2025 ஜூன் 14, சனிக்கிழமை

கோலியிடம் கேப்டன்சியைக் கொடுத்திருப்பேன்: ரவி சாஸ்திரி

Editorial   / 2025 ஜூன் 12 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

விராட் கோலி ஓய்வு பெற்றது குறித்து ரவி சாஸ்திரி கருத்துக் கூறிய போது, முடிவு எடுக்கும் அதிகாரத்தில் நான் இருந்திருந்தால், ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகே விராட் கோலியிடம் கேப்டன்சியிடம் கொடுத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.

ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த பிறகு விராட் கோலியிடம் கேப்டன்சி அளித்திருக்க வேண்டும் என்று பலரும் அபிப்ராயப் பட்டனர். விராட் கோலியும் இங்கிலாந்து தொடரில் தன்னிடம் கேப்டன்சி கொடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடரலாம் என்று நினைத்திருந்ததாகவே செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படித் திட்டம் எதுவும் இல்லாததால், கம்பீருடன் சேர்ந்து பணியாற்ற கோலிக்கும் மனதில்லை என்பதால் கோலி ஓய்வு அறிவித்துவிட்டார் என்றே தெரிகிறது.

கோலியுடன் ரவி சாஸ்திரி 2017-21-ம் ஆண்டுகளில் பணியாற்றிய காலம் இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம் என்றே கூற வேண்டும். வெறும் ஐசிசி கோப்பை இல்லாததை மட்டும் வைத்து அதை எடைபோட முடியாது, ஏனெனில் ஐசிசி கோப்பைகளை வென்ற தோனி அயல்நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் அவமானகரமான தோல்விகளுக்கு இட்டுச் சென்றார். அந்த அவமானகரங்களிலிருந்து விராட் கோலி-ரவி சாஸ்திரி கூட்டணிதான் மீட்டது.

 

இந்நிலையில் விராட் கோலியின் ஓய்வு குறித்த விவகாரத்தை இன்னும் கொஞ்சம் நன்றாகக் கையாண்டிருக்கலாம் என்கிறார் ரவி சாஸ்திரி.

“ஒருவர் போன பிறகுதான் அவர் எத்தனை பெரிய வீரர் என்ற உணர்வு ஏற்படும். அவர் ஓய்வு பெற்றது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது, அதுவும் அவர் போன விதம் என்னை மேலும் வருத்தமடையச் செய்துள்ளது. இந்த விவகாரத்தை இன்னும் கொஞ்சம் நன்றாகக் கையாண்டிருக்கலாம்.

அவரிடம் இன்னும் கொஞ்சம் நன்றாக பேசியிருக்கலாம். நானாக இருந்திருந்தால் ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகே நேரடியாக அவரைக் கேப்டனாக்கியிருப்பேன். புள்ளி விவரங்கள் கோலியின் திறமைக்கு நியாயம் சேர்க்காது. டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தின் தூதராகச் செயல்பட்டார் விராட் கோலி.

குறிப்பாக வெளிநாடுகளில் அவர் ஆடிய விதமும் வழிநடத்திய விதமும் அசாதாரணமானது. அவருடன் பணியாற்றியதில் எனக்கு மகிழ்ச்சிதான், வெற்றிகளின் அங்கமாக இருந்ததும் மகிழ்ச்சிதான்.” என்றார் ரவி சாஸ்திரி.

அகார்க்கர் கூறுவது என்னவெனில் ஏப்ரலிலேயே அவர் முடித்துக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார் என்றார். மேலும் இதுதான் தனக்கு நேரம் என்று கோலி முடிவெடுத்து விட்டார் என்றும் கூறினார் அகார்க்கர். ஆனால் என்ன சொன்னாலும் கம்பீரின் வருகை கோலியின் டெஸ்ட் வாழ்க்கையை முன் கூட்டியே முடித்து விட்டது என்றே தெரிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .