2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சிம்பாப்வேயை வென்றது ஆப்கானிஸ்தான்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டியிலும், ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. இதன்படி, இத்தொடரில் 2-0 என்ற கணக்கில், ஆப்கானிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சிம்பாப்வே அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றது.

முதலாவது விக்கெட்டுக்காக 71 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, ஒரு கட்டத்தில், 39.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்டது. ஆனால், தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, 48.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 231 ஓட்டங்களுடன் காணப்பட்டது. இறுதி 7 பந்துகளில் பெறப்பட்ட 21 ஓட்டங்களின் துணையோடு அவ்வணி, 253 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் கிறெய்க் ஏர்வின் 73 (98), பீற்றர் மூர் 50 (51), ஹமில்டன் மஸகட்ஸா 47 (64) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் தவ்லட் ஸட்ரன் 3, மொஹமட் நபி 2, றொகான் பராக்ஸாய் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

254 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, முதலாவது விக்கெட்டுக்காக 17.5 ஓவர்களில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்ததோடு, 31.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 169 ஓட்டங்களுடன் காணப்பட்டது.

ஆனால், மொஹமட் நபி, ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 198 என்ற கடினமான நிலையை அடைந்தது. எனினும், இறுதிவரை ஆட்டமிழக்காது சிறப்பாக ஆடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மொஹமட் ஷஷாத், தனது நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டி சதத்தைப் பூர்த்தி செய்ததோடு, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

துடுப்பாட்டத்தில் மொஹமட் ஷஷாத், ஆட்டமிழக்காமல் 131 (133), மொஹமட் நபி 33 (36), நூர் அலி ஸட்ரன் 31 (52), மிர்வைஸ் அஷ்ரப் ஆட்டமிழக்காமல் 26 (27) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் எல்ட்டன் சிக்கம்புரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் நாயகனாக, மொஹமட் ஷஷாத் தெரிவானார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .