக் கருதப்படுகிறது. எனவே, பாகிஸ்தானின் பந்துவீச்சுக்கும் இந்தியாவின் துடுப்பாட்டத்துக்குமிடையிலான போட்டியாகவா இது அமையுமெனக் கேட்கப்பட்டபோது, புன்னகைத்த அப்ரிடி, 'கடந்த 60 ஆண்டுகளாக அதே விடயம் தான் நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.

இத்தொடரிலுள்ள அனைத்துப் போட்டிகளுமே முக்கியமானவை எனத் தெரிவித்த அவர், இந்திய அணி சிறப்பாக விளையாடி வருவதாகவும், குறிப்பாக ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இரு அணிகளும் சந்தித்தபோது, விராத் கோலியும் யுவ்ராஜ் சிங்கும் சிறப்பாக விளையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஷொய்ப் மலிக், 'இந்தியாவிலிருப்பதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். எப்போதுமே எனக்கு அதிகமான அன்பு கிடைக்கிறது. எனது மனைவி, இந்தியாவைச் சேர்ந்தவர். இந்தியாவுக்கு நான் அடிக்கடி வருவதுண்டு. எப்பொதும் எனக்குப் பாதுகாப்புப் பிரச்சினை இருந்ததில்லை" எனக் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .