2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இலங்கைக்கு இன்னும் வாய்ப்புண்டு

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 27 , மு.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டி, நேற்று இடம்பெற்ற போதிலும், மழை காரணமாக முடிவுகள் பெறப்படாது கைவிடப்பட்டது.

இத்தொடரில் முதலாவது போட்டி, சமநிலையில் முடிவடைந்த நிலையில், 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. சுப்பர் தொடர் என அழைக்கப்படும் புள்ளிகளின் அடிப்படையில், இங்கிலாந்து அணிக்கு 14 புள்ளிகளும் இலங்கைக்கு 4 புள்ளிகளும் காணப்படுகின்றன. எனவே, சுப்பர் தொடரை வெல்லும் வாய்ப்பு, இலங்கைக்கு இல்லை. ஆனால், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை வெல்லும் வாய்ப்பு, அவ்வணிக்கு இன்னமும் உண்டு.

அதனை விட முக்கியமாக, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தரப்படுத்தலில் இங்கிலாந்து அணி 5ஆவது இடத்திலும் இலங்கை அணி 6ஆவது இடத்திலும் காணப்படுகின்றன. ஆனால், இரு அணிகளுக்குமிடையில் தசமப் புள்ளிகளே வித்தியாசமாகக் காணப்படுகின்றன. இதன்படி, அடுத்துவரும் இரண்டு போட்டிகளையும் இலங்கை வெல்லுமாயின், தரப்படுத்தலில் 5ஆவது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு, இலங்கைக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

3ஆவது ஒ.நா.ச.போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, டினேஷ் சந்திமாலின் 62 (77), அஞ்சலோ மத்தியூஸின் 56 (67), குசால் மென்டிஸின் 53 (66), உபுல் தரங்கவின் 40 (33) ஓட்டங்களின் துணையோடு, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி, 4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 16 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டதால், போட்டி கைவிடப்பட்டிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .